பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்283

யென்றுமென்றுநாநுகர்புனலன்றுநல்லின்னமுதிதுவென்பார்
தென்றலந்தடஞ்சோலையிற்கரைதொறுஞ்சேர்ந்துதம்விடாய்தீர்வார்.

     (இ-ள்.) சென்ற சென்ற - (இங்ஙனம்) மிகுதியாகப் புறப்பட்டுப்போன, வெம்
சேனைகள் - கொடிய (துரியோதனனது) சேனையிலுள்ளார், இளைப்பு அற - (தமது)
இளைப்புத்தணியும்படி, தெய்விகத்தினில் வந்த மன்றல் அம் பெரும் பொய்கை நீர்
பருகி - (அருச்சுனன் எய்த அஸ்திரத்தினது) தெய்வத்தன்மையா லுண்டான
பரிமளமுள்ள அழகிய பெரிய தடாகத்தின் நீரைக் குடித்து, அ பொய்கையின்
வளம்நோக்கி - அக்குளத்தினது வளப்பத்தைப் பார்த்து, 'இது-இக்குளத்தின் நீர்,
என்றுஉம்என்றுஉம் நாம் நுகர் புனல் அன்று - இத்தனைகாலமாக நாள்தோறும்
நாம் குடித்துவந்த நீர்போல்வதன்று; நல்இன் அமுது - சிறந்த இனிய அமிருதம்
போல்வதாம்,'என்பார் - என்று வியந்து சொல்வார்கள்; (மற்றும்), கரை தொறுஉம்-
(அத்தடாகத்தின்) கரைகளிலுள்ள, தென்றல் அம் தட சோலையில் - தென்றற்காற்று
உலாவப் பெற்ற அழகிய பெரியசோலைகளில், சேர்ந்து - தங்கி, தம் விடாய்
தீர்வார்- தங்கள் தாபந்தணியப்பெறுவார்கள்; ( எ -று.)

     'சேனைகள்' என்பது- சொல்லால் அஃறிணையாயினும், இங்கு
உயர்திணைப்பொருளின்மேலதாதலால், 'என்பார்,' 'தீர்வார்' என்ற உயர்
திணைப்பன்மைமுற்றுக்களைக் கொண்டது.                           (465)

69.மத்தவாரணங்கொண்டுசெந்தாமரைவனங்கலக்குறுவிப்பார்
தத்துபாய்பரிநறும்புனலருத்துவார்தாமுநீர்படிகிற்பார்
கைத்தலங்களிலளியினமெழுப்பிமென்காவிநாண்மலர்கொய்வார்
இத்தலந்தனிலிம்மலர்ப்பரிமளமில்லையென்றணிகிற்பார்.

     (இ-ள்.) (மற்றும் அத்துரியோதனன்சேனையார்), மத்தம் வாரணம்கொண்டு -
(தங்கள் தங்கள்) மதயானைகளால், செந் தாமரை வனம்-( அந்நீர்நிலையிலுள்ள)
செந்தாமரைத் தொகுதியை, கலக்குறுவிப்பார்- கலக்குவிப்பார்கள்; தத்து பாய்பரி -
தாவிவிரைந்துசெல்வனவானகுதிரைகட்கு, நறும்புனல் அருத்துவார் - சுகந்தமுள்ள
அக்குளத்தினீரைக்குடிப்பிப்பார்கள்; தாமும் நீர்படிகிற்பார் - தாங்களும்  அந்நீரில்
மூழ்குவார்கள்; கைத்தலங்களில் - கைகளினால், அளி இனம் எழுப்பி -(மிகுதியாக
மொய்த்துள்ள) வண்டின்கூட்டங்களை ஓட்டிவிட்டு, மெல் காவி நாள் மலர்
கொய்வார் - மென்மையான நீலோற்பலத்தின் அன்றுமலர்ந்த பூக்களைப்
பறிப்பார்கள்; ' இ மலர் பரிமளம் - இந்தப்பூக்களுக்குஉள்ள அவ்வளவு
நறுமணம்,இ தலந்தனில் - இவ்வுலகத்தில், இல்லை - (வேறு எதற்கும்) இல்லை,'
என்று -என்று கொண்டாடி, அணிகிற்பார் - (அக்கருங்குவளைமலர்களைச்)
சூட்டிக்கொள்வார்கள்; ( எ - று.)                               (466)

70.- யாவரும் தன்னைச்சூழ்ந்ததை அருச்சுனன் காணுதல்.

இன்னவாறுதம்மசைவொழிந்தியாவருமிபரததுரகத்தோ
டன்னவாவியைவளைத்தனர்கடல்வளையாழிமால்வரையென்னத்