185. - அருச்சுனன் வஞ்சினமுரைத்ததுகேட்ட தருமன் கிருஷ்ணனோடு பேசலுறுதல். இன்னணமி ருந்தவர்கள் யாவருந டுங்க மன்னவையி லன்றுபல வஞ்சினமு ரைக்கச் சொன்னவுரை யானகனல் சுட்டசெவி யோடும் பின்னையறன் மைந்தனெடு மாலினொடு பேசும். |
(இ-ள்.) இன்னணம் - இவ்வாறு, மன் அவையில்-இராசசபையிலே, இருந்தவர்கள் யாவர்உம் நடுங்க - (அங்கு) உள்ளவர்கள் எல்லோரும் (கேட்டு) மிகஅஞ்சும்படி-(அருச்சுனன்), அன்று - அப்பொழுது, பல வஞ்சினம் உரைக்க - அநேக சபதங்களைக்கூற,-சொன்ன-(அவ்வருச்சுனன்) கூறின, உரை ஆன- சபதவார்த்தைகளாகிய, கனல்-அக்கனி, சுட்ட-(சென்று) வருத்தின, செவியோடு உம்- காதுகளுடனே (அச்சபதங்களைக் கேட்டமாத்திரத்தில் மிக வருத்தியவனாய்) பின்னை - பின்பு, அறன் மைந்தன்- தருமபுத்திரன், நெடு மாலினொடு - பெருமைக்குணமுள்ள கண்ணனுடனே, பேசும் - (சிலவார்த்தை) கூறுவான். (எ - று.)-அவற்றை மேல் காண்க. நெடுமால் - முன்பு திரிவிக்கிரமனாய் நீண்ட மூர்த்தியுமாம்; விசுவரூபமெடுத்தருளியவனுமாம். (323) வேறு. 186.- இதுவும், அடுத்த - கவியும் தருமன் கண்ணனை நோக்கிக் கூறுவன. வடிசுடர் வாளியான் மொழிந்த வஞ்சினப் படிசயத் திரதனைப் படுத்தல் கூடுமோ பொடியன லிவன்புகிற் புகுந்து நால்வரு மிடிபொரு மரவென விறத்த றிண்ணமே. |
மூன்றுகவிகள் - ஒருதொடர். (இ - ள்.) வடி சுடர் வாளியான்-கூரிய ஒளியையுடைய அம்புகளையுடைய அருச்சுனன், மொழிந்த வஞ்சினம் படி-சொன்ன சபதவார்த்தையின்படி, சயத்திரதனை படுத்தல் கூடும்ஓ - சயத்திரதனைக் கொல்லுதல் முடியுமோ? (ஒருகால்அங்ஙனம் முடியாமல்), இவன் - இவ்வருச்சுனன், பொடி அனல் புகின் - சாம்பல்செய்யும்படியான அக்கினியிற் பிரவேசித்தால், நால்வர்உம் - (மற்றைநாங்கள்)நாலுபேரும், புகுந்து - (அவனுடனே தீக்) குதித்து, இடிபொரும் அரவு என இறத்தல்-இடியினால் அழியும் பாம்புபோல மரிப்பது, திண்ணம்-:ஏ - தேற்றம். பி-ம்: சுடர்வேலினான். இதனால், பாண்டவர் ஐவரும் உடல்வேறு உயிரொன்று என்னும்படி அந்நியோந்நியமாயிருப்பவரென்பது விளங்கும். நால்வரும்- தன்மையிற் படர்க்கை வந்த இடவழுவமைதி; 'நால்வேமும்' என்றிருப்பின், வழாநிலையாம். இதுமுதல் முப்பத்து மூன்று கவிகள்-பெரும்பாலும் மூன்றாஞ்சீரொன்று மாச்சீரும், மற்றை மூன்றும், விளச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள். (324) |