இதுமுதற் பதினொருகவிகள் - பெரும்பாலும் இரண்டு நான்கு ஏழாஞ்சீர்களும், மாச்சீர்களும மற்றைநான்கும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட எழுசீராசிரியவிருத்தங்கள். (398) 2.- தருமபுத்திரன் சேனையுடன் போர்க்குப் புறப்படுதல். காலையாதபனைத் தருமன்மாமதலைகைதொழுகடன் முடித்தருளிச், சாலையார்தழல்செய் வேள்வியந்தணர்க்குத் தானமுந் தகுவன வழங்கி. மாலையாமளவிற் றனஞ்சயன்மொழிந்த வஞ்சினம் வழுவறமுடிப்பான், வேலையாரரவப் பலபணைமுழங்க வெம்முரட் சேனையோடெழுந்தான். |
(இ-ள்.) காலை - (பதினான்காநாட்) சூரியோதயகாலத்தில்,- தருமன் மா மதலை- யமதருமராசனது சிறந்தகுமாரனான யுதிட்டிரன், - ஆதபனை கை தொழு கடன்முடித்தருளி - சூரியனைக் கை கூப்பிவணங்கிச் செய்யவேண்டிய கடமைத்தொழில்களை அன்புடன் செய்து முடித்து, - சாலை - யாகசாலையில், ஆர்-பொருந்திய, தழல் - அக்கினியில், செய் - செய்கிற, வேள்வி - யாகங்களையுடைய,அந்தணர்க்கு - பிராமணர்களுக்கு, தகுவன தானம்உம் - தக்கனவாகியதானங்களையும், வழங்கி - மிகுதியாகக் கொடுத்து,- மாலைஆம் அளவில் -(அன்றைத்தினம்) மாலைப்பொழுது வருமளவிற்குள், தனஞ்சயன் மொழிந்தவஞ்சினம் வழு அற முடிப்பான் - அருச்சுனன் ( முதல்நாளிற்) சொன்ன சபதத்தைத்தவறுதலில்லாமல் நிறைவேற்றும் பொருட்டு,- வேலை ஆர்- கடலொலியையொத்த,அரவம் - ஆரவாரத்தையுடைய , பலபணை- அநேகவகைவாத்தியங்கள், முழங்க -மிக ஒலிக்க, வெம் முரண் சேனையோடு - கொடிய வலிமையையுடைய ( தன்)சேனையுடன், எழுந்தான் - (போர்க்குப்) புறப்பட்டான்; ( எ -று.) மாலையாமளவில் முடிப்பான் என்க. இனி, மாலையாமளவில்மொழிந்த என இயைத்து, முந்தினநாளைமாலைப்பொழுதிற் சொன்ன என்றலுமாம். (399) 3.- அருச்சுனன் போர்க்குப் புறப்படுதல். அடைந்தவரிடுக்க ணகற்றுதற்கெண்ணி யாடகப் பொருப்பி னாற்கடலைக், கடைந்தமுதளித்த கருணையங்கடலே கடும்பரிச்சந்த னங்கடவ, மிடைந்தொளியுமிழும் வேற்படைத்தடக்கை வீமனு மிளைஞரும்பலருங், குளைந்திருபுறனுங் கைவரமகவான் குமரனு மமர்க்களங்குறுக. |
இதுவும், வருங்கவியும் - குளகம். (இ-ள்.) அடைந்தவர் - (தன்னைச்) சரணமடைந்த தேவர்களின் இடுக்கண்- துன்பத்தை, அகற்றுதற்கு - போக்குதற்கு, எண்ணி- நினைத்து, ஆடகம் பொருப்பினால் - பொன்மயமான மந்தர மலையைக் கொண்டு , கடலை கடைந்து - பாற்கடலைக் கடைந்து, அமுது அளித்த - (அத்தேவர்கட்கு) அமிருதத்தைக் கொடுத்த, கருணை அம் கடலே - அருளுக்கு அழகிய ஒருகடல்போல இடமாகவுள்ளவனாகிய கண்ணபிரான்தானே, கடும் பரி சந்தனம் கடவ- வேகத்தையுடைய குதிரைகள் பூட்டிய (தனது) தேரைச் செலுத்தவும்,- |