பக்கம் எண் :

200பாரதம்துரோண பருவம்

மன்றலந்துழாய்மாயன்மேன்மன
மொன்றியேசிவாகமவுரையிற்சாத்தினான்

     (இ-ள்.) என்ற -, அரி- கண்ணபிரான், இயம்பலும் - கூறிய வளவிலே,-
நிகர்இல் கேள்வியான் - ஒப்பிலாத நூற்கேள்வியையுடைய அருச்சுனன்,- இரு
மருங்கின்உம் நின்ற - இரண்டுபக்கங்களிலும் பொருந்தின, நல்மலர்கொடு-சிறந்த
பூக்களைக் கொண்டு, மன்றல் அம் துழாய் முடி மாயன் மேல் மனம் ஒன்றிஏ -
பரிமளத்தையுடைய அழகிய திருத்துழாய்மாலையைச் சூடிய திருமுடியையுடைய
அக்கண்ணபிரான்மேல் (தன்) மனம் பதியவைத்துக்கொண்டு, சிவ ஆகம உரையின்-
சைவாகமங்களிற் கூறப்பட்ட சொற்களின் படியே, சாத்தினான் - இட்டு
அருச்சித்தான்; (எ-று.)

     வேதம் ஆகமம் என்ற இரண்டனுள், வேதம் பல தேவர்களுக்குப் பொதுவும்
ஆகமம் சிவபிரானுக்குச் சிறப்பும் ஆதலாலும், ஆகமம் சிவபிரானால்
அருளிச்செய்யப்பட்டதாகிச் சிவனைத் தியானித்தல் பூசித்தல் முதலியவற்றின்
முறைமைகளை வெளியிடுவதாதலாலும், 'சிவாகமம்' எனப்பட்டது. இவ்வாகமம்,
இருபத்தெட்டாம். நன்மலர் - வாடாதமலர், கொன்றைமுதலிய சிவனுக்குரிய மலர்.
முன்னர்ப் பாசுபதம்பெறத் தவஞ்செய்யும்பொருட்டுச் செல்லுமுன் ஸ்ரீவேதவியாசரிடம்
சிவபிரானுக்குரிய மந்திரத்தை அருச்சுனன் உபதேசம் பெற்றமை தோன்ற, 'நிகரில்
கேள்வியான்' என்றார். மாயன்மேல் மனம்ஒன்றியே - கண்ணனைப் பரமசிவனாகப்
பாவித்தே யென்றவாறு. பி - ம் : மலர்கொய்து. ஒன்றுபட்டாகமவுரையின்.    (334)

     197-.பூசைசெய்தபின் அருச்சுனன் கனியுண்டு தேறுதல்.

சாத்தினன்றொழுதுபின்றலைவன்றாண்மலர்த்
தீர்த்தமுங்கனிகளுந்தெவிட்டவுண்டுதன்
காத்திரந்தேறினன்கருத்துந்தேறினன்
பார்த்தன்முற்றவப்பயன்பலித்தவாறரோ.

     (இ-ள்.) (அருச்சுனன்) , சாத்தினன் - (கண்ணன்மேல் மலர்களை அணிந்து,
தொழுது - நமஸ்கரித்து, பின் - பின்பு, தலைவன் - (எல்லாவுயிர்களுக்கும்)
நாயகனான அக்கண்ணனது, தாள் மலர்- திருவடித்தாமலைமலர்களை விளக்கின,
தீர்த்தம்உம் - தீர்த்தத்தையும், கனிகள்உம் - பழங்களையும் ,தெவிட்ட - அதிக
திருப்தியுண்டாம்படி, உண்டு உட்கொண்டு, தன் காத்திரம் தேறினன் - தனது
உடம்புதெளிந்து, கருத்துஉம் தேறினன் - மனமுந்தெளிந்தான்; பார்த்தன்-
அருச்சுனனது,முன் தவம் பயன்- முன்புசெய்த தவத்தின் பலன், பலித்த ஆறு-
சித்தித்த விதம்,(இதுவாம்); (எ - று.)- அரோ, ஈற்றசை ; வியப்புவிளக்கும்
இடைச்சொல்லாகக்கொள்ளுதலும் பொருந்தும்.

     அரியையேனும் அரனையேனும் ஒருகடவுளைத் தனியேபூசித்தல் உலகத்தில்
உளதாயினும், இப்படிப்பட்ட அபோதமான பாவனையோடு பூசனைசெய்தல்
அரிதாதலின், இதனை வியந்து கூறினார். தாள்மலர்தீர்த்தம் - ஸ்ரீபாததீர்த்தம். (335)