பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்215

என்னுடைய உருவத்தை [சிவவடிவத்தை] அடைந்தவனாகி, அழிக்க உம் நின்றனை
- அழிப்பதற்கும் நின்றருளினாய்; என - என்று (புகழ்ந்து) -   (எ-று.)-
"ஆயிடைநின்ற கிரீடியை மூழ்கென" என மேற்கவியோடு இயையும்.

     எம்பெருமானுடைய ஸ்ரீவைகுண்டலோகம் என்றும் அழியாது நித்தியமாக
இருப்பதாதலால், நித்தியவிபூதியெனப்படும் : அதை யொழிந்த இந்த
உலகங்களெல்லாம் அப்பெருமானுடைய விளையாடலுக்கு இடனாயிருத்தலால்,
லீலாவிபூதி யெனப்படும் என்ப.                                   (258)

221.-அருச்சுனனை அங்கொருபொய்கையில் 'நீராடுக' என்ன, அப்
பொய்கையிலே ஒருநாகத்தின் வாயினின்று வில் அம்புகளுடன்
ஒருமுனிவன் தோன்றுதல்.

ஆயிடைநின்றகிரீடியைமுக்கணனங்கொருபொய்கையிலே
போயிடைமூழ்கெனவப்புனலூடொர்புயங்கமெழுந்தததன்
வாயிடைவந்தனன்மாணுருவாயொருமாமுனியம்முனியச்
சேயிடைநீரிலெடுத்தனன்மற்றொருசிலையுடன்வாளியுமே.

     (இ-ள்.) (பிறகு), முக்கணன் - மூன்றுதிருக்கண்களையுடைய சிவபிரான்,
ஆயிடை நின்ற கிரீடியை - அவ்விடத்தில் நின்ற அருச்சுனனை (ப்பார்த்து),
அங்குஒரு பொய்கையில்போய் இடை மூழ்கு என - அவ்விடத்திலுள்ளதொரு
சரசிலேசென்று அதனில் நீராடுவாய் என்று சொல்ல,- (அங்ஙனம் அருச்சுனன்
ஸ்நாநஞ்செய்த வளவிலே), அ புனலூடு - அந்தத்தடாகத்தின் நீரினின்று, ஓர்
புயங்கம் எழுந்தது - ஒரு நாகம் மேல்வந்தது; அதன் வாயிடை -  அதனுடைய
வாயிலே, மாண் உரு ஆய் - பிரமசாரிவடிவமாய், ஒரு மா முனி - ஒரு சிறந்த
முனிவன், வந்தனன் - தோன்றினான்; அ முனி - அந்தமுனிவன், அ சேய் இடை
நீரில் - நெடுங்தூரம்பரவிய இடத்தையுடைய அந்நீரினின்று, மற்று ஒரு சிலையுடன்
வாளிஉம் - வேறொரு வில்லையும் அம்பையும், எடுத்தனன்-:  (எ - று.)

     சிந்தாமணியுரையில் நச்சினார்க்கினியர் 'பொய்கை-மானிடராக்காத நீர்நிலை'
என்றதை இங்கே யறிக. மாண் உரு ஆய் - (பிரமதேஜசு விளங்குகிற) சிறந்த
வடிவமாய் என்றுமாம். முன் அருச்சுனன் தவநிலைச்சருக்கத்தில் "ஐயனுமம்மையோ
டருள்புரிந்து பின், வெய்ய பொற்றூணியும் வில்லுமந்த்ரமுந், துய்ய பாசுபத மெய்த்
தொடையு முட்டியும், ஒய்யென நிலையுடனுதவினானரோ" என்றதை நோக்கி
'மற்றொருசிலையுடன்வாளியும்'என்றார்.                              (359)

222.-வந்தமுனிவன் முட்டிநிலைகளைப்பயிற்றி
உருத்திரமறை யுபதேசிக்க, அருச்சுனன் பெற்றுக்கொள்ளுதல்.

முப்புரநீறெழுநாளினியற்றியமுட்டியுநன்னிலையு
மப்புரசூதனனேவலினந்தணனமரர்பிரான்மதலைக்
கொப்புறவோடுபயிற்றியுதங்கொடுருத்திரமாமறையுஞ்
செப்பினனாலவைபெற்றனன்வென்றுசெயத்திரதற்றெறுவான்.

     (இ-ள்.) மு புரம் - திரிபுரம், நீறு எழும் நாளின் - எரிந்து சாம்பரான
காலத்தில், இயற்றிய - (சிவபிரான்) கொண்டருளிய, முட்டிஉம் - கைப்பிடியையும்,
நல் நிலைஉம் - நல்ல நிற்கும்விதத்தை