2.-இருதிறத்தவரும் படைகளை வியூகமாக வகுத்தல். ஏலாவமரின்மூன்றாநாளிரண்டுபடையுந்திரண்டேறக் காலார்திண்டேர்வீடுமனும்வகுத்தான்கடுங்காருடயூகம் மேலாம்வென்றிப்பாண்டவர்தம்வெஞ்சேனையைக்கொண்டெஞ்சாமற் றோலாவர்த்தசந்த்ரப்பேர்வியூகம்வகுத்தான்றுளவோனே. |
(இ - ள்.) அமரின் மூன்றாம் நாள் - யுத்தத்தின் மூன்றாவது தினத்தில் இரண்டு படைஉம் - இருதிறத்துச்சேனைகளும், திரண்டு - (தம்மிற்) கூடி, ஏலா - எதிர்க்க, ஏற - (போர்க்களத்தே விரைந்தே) செல்ல,- கால் ஆர் திண் தேர் வீடுமன்உம் - சக்கரங்களமைந்த வலிய தேரையுடைய பீ்ஷ்மனும், கடு காருடயூகம் வகுத்தான் - பயங்கரமான கருடவியூகமாக(த் தன் சேனையை) அணிவகுத்தான்; துளவோன் - திருத்துழாய்மாலையை யுடைய கண்ணன்,- மேல் ஆம் வென்றி பாண்டவர்தம் வெம் சேனையை கொண்டு - மேன்மையான வெற்றியையுடைய பாண்டவர்களது உக்கிரமான சேனையைக்கொண்டு, எஞ்சாமல் - (வீடுமனுக்குக்) குறையாமல், தோலா அர்த்த சந்த்ரம் பேர் வியூகம் வகுத்தான் - தோல்வியடையாதஅர்த்தசந்திரமென்னும் பெயருடைய வியூகத்தை அமைத்தருளினான்; (எ-று.) கருடவடிவத்தின் வாயிடத்தில் வீடுமனும், கண்களில்துரோணனும் கிருதவர்மாவும், சிரசில் அசுவத்தாமனுங் கிருபனும், கழுத்தில் பூரிசிரவன் சலன் சல்லியன் பகதத்தன் ஜயத்திரதன் என்பவரும், புறத்தில் தம்பிமாருடன் துரியோதனனும், வாலில் விந்த அநுவிந்தரும், வலச்சிறகில் மாகதருங்கலிங்கரும், இடச்சிறகில் பிருகத்பலனும் காரூசரும் மற்றும் பலவீரர் சூழ இருந்தன ரென்றும்; அர்த்தசந்திரவடிவத்தினது தென்கோட்டில் பீமசேனனும், வடகோட்டில் அருச்சுனனோடிகூடிய கண்ணனும், மத்தியத்தில் விராடன் துருபதன் திருஷ்டகேது திருஷ்டத்யும்நன் சிகண்டி சாத்தியகி உபபாண்டவர் அபிமந்யு கடோத்கசன் என்னும்இவரோடு யுதிட்டிரனும் மற்றும்பலவீரர் சூழ இருந்தனரென்றும் வியாசபாரதத்திற்கூறியுள்ளது. கருடனது வடிவம்போலப் படைவகுக்கப்படுவது காருடவியூகமும்,பாதிச் சந்திரனது வடிவம் போலப்படைவகுக்கப்படுவது அர்த்தசந்திரவியூகமுமாம்.கருட சம்பந்தமானது - காருடம்; தத்திதாந்தம். யூகம் - வடசொற்றிரிபு.திருவள்ளுவர் "கால்வல் நெடுந்தேர்" என்றாற்போல, 'காலார்திண்டேர்' என்றார்;இனி, இத்தொடருக்கு - (வேகத்திற்) காற்றையொத்த வலியதேரென்றும் உரைக்கலாம்.படைவகுப்பது சேனாபதியின் தொழிலாக இருக்கவும் ஸ்ரீகிருஷ்ணனை அர்த்தசந்திரவியூகம்வகுத்தானென்றது, அவனது திருவுள்ளத்தையறிந்தே சேனாபதிவியூகம்வகுத்தமையைக் குறிப்பிக்கும். (111) 3.-இருதிறத்துச்சேனைகளும் பொரத்தொடங்குகையில், பலபோர்ப்பறைகளும் முழங்குதல். போரேதொடங்கியிருபடையும் புகுந்தபொழுதிலுகந்தொலைத்த காரேதொடங்கிக்கார்கோள்வெங்கடுங்கால்கலிகொண்டார்ப்பனபோல் |
|