பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்301

95.-கவிக்கூற்று: வேறுசெய்தி கூறத்தொடங்குவோமெனல்

இந்தவயப்போரிம்முறைவென்று
பைந்துளவோனும்பார்த்தனுமாகச்
சிந்துமகீபற்றேடிமணித்தே
ருந்துறமெல்லையுற்றதுரைப்பாம்.

     (இ-ள்.) இந்த வய போர் -இந்தவலியபோரிலே, இ முறை வென்று -
இந்தவிதமாய்(ப் பகைவரை) ச் சயித்து, பைந் துள வோன்உம் பார்த்தன்உம்
ஆக -பசுநிறமான திருத்துழாய்மாலையையுடைய கண்ணனும் அருச்சுனனுமாக,
(இவ்விருவரும்) சிந்து மகீபன் தேடி  சிந்துநாட்டரசனான சயத்திரதனைக்
தேடிக்கொண்டு, மணி தேர் உந்துறும் எல்லை- மணிகள் கட்டிய தேரைச் செலுத்து
மளவில், உற்றது - நடந்த வேறொரு செய்தியை, உரைப்பாம் - இனிச்சொல்வோம்;
(எ-று.)-அதனை, மேல் 59 - கவிகளிற் காண்க.                       (492)

96.- கண்ணனது சங்கொலிகேட்டதும் தருமன் கலங்குதல்.

வள்ளல்குறித்தவலம்புரிநாதத்
தெள்ளமுதந்தன்செவியுறுபோழ்தின்
உள்ளணிநின்றமுரசமுயர்த்தோன்
றள்ளுறுநெஞ்சிற்சங்கையனானான்

     (இ-ள்.) வள்ளல் - (அடியார்கட்கு) வரையாமல் அருள்செய்யுந்தன்மையனான
கண்ணபிரான், குறித்த - (முன்பு) ஊதிமுழக்கின, வலம்புரி - சிறந்த சங்கத்தினது,
நாதம் - ஓசையாகிய, தெள் அமுதம் - தெளிவான அமிருதம், தன் செவி உறு
போழ்தின் - தனது காதிற் பட்டவுடனே,- உள் அணி நின்ற முரசம் உயர்த்தோன்-
உள்ளணி மத்தியில் நின்ற தருமபுத்திரன், தள்ளுறு நெஞ்சில் சங்கையன் ஆனான்-
சஞ்சலப்படுந்தன்மையுள்ள (தன்) மனத்திற் சந்தேகங்கொண்டவனானான்; ( எ-று.)

     "அதிஸ்நேஹ: பாபஸங்கீ" என்றபடி அருச்சுனன்பக்கல் தனக்கு உள்ள மிக்க
அன்பினால் 'அவனுக்கு என்ன தீங்கு வருமோ!' என்று தருமபுத்திரன்
சங்கொலிகேட்டவளவிலே சங்கையுற்றன னென்க. அருச்சுனன் சபதத்தை
நிறைவேற்றி உயிருய்தலைக்குறித்துத் தருமபுத்திரன் கவலைகொண்டிருக்குமளவிலே
சங்கொலிகேட்டதனால் "புண்ணிற் புளிப்பெய்தாற்போல்" கலக்கத்தின்மேற் கலக்க
முற்றன னென்றுங் கொள்க.                                      (493)

97.- தருமன் சாத்தகியை அருச்சுனனுக்குத் துணைசெல்லச் சொல்லுதல்.

தன்றுணை நின்ற சாத்தகி யைக்கூய்
வென்றிடு போரில் விசய னிளைத்தா
லன்றிமு ழக்கா னதிர்வளை யையன்
சென்றறி குதிநீ யென்றுரை செய்தான்.