அந்தநாகத்தைக் கர்ணனுக்கு உவமைகூறினது, கறுவுடைமைக்கும் கொடுமைக்கும் என்க. முன்னிரண்டடி-அநுவாதமென்னலாம். 104.- கர்ணனம்புகளால் அபிமன்யுவின் தேர்முதலியன அழிதல். விற்குனத்திரவிமைந்தன்விடும்விடுங்கணைகள்பட்டுப் பற்குனன்மைந்தன்றிண்டேர்ப்பரிகளும்பாகும்பட்டு முற்குனித்தெய்தவில்லுமுரிந்ததுமூரித்தேரு நிற்குநன்னிலைமைகுன்றிநேமியுநெரிந்ததன்றே. |
(இ-ள்.) (இவ்வாறு), இரவி மைந்தன் - கர்ணன், வில் குனித்து - வில்லை வளைத்து, விடும் விடும் - மிகுதியாகச் சொரிகிற, கணைகள் - அம்புகள், பட்டு - தைத்ததனால், பற்குனன் மைந்தன் - அருச்சுனபுத்திரனான அபிமனது, திண் தேர் பரிகள்உம்-வலிய தேரிற்பூட்டிய குதிரைகளும், பாகுஉம் - சாரதியும், பட்டு - அழிய, முன் குனித்து எய்த வில்உம்- முன்னே வளைத்து அம்பெய்து கொண்டிருந்த(அவன்கை) வில்லும், முரிந்தது - ஒடிந்தது; மூரிதேர் உம்- வலிமையையுடையதேரும், நிற்கும் நல் நிலைமை குன்றி நிற்றற்குரிய நல்ல உறுதிநிலைமைகுறைபட்டு,நேமிஉம் நெரிந்தது- சக்கரங்களுஞ் சிதையப்பெற்றது; (எ - று.)-அன்று, ஏ -ஈற்றசை; அப்பொழுதே யெனினுமாம். பட்டு என்பது - இரண்டிடத்திலும், பட வென்னுஞ் செயவெ னெச்சத்தின் திரிபு: முன்னே காரணப்பொருளதும், பின்னேஉடனிகழ்ச்சிக்பொருளதும் எனக் காண்க. அபிமன்தேர் கோங்குமரக் கொடியையுடைய தென்றும் அவன்தேர்ப்பாகன் சுமித்திர னென்றும் வடநூலால் தெரிகிறது. தேர்நேமி நெரிந்தது - சினைப்பெயர் முதல்வினையைக்கொண்ட வழுவமைதி. (242) 105.- தேரையிழந்த அபிமன் வாளேந்தித் தரையி லிழிதல். தன்னையத்தனயன்செய்ததாழ்வெலாந்தனயன்றன்னைப் பின்னையத்தந்தைசெய்துபின்னிடாதசைந்துநிற்ப முன்னையபுரவித்தேருமொத்தவெஞ்சிலையுமின்றி மின்னையொத்திலங்கும்வாளோடவனிமேல்விரைந்துபாய்ந்தான். |
(இ-ள்.) தன்னை அதனயன் செய்த தாழ்வு எலாம்-(தந்தையாகிய) தன்னைப் பிள்ளையாகிய அவ்வபிமன் (முன்னே) செய்த தோல்விகளையெல்லாம், பின்னை- பின்பு, அ தந்தை - அந்தத்தந்தையாகிய கர்ணன், தனயன் தன்னை செய்து - பிள்ளையாகிய அவ்வபிமனை (அடைய)ச் செய்து, பின் இடாது-(முன்போலப்) புறங்கொடாமல், அசைந்துநிற்ப-மகிழ்ச்சிகொண்டு முன்நிற்க, (அபிமன்), முன்னைய புரவி தேர்உம் மொய்த்த வெம் சிலைஉம் இன்றி - முன் இருந்த குதிரைபூண்ட தேரும் வலிமையுடைய கொடிய வில்லும் இல்லாமல், மின்னை ஒத்து இலங்கும் வாளோடு-மின்னலைப் போன்று விளங்குகிற வாளுடனே, அவனிமேல் - தரையில், விரைந்து பாய்ந்தான் - துரிதமாய்க் குதித்து இழிந்தான்; (எ - று.) தன்னை அத்தனயன் செய்த தாழ்வு - தேரையும், வில்லையும் இழத்தல்; கீழ்101, 102,103,-ஆங் கவிகளைக் காண்க. 'தனயன் |