பக்கம் எண் :

பதினோராம் போர்ச்சருக்கம்13

பாகனை - சாரதியையும், சிலையை- வில்லையும், பொன் தேர் பதாகையை -
அழகிய தேரின் கொடியையும், பரியை - (நான்கு) குதிரைகளையும், வீழ்த்தி -
அழித்துத்தள்ளி, ஆகம் உற்று உருவ - (அச்சல்லியன்) மார்பில் பொருந்தி
ஊடுருவிச்செல்லும்படி, எய்தான் - பிரயோகித்தான்; (அதனால்), மாறா போகம்
மத்திரத்தார் கோஉம்- நீங்காத செல்வ அனுபவத்தையுடைய மத்திரதேசத்தார்க்கு
அரசனான சல்லியனும், புறம்தந்து போகல் உற்றான்- முதுகுகொடுத்துச்
செல்லத்தொடங்கினான்;  ( எ -று.)

     ஒரம்புஏவிப் பாகனையும், இரண்டு அம்புஏவிச் சிலையையும், மூன்று
அம்புஏவித் தேர்ப்பதாகையையும், நாலம்புஏவித் தேர்ப்பரியையும் வீழ்த்தி, ஐந்து
அம்பு ஆகம்உற்று உருவுமாறு எய்தானென முறைநிரனிறைப்பொருள் கோளாக
உரைத்தார். மோகரித்து- கோபத்தோடு ஆரவாரித்து என்றுமாம். ஆகம் முற்று
உருவ எனப்பிரிந்து - உடம்புமுழுவதுந் துளைக்க எனினுமாம் வில் வித்தையிலும்
பராக்கிரமத்திலும் நகுலனுக்கு உள்ள சிறப்பு விளங்க, 'அருச்சுனனிளவல்' என்றார்.
போகம் - மத்திரத்தார்க்காவது கோவுக்காவது அடைமொழியாக்கொள்ளின்
இன்பமனுபவித்தலும், மத்திரத்துக்கு அடைமொழியாக்கொள்ளின் பயிர்விளைவுமாம்.
போகம், மத்ரம் - வடசொற்கள்.                                    (15)

16.- கர்ணனும் விராடனும் பொருதல்.

சையமோரிரண்டுதம்மிற்பொருதெனத்தடந்தேருந்தி
வெய்யவன்மகனும்வீரவிராடனுமெதிர்ந்தவேலை
வையகங்கம்பமுற்றுமாசுணநடுங்கமேன்மே
லெய்யும்வெங்கணையால்வானத்தெல்லையுமறைந்ததன்றே.

    (இ-ள்.) ஓர் இரண்டு சையம் - ஒப்பற்ற இரண்டுமலைகள், தம்மில் பொருது
என -தமக்குள் எதிர்த்துப் போர்செய்தாற்போல, தட தேர் உந்தி - பெரிய
(தம்தம்)தேரைச் செலுத்தி, வெய்யவன் மகன்உம்- சூரியபுத்திரனான கர்ணனும், வீர
வீராடன்உம் - வீரத் தன்மையுடைய விராடராசனும், எதிர்ந்த வேலை- (தம்மில்)
எதிரிட்ட பொழுதில்,- வையகம் கம்பம் உற்று - (அவ்வதிர்ச்சியால்) பூமி
நடுக்கமடைந்து, மாசுணம் நடுங்க - (அப்பூமியைத் தாங்கும் ஆதிசேஷனாகிய)
பெரும்பாம்பும் அசைய, மேல் மேல் எய்யும் வெம் கணையால் - மேன்மேல்
இடைவிடாது தொடுக்கிற கொடிய அம்புகளால், வானத்து எல்லைஉம் மறைந்தது -
ஆகாயத்தினிடமும் மறைபட்டது; (எ-று.) - அன்றே - ஈற்றசை; தேற்றமுமாம்:
அப்பொழுதே என்றுமாம்.

     சையம்- ஸஹ்யமென்பதன்விகாரம் : குடகுமலைக்குப் பேராகிய ஸஹ்யமென்ற
சிறப்புப்பெயர் மலையென்ற பொதுப்பொருளைத் தந்ததென்க; இனி, சைல மென்னும்
வடசொல்லின் விகாரமென்றலும் ஒன்று. மலைகள் - தேருக்காயினும், வீரர்க்காயினும்
உவமம். பொருதென- பொருதாலென என எச்சத்திரிபாகவாவது, பொருததென எனத்
தொழிற்பெயர் விகாரமாகவாவது கொள்ளத்தக்கது. மேல்மேல் - அடுக்கு,
இடைவிடாமை பற்றியது.                                           (16)