பக்கம் எண் :

16பாரதம்துரோண பருவம்

உந்தஉம் -(மிக்க விசையாய்ச்) செலுத்தப்படவும், பெய் கணை - (தம்மில் ஒருவரால்)
சொரியப்பட்ட அம்பு, கணையுடன் பின்னி -(மற்றொருவரால் விடப்பட்ட) அம்பொடு
சிக்கி, முன் வீழஉம் - எதிரில் விழுந்திடவும்,- எய் கணை - தொடுக்கிற
அம்புகளையுடைய [அம்புத்தொடுக்கவல்ல என்றபடி], அபிமன்உம் - அபிமந்யுவும்,
இலக்கணகுமரன்உம்-லக்ஷணகுமாரனும், கை கணை தர - வலக்கை அம்பு
(எடுத்துக்) கொடுக்க, நெடு கார்முகம் வாங்கினார் - நீண்ட (தம்) வில்லை
வளைத்துப் போர்செய்தார்கள்; ( எ -று.)

     முதலடியில், கணை என்பதன் இறுதியில் உயர்வுசிறப்பும்மை விகாரத்தால்
தொக்கது. அபிமன், இலக்கணகுமரன் - வடசொல் திரிபுகள். அபிமந்யு என்னும்
வடமொழிப்பெயர், மிக்ககோபமுடையா னென்னும் பொருளுடையது. இப்பாட்டில்
அடிதோறும் ' கணை' என வந்த சொல் ஒருபொருளையே குறித்தலால்,
சொற்பொருட்பின்வருநிலை. பி - ம்: தேருந்தியும்.                  (20)

21.-இன்சிலைமதனவேளெனவருங்குமரனவ்
வன்சிலைவில்லிதான்மகிழ்வுறுங்குமரனை
நன்சிலைநடுவுறாநாணொடுந்துணியவே
தன்சிலைகொண்டுவெஞ்சாயகமேவினான்.

     (இ-ள்.) (அப்பொழுது), இன் - இனிமையான, சிலை-(கரும்பு) வில்லையுடைய,
மதனன் வேள் என - மன்மதன்போல, வரும் - வருகிற, குமரன் - லக்ஷணகுமாரன்,
அ- அந்த, வன் சிலை வில்லி தான் மகிழ்வுஉறும் - வலிய (மேரு) மலையை
வில்லாகவுடைய சிவபிரான் மகிழ்ச்சிமிகுதற்குக் காரணமான, குமாரனை -
அருச்சுனபுத்திரனான அபிமந்யுவை, நல் சிலை - (அவனது) சிறந்த வில்,
நாணொடுஉம்- நாணியுடனே, நடு உற துணியஏ - நடுவிலே பொருந்தத் துணி
படும்படியாகவே, தன் சிலை கொண்டு - தனதுவில்லினால், வெம் சாயகம் ஏவினான்
- கொடிய அம்புகளைச் செலுத்தி யெதிர்த்தான்; ( எ - று.)

     இன்சிலை - சுவையினிய வில்; எனவே, கரும்பாயிற்று. முருக வேளை
விலக்குதற்கு, 'மதனவேள்' என்றார். மதனன் - ஆண் பெண்களை மதமடையச்
செய்கிறவன்: வடசொல், லக்ஷணகுமாரனென்பது - அழகிய மைந்தனெனப்
பொருள்படுதலால், அப்பெயரை 'மதனவேளெனவருங் குமரன்' எனக் குறித்தார்.
அக்குமரன் என இயையும். அவ் வன்சிலைவில்லி யென இயைத்தால், அ -
உலகறிசுட்டாம். அருச்சுனன்போலவே அபிமன்யுவும் சிறந்த சிவபக்தனாய்
அப்பிரானதுதிருவள்ளத்தை உவக்கச்செய்பவ னாதலால், 'வன்சிலை வில்லிதான்
மகிழ்வுறுங் குமரன்' என்றார்; அத்தன்மையை இச்சருக்கத்தின் 23- ஆம் கவியிலும்,
பதின்மூன்றாம்போர்ச்சருக்கத்தின் 50- ஆம் கவியிலுங் காண்க. சிவபிரான்
மகாமேருமலையை வில்லாகக்கொண்டது, திரிபுரசங்காரகாலத்தி லென அறிக.
'சாயகம்ஏவினான்' என்பது- எதிர்த்தான் என ஒருசொல்மாத்திரமாகி, 'குமாரனை
என்றசெயப்படுபொருளுக்கு முடிக்குஞ் சொல்லாம்; இனி, குமரனது சிலை யென
உருபுமயக்கமாக உரைப்பினும் அமையும் பி-ம்: நடுவற.                  (21)