(இ-ள்.) (இவ்வாறு), அபிமன்-, வாள் அமரில்-ஆயுதங்களைக் கொண்டு செய்யும்போரில். வென்று-(அவர்களைச்) சயித்து, நின்ற-, நிலை-உறுதிநிலையை, கண்டுஏ- பார்த்தமாத்திரத்தாலே, மர இரதர்-மகாரதவீரர் (பலர்), ஒன்றுபட- ஒருசேர,உடைந்து சென்றனர்-அழிந்துபோயினர்; (எ - று.) வாளமர் கொடியபோர் எனவுமாம். மோனைக்கும் இடத்திற்கும் ஏற்ப, 'வில்லமரில்'எனப் பாடங்கொள்ளுதல், சிறக்கும். (215) 78. கவிக்கூற்று: அபிமனாலடிபட்டவர் மிகப்பலரெனல். கெட்டவர்க ளின்னரென, முட்டவுரைக் கொண்ணா பட்டவரநேகரிவன், விட்டகணையாலே. |
(இ-ள்.) இவன் விட்ட கணையால்ஏ - அபிமன் எய்த அம்புகளாலே, பட்டவர்- இறந்தவர், அநேகர்-பலர்; கெட்டவர்கள்- தோற்று ஒழிந்தவர்கள், இன்னர் என - இவ்வளவின ரென்று முட்ட உரைக்க ஒண்ணா-முழுவதும் சொல்லமுடியாது; (எ-று.) உரைக்க என்னும் வினையெச்சமே தொழிற்பெயர்ப்பொருளதாய், ஒண்ணா(து) என்னும் ஒருமைமுற்றுக்கு எழுவாயாம்: இனி, 'உரைக்கொண்ணார்' எனப்பாடமிருப்பின்நலம். கெட்டார்-காணாது போனவரொனினுமாம். (216) வேறு.
79. - இரண்டுகவிகள் - சக்கரவியூகத்தைப்பிளந்துநடுநிற்கும் அபிமனைக் குறித்த வருணனை. முற்சக்ரயூகம் பிளப்புண்டபின் முன்பி னோடும் பொற்சக்ரமென்ன வெறித்தாமம்பொலிந்து சூழ விற்சக் ரமாக மணித்தேரினின் மீது நிற்பான் கற்சக் ரமாக நடுவூர்செங் கதிரொ டொத்தான். |
(இ-ள்.) சக்ரயூகம் - (துரியோதனனது) சக்ரவியூகம். முன் பிளப்புண்டபின்-(தன் அம்புகளால்) முன்னிடம் பிளக்கப்பட்ட பின்பு, முன்பினோடுஉம்- வலிமையுடனே, வெறி தாமம்-வாசனையையுடைய வெற்றிமாலை, பொன் சக்கரம் என்ன- பொன்வட்டம் போல, பொலிந்து சூழ-(தன்கழுத்தைச்) சுற்றிலும் விளங்க, வில்சக்ரம் ஆக-(கையிற்பிடித்த) வில் வட்டமாக வளைந்திருக்க, மணி தேரின்மீது- மணிகள்கட்டிய தேரின்மேல், நிற்பான்-(சக்கரவியூகத்தின் மத்தியில் தனியே) நின்றுவிளங்குபவனான அபிமன், கல் சக்ரம் ஆக சக்கரவாளமலை சூழ்ந்துநிற்க, நடுஊர்- (அதன்) நடுவிடத்தில் [ஆகாயத்திற்] செல்லுகிற, செம் கதிரொடு - சிவந்தகிரணங்களையுடைய சூரியனை, ஒத்தான்- எ - று.) பொற்சக்ரம் - வட்டமாகிய பொன்னாரம். 'வெறித்தாமம் பொலிந்து சூழ' என்பதற்கு- பரிமளமுடைய (சிவனது) கொன்றைப்பூமாலை (தன்னைச்) சுற்றிலும் விளங்கஎன்றும் உரைக்கலாம். கதிரொடுஒத்தான்-மூன்றாமுருபு இரண்டாம்வேற்றுமைக்குஉரிய ஒப்புப்பொருளில் வந்தது; உருபுமயக்கம். பி-ம்: மொய்ம்பினோடும். எறிதாமம்.கற்சக்ரநாகம். |