58. - வீமன் அக்கொன்றைமாலையைக்கடவாது வணங்கிச்செல்லுதல். என்றிதழிமாலைதனை, நின்றுதொழுதன்பினொடு சென்றனனிடிம்பனைமுன், வென்றதிறல்வீமனுமே. |
(இ-ள்,) இடிம்பனை - இடிம்பாசுரனை, முன் வென்ற-முன்பு சயித்த [கொன்ற], திறல்-வலிமையையுடைய, வீமனும்-, என்று- என்றுசொல்லி, இதழி மாலைதனை அன்பினொடு நின்று தொழுது- கொன்றைப்பூ மாலையைப் பக்தியோடு எழுந்து நமஸ்கரித்து, சென்றனன் - மீண்டுசென்றான்; (எ - று.) தேரில்வீரர்வீற்றிருத்தல் இயல்பாதலின், 'நின்றுதொழுது' எனவேண்டிற்று. (196) 59.- மாலைகடவாத அபிமன் பகைநடுவில் உக்கிரத்தேசொடு நிற்றல். மாலைகடவாமல்வரு, பாலனரசர்க்குநடு வேலைவடவைக்கனலி, போலொளிரநின்றனனே. |
(இ-ள்.) மாலை கடவாமல் - கொன்றைமாலையைக் கடக்க மாட்டாமல், வரு- மீண்டுவந்த, பாலன் இளையவனான அபிமன், அரசர்க்கு நடு - பகையரசர்களுக்கு மத்தியில், வேலை வடவை கனலி போல் - கடலின்மத்தியில் படபாமுகாக்கினிபோல, ஒளிர நின்றனன்- விளக்கமாக நிலைநின்றான்; (எ-று) பகையரசர் குழாத்தினிடையில் அகப்பட்டுள்ள அபிமனொருவன் தானே அக்கூட்டமுழுவதையுஞ் செருக்கடக்கவல்லனாந் தன்மைக்கும், தேககாந்திமிகுதிக்கும், கடலிடையுள்ள வடவையனலை உவமைகூறினார். (197) 60.- இரண்டுகவிகள் - அர்த்தரதரான எதிரிகள் அம்புமழை பொழிதலைக்கூறும். யாளியெனநின்றவய, மீளியைவளைந்துபல வாளிகள்பொழிந்தனர்கள், கூளிகண்டஞ்செயவே. |
(இ-ள்.) யாளி என நின்ற-யாளியென்னும் மிருகவிசேஷம்போல (மிகவலியனாய்) நின்ற, வய மீளியை - வெற்றியையுடைய வீரனான அபிமனை, (பகையரசர்கள்), வளைந்து-சூழ்ந்துகொண்டு, கூளிகள் நடம் செய-பேய்கள் கூத்தாட,பல வாளிகள் - அநேக பாணங்களை, பொழிந்தனர்கள்-; (எ - று.) அபிமனை 'யாளி' என்றதற்கு ஏற்ப, பகையரசரை யானையென்னாமையால், ஏகதேசவுருவகம். பி-ம்: மீளிமிசைவந்துபல. (198) 61. | பற்பலருமர்த்தரதர், விற்பலவணக்கியெதிர் சொற்பொலியப்பகழி, சிற்சில தொடுத்தனரே. |
(இ - ள்.) பல் பலர்உம் அர்த்தரதர் - மிகப்பலரான அர்த்தரத வீரர்கள்; வில்பல வணக்கி-(தம்தம்) விற்கள் பலவற்றை வளைத்து, எதிர் - அபிமனெதிரில், சில்சில - சிலசிலவாகிய, சொல் பொலி வய பகழி - புகழ் விளங்குகிற வலிய அம்புகளை, தொடுத்தனர் - பிரயோகித்தார்கள்; (எ- று.) (199) |