னுக்கு' என்பதற்கு அருச்சுனனுக்கு என்று உரைத்தால், 'சொன்னான்' என்பதோடு கூட்டவேண்டும். செப்புகென்று- தொகுத்தல். பி-ம்: வீரனென்மருகனென்றென்று. (295) 158. - அதுகேட்ட அருச்சுனன் புத்திரசோகத்தால் தேரினின்று தரையிலயர்ந்து வீழ்தல். மைத்துனனுரைத்தமாற்றமைத்துனன்செவிக்குத்தீக்கோ லொத்திருபுறனும்வேவவுள்ளுறச்சுட்டபோது புத்திரசோகமென்னுநஞ்சினாற்பொன்றினான்போ லத்தடந்தேரினின்றுமவனிமேலயர்ந்துவீழ்ந்தான். |
(இ-ள்.) மைத்துனன் உரைத்த மாற்றம்-மனைவியினுடன் பிறந்தவனான கண்ணன்சொன்னவார்த்தை, மைத்துனன் செவிக்கு-அத்தைமகனான அருச்சுனனது காதுகளுக்கு, தீ கோல்ஒத்து-கொள்ளிக்கட்டை போன்று, இரு புறன்உம் வேவ- இரண்டு பக்கங்களிலும் வேகும்படி, உள் உற சுட்ட போது-மனத்திலே பொருந்தத் தபித்தபொழுது, (அருச்சுனன்), புத்திரசோகம் என்னும் நஞ்சினால் பொன்றினான்போல்-புத்திரன் இறந்ததனாலாகிய விசன மென்கிற விஷத்தினால் இறந்தவன்போல, அ தடதேரினின்றும்- அந்தப் பெரிய இரதத்தினின்றும், அவனிமேல்-பூமியில், அயர்ந்து வீழ்ந்தான் - மூர்ச்சித்து விழுந்திட்டான்; (எ - று.) சேர்ந்தமாத்திரத்தில் வருத்துதலால், கொடுஞ்சொல்லுக்குத் தீக்கோலை உவமைகூறினார். செவி இரண்டாதலின், 'இருபுறன்' எனப்பட்டது. (296) 159. -ஸ்ரீக்ருஷ்ணன் சைத்தியோபசாரத்தால்தெளிவிக்க, தெளிந்த அருச்சுனன் அழுதலுறுதல். அயர்ந்தனன்விழுந்தகோவையச்சுதன்பரிவோடேந்திப் புயந்தழீஇயெடுத்துவாசப்பூசுநீர்தெளித்துமாற்றப் பயந்தருகோடிக்கூடபாகலந்தணிந்துமெல்லக் கயந்தெளிவுற்றதென்னக்கண்மலர்ந்தழுதலுற்றான். |
(இ-ள்.) அயர்ந்தனன் விழுந்த-மூர்ச்சித்துக் கீழ்விழுந்த, கோவை- அருச்சுனராசனை,அச்சுதன்-கண்ணபிரான், பரிவோடு ஏந்தி - அன்போடு தாங்கி, புயம் தழீஇ எடுத்து-கைகளால் அணைத்து எடுத்து, வாசம் பூசு நீர் தெளித்து- பரிமளத்தையுடையபூசுதற்குரிய பனிநீரை (அவன்மேல்) தெளித்து, மாற்ற-(அவனது மூர்ச்சையைப்)போக்க,-(அவ்வருச்சுனன்), பயம்தரு-அச்சத்தைத்தருகிற, கோடி- புதுமையான,கூடபாகலம்-கூடபாகலமென்னும்ந் தீராப்பெருநோய், தணிந்து - குறைய, கயம்-யானை, மெல்ல தெளிவு உற்றது என்ன-மெல்லத்தெளிவை யடைந்தாற் போல, கண்மலர்ந்து-கண்களை விழித்து[தெளிந்து], அழுதல் உற்றான்- புலம்பத் தொடங்கினான்;(எ - று.)-அதனை மேல் எட்டுக் கவிகளிற் காண்க. தணிந்து-தணிய; செயவெனெச்சம் செய்தெனெச்சமாகத் திரிந்தது. பரிவோடு ஏந்தியதற்கு ஏற்ப, அச்சுதனென்றார். அச்சுதன்-தன்னைச் சரணமடைந்தவர்களை நழுவவிடாதவன. |