187. | முப்பதுகடிகையின் முரண் கொண்மொய்ம்பனைத் தப்பறக்கொல்லுவேனென்றுசாற்றுமால் அப்பெருஞ்சேனையிலவனையுள்ளுறத் துப்புறவணிந்திடிற்றுன்னலாகுமோ. |
(இ-ள்.) 'முரண் கொள்-மாறுபாடுகொண்ட, மொய்ம்பனை-வலிமையையுடைய சயத்திரதனை, முப்பது கடிகையின்-(நாளைப்பகல்) முப்பது நாழிகைக்குள்ளே, தப்பு அற-தவறாமல், கொல்லுவேன்,- என்று-, சாற்றும் -(அருச்சுனன் இப்பொழுது சபதம்கூறுகிறான்; அ பெரு சேனையில்-அந்தப் பெரிய கௌரவசேனையில், அவனை - அச்சயத்திரதனை, உள் உற - உள்ளிடத்திலே பொருந்த, துப்புஉற - வலிமைமிக, அணிந்திடில்-(எதிரில்) அணி வகுப்பில் நிறுத்தியிட்டால், துன்னல் ஆகும்ஓ-(அவனைக்) கிட்டுதல் முடியுமோ? (எ - று.)-கிட்டுதலே அரிதாயின், கொன்று சபதத்தை நிறைவேற்றுவது எவ்வாறு? என்றபடி - பி-ம்: கடிகையின் முரண்டு கடிகை-கடிகா என்னும் வடசொல் திரிந்தது; இருபத்து நான்கு நிமிஷங் கொண்ட பொழுது. ஆல் - ஈற்றசை 'மால்' என எடுத்துத் திருமாலே என விளியாகக் கொள்ளினுமாம். துப்பு-துணையும், காவலுமாம். (325) 188. - ஸ்ரீகிருஷ்ணன் தருமனுக்கு அபயமளித்தல். எஞ்சின்மற்றென்செய்வேனென்னுமேல்வையின் அஞ்சலென்றறன்மகனவலமாற்றினான் கஞ்சாவான்பொய்கையிற்கராவின்வாய்ப்படு குஞ்சரந்தனக்கருள்கொண்டன்மேனியான். |
(இ-ள்.) எஞ்சின் - (அருச்சுனன்) அழிவதானால், மற்று என்செய்வேன் - (யான்) வேறு யாது செய்வேன்? என்னும் - என்று சொன்ன, ஏல்வையின் - சமயத்தில்,- அஞ்சல் என்று- பயப்படாதேயென்று சொல்லி, அறன் மகன் அவலம்ஆற்றினான்-தருமபுத்திரனது கவலையைத் தணியச்செய்தான்; (யாவனெனில்),-வான்கஞ்சம் பொய்கையில்-சிறந்த தாமரைத்தடாகத்திலே, கராவின்வாய் படு-முதலையின்வாயில் அகப்பட்ட, குஞ்சரந்தனக்கு-யானைக்கு, அருள் -கருணைசெய்த,கொண்டல் மேனியான் - காளமேகம்போலுந் திருமேனியையுடைய கண்ணபிரான்;(எ - று.) குஞ்சரந்தனக்கருள் கொண்டல்மேனியான் அவலமாற்றினான் என்ற தொடரில், அடியார்க்கு வருந்துயரை ஆற்றுவிக்குந்தன்மையன் திருமால் என்பது பெறப்படும்: இதுகருத்துடையடைகொளியணி. எஞ்சின்-(சபதந்) தப்பினால் என்றும். (அவன்) ஒழிந்தால் என்றும் பொருள்கள்படும். மற்று-யான் இறத்தலே யொழிய என்றபடி. அஞ்சலென்னுதல் - அபயப்பிரதானம். இரண்டாம் அடி முற்று மோனையாதலால். மாற்றினானென்று பிரித்தல் சிறவாது. (326) 189. - ஸ்ரீக்ருஷ்ணன் தருமனை நோக்கி யாவர்காப்பினும்சயத்திரதனை நாளைத் தவறாமல் அருச்சுனன் கொல்வா னெனல். இந்திரன் காக்கினுமீசன்காக்கினுஞ் சிந்துவின்றலைவளைத்தேவர்காக்கினுங் |
|