66. - இதுவும், மேற்கவியும் - குளகம்: துரியோதனன் தம்பிமார் பொருது தோற்றமை கூறும். இரவிமகனேகுதலு, மரவதுசன்றுணைவர் விரவினர் விளைந்துதம. புரவியணிதேர்படவே. |
(இ-ள்.) (இங்ஙனம் தோற்று), இரவி மகன் ஏகுதலும்- சூரியபுத்திரனான கர்ணன் சென்ற வளவில், -அரவ துவசன் துணைவர்- பாம்புக்கொடியனான துரியோதனனது தம்பிமார், விளைந்து விரவினர் - மிகுயாகச் சூழ்ந்து,-தம புரவி அணி தேர் பட-தங்களுடைய குதிரைகள் பூட்டிய தேர் அழிய,-(எ-று.)- "கணைதைக்க முதுகிட்டனர்" என அடுத்த கவியில் முடியும. 'அரவதுவசன்'- சந்தவின்பம் நோக்கியஇயல்பு. (204) 67. | விட்டவிரதத்தினொடு, வட்டவரிவிற்குரிசி றொட்டகணைதைக்கவவர், கெட்டுமுதுகிட்டனரே. |
(இ-ள்.) வட்டம் வரி வில் குரிசில் - வளைவான கட்டமைந்த வில்லையுடைய அபிமன், தொட்ட - தொடுத்த, கணை - அம்புகள், தைக்க - தைத்தலால், அவர்- அத்துரியோதனன் தம்பிமார், கெட்டு- தோற்று, விட்ட இரதத்தினொடு - விட்ட தேருடனே (தேரை நீங்கியவர்களாய்), முதுகு இட்டனர்-புறங்கொடுத்தார்கள்;(எ-று.) மோனைக்குப் பொருத்தமாக, விட்ட விரதத்தினொடு எனப் பிரித்து, தாம் வென்றே மீளுவோ மென்னும் விரதத்தை விட்டவர்களாய் எனினுமாம்: ஒடு- மூன்றனுருபு, அடைமொழிப்பொருளது, வட்டம் - வருத்தம்: வடசொல். (205) 68. - மூன்றுகவிகள் - துரோணனும் குமாரனும் அபிமனையெதிர்த்துத் தோற்றவை கூறும். சுகனிகர்துரோணனொடு, மகன்விசயன்மைந்தனெதிர் முகனமரில்வந்துபுர, தகனனெனநின்றனரே. |
(இ-ள்.) சுகன் நிகர் துரோணனொடு-சுகமுனிவனை யொத்த துரோணனும், மகன்-(அவன்) மகனான அசுவத்தாமனும், விசயன் மைந்தன் எதிர் - அருச்சுனபுத்திரனான அபிமந்யுவின் எதிரில், முகன் அமரில்-முற்போரில், புரதகனன்என-திரிபுரமெரித்த பரமசிவன் போல, வந்து நின்றனர்,-(எ - று.) சுகன் - வேதவியாச புத்திரன்; அவ்வியாசபகவானினும் மேம்பட்ட அறிவொழுக்கங்களையும்; வைராக்கியத்தையும் உடையவன்: பகவானது அமிசமானவன்; பரமபாகவதர்களில் ஒருத்தன்; பாகவத புராண சரித்திரத்தைப் பரீக்ஷித்து மகாராசனுக்குக் கூறியவன்: கிளியினிடமாகப் பிறந்ததனாலும். கிளிமூக்கையுடைமையாலும், சுகனெனப் பெயர். இவனைத் துரோணனுக்கு உவமைகூறினது,ஞானசீலங்களின் மேன்மைக்கு. எதிர் முகன்-எதிர்முகத்தில் என்றுமாம்.புரதகனனுவமை, உக்கிரத்தன்மையில். (206) 69. | நிற்குநிலைநின்றுறுவரி, விற்களும்வளைத்தா ருற்கைகளினூறுபல, பொற்கணைதொடுத்தார். |
|