விளங்குகிற, மேனி - திருமேனியையும், வண் துழாய் அலங்கல்- அழகிய திருத்துழாய் மாலையையு முடைய, மூர்த்தி - கடவுளாகிய கண்ணன்,-பாசறை அணுகும் முன்னம்-படைவீட்டைச் சமீபித்தற்கு முன்னமே, ஆசு அறு வரி வில் காளை - குற்றமில்லாத கட்டமைந்த வில்லையுடைய வீரனான அருச்சுனனது, அம் கைஉம்- அழகிய கைகளையும், அருகு நீங்கா-சமீபத்தை விட்டுநீங்காத, தேசு உறு படைகள் யாஉம் - ஒளி மிக்க ஆயுதங்களெல்லாவற்றையும், தீமை தீர்ப்பான்- (அவற்றாலாகுந்) தீமையை ஒழிக்கும்பொருட்டு, ஒழித்தனன் - தனியே பிரித்துவிட்டான்: (எ - று.) அருச்சுனன் பாசறையையணுகி அங்கு அபிமன்மரணத்தை அறியும் பொழுது கையில் ஏதேனும் ஆயுதமுடையனாயிருந்தால், புத்திரசோகத்தைப் பொறுக்கமாட்டாமல் அவ்வாயுதத்தைக் கொண்டு தன்னைக் கொலைசெய்து கொள்ளக் கூடுமென்று மூன் சாக்கிரதையாகக் கண்ணன் அவன் கைகளில் எந்த- ஆயுதமுமில்லாதபடி ஒழித்தருளினனென்பதாம். எம்பெருமானது கரிய திருமேனி பசியதாமரையிலைகள் போலவும், அத்திருமேனியிலுள்ள கண் கை கால் வாய் உந்திஎன்னும் அவயவங்கள் இடையிடையிற்பூத்த செந்தாமரை மலர்கள்போலவும் இருத்தலால், 'பாசடைப்பதுமம்போல மாசற விளங்குமேனி' என்றார். பசுமை+அடை=பாசடை; பண்புப்பெயர் ஈறு போய் ஆதிநீண்டது. தீமைதீர்ப்பான்- தன்னைச் சரணமடைந்தவர்களது துன்பங்களையெல்லாம் தானே வலியத்தீர்த்தருளுபவனெனக் கண்ணனுக்கு அடைமொழியாகவுமாம். (292) 155.-'இந்தப்பேரொலி என்?' என்று அருச்சுனன் வினவ, ஸ்ரீக்ருஷ்ணன் கண்ணீர்வடித்தல். அங்கையார்த்தனைத்துளோருமரற்றுபேரரவங்கேட்டுக் கங்கையம்பழனநாடன்கண்ணனைவணங்கிநோக்கி யிங்கயலெழுந்தகோடம்யாதெனயாதுஞ்சொல்லான் பங்கயநெடுங்கண்சேப்பநித்திலம்பரப்பினானே. |
(இ-ள்.) அனைத்து உளோர்உம்-(பாசறையிலுள்ளவர்) எல்லோரும், அம் கை ஆர்த்து - அழகிய கைகளால் அடித்துக் கொண்டு, அரற்று-கதறுகிற, பேர் அரவம்- பெரிய ஆரவாரத்தை, கேட்டு-, கங்கை அம் பழனம் நாடன் - கங்காநதிபாய்கிற அழகிய கழனிகளைக்கொண்ட குருநாட்டையுடைய அருச்சுனன், கண்ணனை வணங்கி நோக்கி-, இங்கு அயல் எழுந்த கோடம் யாது என- 'இப்பொழுது சமீபத்திலுண்டான ஆரவாரம் என்ன? என்று கேட்க, (அதற்குக் கண்ணன்), யாதுஉம் சொல்லான்-யாதொருமறு மொழியுங் கூறாமல், பங்கயம் நெடு கண் சேப்ப- தாமரைமலர் போன்ற நீண்ட (தன்) கண்கள் செந்நிறமடைய, நித்திலம் பரப்பினான் - முத்துப்போன்ற கண்ணீர்த்துளிகளை மிகுதியாகச் சொரிந்தான்; (எ -று.) சேப்ப - செயவெனெச்சம்: செம்மையென்பதன் விகாரமாகிய 'சே' என்பதனடியாப்பிறந்தது. நித்திலம் - உவமவாகு பெயர்; வடிவுவமை. கோடம்=கோஷம்; வடமொழி. (293) |