பக்கம் எண் :

350பாரதம்துரோண பருவம்

185.-தருமபுத்திரனும் தன்சேனைமுழுவதும் விளக்கெடுப்பித்தல்.

பொங்கியாடரவெழுந்தநேகவிதமானதென்றமரர்புகலுமா
றங்குவாளரவுயர்த்தகோனினைவறிந்தளப்பரியவாகவ
மெங்குமானைபரிதேர்கடோறுமொளிர்தீபகாகளமெடுக்கவே
சங்குதாரையெழநின்றனன்றருமன்மதலைதம்பியர்கடம்மொடும்.

     (இ-ள்.) அங்கு - அப்பொழுது,-தருமன் மதலை - யமதருமராச குமாரன்,-
வாள் அரவு உயர்த்தகோன் நினைவு அறிந்து -  கொடிய பாம்புவடிவத்தை(க்
கொடியில்) உயரநிறுத்திய துரியோதனராசனது எண்ணத்தை அறிந்து,-ஆடு அரவு
பொங்கி எழுந்து அநேகவிதம் ஆனது என்று அமரர் புகலும் ஆறு-பட
மெடுத்தாடுந்தன்மையுள்ள ஆதிசேஷன் சீறிப் பாதாளத்தினின்று) மேலெழுந்து
பலவகையாகத் தோன்றிய தென்று தேவர்கள் (ஒப்புமையாற்) சொல்லும்படி, அளப்பு
அரிய ஆசவம் எங்கு உம் ஆனை பரி தேர்கள்தோறுஉம் ஒளிர் தீப காகளம்
எடுக்க - அளவிடுதற்கு அருமையான (மிகப்பரந்த)  போர்க்களம் முழுவதிலும்
ஆனை குதிரை தேர்களென்னும் இவற்றிலெல்லாம் விளங்குகிற விளக்குக்கலங்களை
அமைக்க(ச்சொல்லி),-சங்கு தாரை எழ-சங்கவாத்தியங்களும் தாரை யென்னும்
ஊதுகருவிகளும் மிக ஒலிக்க, தம்பியர்கள் தம்மொடுஉம் - (வீமன் முதலிய)
தம்பிமார்களுடனே, நின்றனன் - (போர்க்குச் சித்தனாய்) நின்றான்; (எ - று.)

     போர்க்களத்திற் பலவிடத்தும் அநேகவிளக்குகள் விளங்குவது, தனது
ஆயிரம்முடிகளிலுமுள்ள மாணிக்கங்களின் சோதிவிளங்க ஆதிசேஷன்
மேலொழுந்தாற்போன்றது என்று வருணித்தார்; தற்குறிப்பேற்றவணி.
இத்தோற்றத்தின்சிறப்பு வானத்திலிருந்து போர்காண்கிற தேவர்கட்கே நன்கு
விளங்குமாதலால், 'அமரர்புகலுமாறு' எனப்பட்டது. சங்குதாரையெழுதல், போர்
தொடங்குதற்கு அறிகுறி.                                        (582)

186.- இரண்டுகவிகள்-இருதிறத்துவீரரும் தனித்தனி எதிர்த்துப்
போர்தொடங்குதலைத் தெரிவிக்கும்.

கருதிவாகைபுனைவிசயன்மேல்விசயகன்னன்முந்தியமர்கடுகினான்
கிருதவன்மனெனும்விருதன்மாமுரசகேதனன்றனெதிர்கிட்டினான்
சுருதிமாமுனிதுரோணனும்பழையதிட்டத்துய்மனொடுதுன்னினான்
பொருதுமாய்வனெனவீமனோடுயர்புயங்ககேதுமிகுபோர்செய்தான்.

     (இ-ள்.) வாகை-வெற்றியையே, கருதி-(பிரதானமாக)எண்ணி, புனை-
மேற்கொள்கிற, விசயன்மேல் - அருச்சுனன்மேல், விசயகன்னன்-வெற்றியையுடைய
கர்ணன், முந்தி அமர் கடுகினான் - முற்பட்டுவந்து போரைவிரைவாகத்
தொடங்கினான்; கிருதவன்மன் எனும் விருதன்-கிருதவர்மாவென்றவீரன்,
மாமுரசகேதனன் தன் எதிர் கிட்டினான் - பெரிய பேரிகை வடிவத்தையெழுதிய
கொடியையுடையவனான தருமபுத்திரனது எதிரிலேபோர்செய்யச் சமீபித்தான்;
சுருதிமா முனி துரோணன்உம் - வேதம்வல்ல