14.-இதுமுதல் ஐந்துகவிகள் - வீமனாற்போரிலடிபட்ட யானைகளை வருணிப்பன. மின்பொழிபடையுடைமேவலாருட லென்புகவிபங்களையெடுத்தெறிந்தவா தன்பெருந்துணைவனாந்தாமமாருதி வன்புடன்பறித்தெறிவரைகளென்னவே. |
(இ - ள்.) 'தன் பெரு துணைவன் ஆம் - தனது [வீமனது] பெரிய தமையனான, தாமம் மாருதி - ஒளியையுடைய வாயுகுமாரனான அநுமான், வன்புடன் பறித்து எறி - வலிமையோடு பேர்த்து வீசிய, வரைகள்- மலைகளாம்,' என்ன - என்றுஉவமை கூற,- மின் பொழி - மின்னல்போன்ற ஒளியைச் சொரிகிற,படை உடை - ஆயுதங்களையுடைய, மேவலார் - பகைவர்களது, உடல் என்பு -உடம்பிலுள்ள எலும்புகள், உக - சிந்தும்படி, இபங்களை - யானைகளை, (வீமன்),எடுத்து எறிந்த-, ஆ - விதம், (என்னே!) (எ - று,) முடிக்குஞ்சொல் வருவித்து முடிக்க. எடுத்தெறிந்தவாற்றை மேலிற்கவிகளிற் காண்க. இபம் - வடசொல். ஆ - ஆறு என்பதன் கடைக்குறை. அடுத்த தமையன் தருமனாதலின், அனுமானை 'பெருந்துணைவன்' என்றது; துணைவன் - உடன்பிறந்தவன்: பிராதா. அனுமான் கேசரியென்னும் வாநரராசனது மனைவியாகிய அஞ்சநாதேவியினிடம் வாயுதேவனால் முன்புபிறந்தவனாதலால், பின்பு வாயுவினாற் குந்தியினிடம் பிறந்த வீமனுக்கு அண்ணனாவன். தாமம்மாருதி - மாலையையுடைய அனுமா னென்றுமாம்; இந்திரன் இளமையில் இவனுக்கு ஒருபொற்றாமரைமாலை யளித்ததாகவும், பட்டாபிஷேககாலத்தில் இராமபிரான் திவ்வியமான ஒரு முத்தாரத்தைச் சீதாபிராட்டியைக்கொண்டு கொடுப்பித்ததாகவும், இராமாயண வரலாறு.தாமம் - இருபொருளிலும், வடசொல். மாருதி-தத்திதாந்தநாமம்: மருத்- வாயு.அனுமான் மலைகளைப் பறித்தெறிந்தது, இலங்கைக்குச்செல்லக் கடலில் அணைகட்டிய பொழுதி லென்க. வலிமையும் பருமையும் பற்றிய தற்குறிப்பேற்றவுவமையணி. பி-ம்: எறிந்தனன். (91) 15. | வெம்பிமேல்வருதிறல்வீமன்மும்மதத் தும்பிமேல்விழவிழத்தும்பிவீசுவ பம்பிமேலெறிதருபவனனாற்கட லம்பிமேல்விழவிழுமம்பிபோன்றவே. |
(இ - ள்.) வெம்பி - கோபங்கொண்டு, மேல் வரு - (பகைவர்) மேல்வருகிற,திறல் - பலத்தையுடைய, வீமன்-, மும் மதம் தும்பி மேல் விழ விழ - மூன்றுமதங்களையுடைய யானைகளின்மேல் அடுத்தடுத்து விழும்படி, வீசுவ - எடுத்துஎறிவனவான, தும்பி - யானைகள்,-பம்பி மேல் எறிதரு பவனனால் - நெருங்கிமேல்வீசுகிற வாயுவினால், (வீசியெறியப்பட்டு), கடல் - கடலிலே, அம்பிமேல்விழ விழும் - மரங்கலங்களின் மேல் அடுத்தடுத்து விழுகிற, அம்பி- மரக்கலங்களை,போன்ற - ஒத்தன; (எ-று.) |