3.-கண்ணன் அருச்சுனன் முதலியோருடன் போர்க்களஞ்சேர்தல். நாலுசாபநிலையும்வல்லநரனும்வீமனகுலனு நாலுபாகமானசேனைநாதனுஞ்சிரங்களா நாலுகூறுசெய்துதானுநரனுமுந்தநடவினா னாலுவேதமுடிவினுக்குமாதியானநாரணன். |
(இ-ள்.) நாலு வேதம்முடிவினுக்குஉம் ஆதி ஆன நாரணன்-நான்கு வேதங்களின் தேர்ந்தகொள்கைகட்கெல்லாம் விஷயமான முதற்கடவுளாகிய திருமாலின் திருவவதாரமான கண்ணபிரான்,- சாபம் நாலு நிலைஉம் வல்ல- வில்வளைத்துஅம்பு தொடுப்பார்க்கு உரிய நான்குவகை நிலைகளுந்தேர்ந்த, நரன்உம் - அருச்சுனனும், வீமன் - வீமனும், நகுலனும்-, நாலுபாகம் ஆன சேனைநாதன்உம்-தேர் யானை குதிரை காலாளென்று நான்கு பகுதியாகிய சேனைக்குத் தலைவனான திட்டத்துய்மனும், சிரங்கள் ஆ -தலைகளாக (தலைமையாக), நாலு கூறு செய்து - (தம்பக்கத்துச் சேனையை) நான்கு பங்காகப் பிரித்து, தான்உம் நரன்உம் முந்த நடவினான் - (அவற்றைத்) தானும் அருச்சுனனுமாக முற்படச்செலுத்தினான்; (எ - று.)-பி-ம்; வீமநகுலரும். (620) 4.-வாலவீமனும் சோமதத்தனும் அருச்சுனனால் அழிதல். வாலவீமனென்றுபார்மதித்தவாண்மைமன்னனுஞ் சூலபாசபரணிதன்னொடொத்தசோமதத்தனு மாலகாலமெனவுருத்தடர்த்தபோரின்முந்துறக் காலனூரிலேகினார்கிரீடியேவுகணைகளால். |
(இ-ள்.) வாலவீமன் என்று - வாலவீமனென்று பெயர் சொல்லப்பட்டு, பார்மதித்த - நிலவுலகத்தாராற் கொண்டாடப்பட்ட, ஆண்மை - பராக்கிரமத்தையுடைய,மன்னன்உம்-அரசனும்,-சூலபாசபாணிதன்னொடு ஒத்த - சூலாயுதத்தையும்பாசமென்னு மாயுதத்தையும் கையிலுடைய யமனோடு சமனான, சோமதத்தன்உம்-சோமதத்தனென்ற அரசனும், - ஆலகாலம் என உருத்து அடர்ந்த போரில்-ஆலாகலவிஷம் போலக் கோபித்து நெருக்கிச்செய்த போரிலே, முந்துற-முற்பட,கிரீடி ஏவு கணைகளால்-அருச்சுனன் செலுத்திய அம்புகளினால், காலன் ஊரில்ஏகினார்-யமலோகத்திற் சேர்ந்தார்கள்; (எ - று.) - வாண்மை எனப் பிரிப்பின்-ஆயுதத் திறமை யென்க. பாசம் - கயிற்று வடிவமான ஆயுதம், சோமதத்தன் -பூரிசிரவாவின் தந்தை. (621) 5.-அருச்சுனனது போர்த்திறம். என்முனென்முனென்றுமன்னர்யாகும்யாருமிகலவே முன்முனின்றியாவரோடுமூரிவில்வணக்கினான் வின்முனெண்ணவில்லுமில்லைவெஞ்சமத்துமற்றிவன் றன்முனெண்ணவீரரில்லையெனவருந்தனஞ்சயன். |
|