பக்கம் எண் :

152பாரதம்துரோண பருவம்

எளிதில் கவர்ந்துகொள்ளுதல் தோன்ற. 'உயிர்பருகும்' என்றார், துஷ்டஜந்துக்கள்
பெரும்பாலும் வாய்திறந்துகொண்டேயிருத்தல், இயல்பு, உலாவருதல்-புறப்பட்டு
உல்லாசமாக வெளி வருதல். பாம்பு- நீண்ட அபிமன் கைக்கும், நாக்கு-
வாளுக்கும்உவமை. கைக்குக் கடகம், இயற்கையடைமொழி.            (251)

114. - ஒற்றைக்கையோடு பொர நிற்கும் அபிமன் வருணனை.

இருதோள்களினொருதோண்முனியிகல்வாளியின்விழவு
மொருதோள்கொடுபொரநிற்பதொர்மதவாரணமொத்தான்
கருதோகையொடளகாபதிதனயோர்கதிபெறமுன்
மருதோரடியிணைசாடியமாயன்றிருமருகன்.

     (இ-ள்.) அளகாபதி தனயோர் - அளகாபுரிக்கு அரசானான குபேரனுக்குப்
புத்திரராகிய (நளகூபரன் மணிக்கிரீவன் என்னும்) இருவரும், கருது ஒகையொடு-
மனத்துக்கொண்ட மகிழ்ச்சியுடனே, கதி பெற - நற்கதியை யடையும்படி, முன் -
முன்பு [இளமையில்], மருது-(இரட்டை) மருதமரங்களை, ஓர் இணை அடி சாடிய-
ஒப்பற்ற உபயபாதத்தால் முறித்துத்தள்ளின, மாயன்- ஆச்சரிய சக்தியையுடைய
கண்ணனுக்கு, திரு மருகன்-சிறந்த மருமகனான அபிமன்,- இருதோள்களின்-(தனது)
இரண்டுதோள்களில், ஒரு தோள்-, முனி இகல் வாளியின் - துரோணனது வலிய
அம்பினால், விழஉம்- துணிந்துவிழவும், (சலியாமல்),-ஒரு தோள் கொடு-
ஒருகையைக்கொண்டு, பொர-போர்செய்ய, நிற்பது-நிற்பதான, ஓர் மதம்
வாரணம் - ஒருமதயானையை, ஒத்தான்-;(எ-று.)-துதிக்கையொன்றே யுடைமையின்,
யானையைஉவமை கூறினார். தனயோர்-தநயர்;விகாரம்.                (252)

115.- தேருருளையைச் சக்கரப்படையாகக்கொண்டு அபிமன் பொருதல்.

தன்மாதுலன்முதனாளுரைதருமந்திரமொன்றா
லென்மாமணியுருளொள்றினையெறிசக்கரமாக்கிக்
கன்மாரிவிலக்குங்கிரியெனமேல்வருகருதார்
வின்மாரிவிலக்காவதுகொடியாரையும்வீழ்த்தான்.

     (இ-ள்.) (பின்பு அபிமன்), தன் மாதுலன் - தனக்கு மாமனான கண்ணன்,
முதல்நாள்- முன்னொருகாலத்தில், உரைதரு- (தனக்கு) உபதேசித்தருளிய, மந்திரம்
ஒன்றால் -ஒருமந்திரத்தால், எல் மா மணி உருள் ஒன்றினை - பிரகாசத்தையுடைய
சிறந்தஇரத்தினம் பதித்த (தன்) தேர்சக்கர மொன்றையே, எறி சக்கரம் ஆக்கி -
(பகைவர்களைத்) துணிக்கிற சக்கராயுதமாகச் செய்து, அதுகொடு-அந்த ஆயுதத்தால்,
கல் மாரி விலக்கும் கிரிஎன-(இந்திரன்பொழிவித்த) கல்மழையைத்தடுத்திட்ட
கோவர்த்தனமலைபோல, மேல் வரு கருதார் வில்மாரி விலக்கா-தன்மேல்(எதிர்த்து)
வருகிற பகைவர்களின் வில்லினாற் சொரிந்த அம்புமழையைத் தடுத்து, யாரைஉம்
வீழ்த்தான் - எல்லோரையும் அழித்துத்தள்ளினான்:

     'இவ்வகை துரோணாசாரியனால் தோளறுப்புண்டு மற்று அதற்குத் துளங்காது
மானத்தேரின்மணியாழியை மற்றைக்கையாற்