பக்கம் எண் :

பன்னிரண்டாம் போர்ச்சருக்கம்41

பொருளுரைப்பர் - புல்முகராய் - புல்லைக் கவ்விய வாயையுடையவராய் என்றுங்
கொள்ளலாம்; புற்கௌவுதல் - தோல்விக்கு அறிகுறி.                  (57)

13.- மூன்றுகவிகள்- துருபதன் முதலியோரை வென்று துரோணன்
மாற்றார்பலரை மடிவித்தலைக் கூறும்.

மறைவாய்வெஞ்சிலைமுனிவன்வரூதினிதன்னிலையழிந்து
குறைவாவந்தமைகண்டுகோதண்டமெதிர்வாங்கித்
துறைவாய்வெங்கனல்போலுந்துருபதன்கைச்சிலைதுணியப்
பிறைவாய்வெங்கணைதொடுத்துப்பிறைமுடியோனெனச்சென்றான்

     (இ-ள்.) மறை வாய் - வேதங்களையோதிய வாயையும், வெம் சிலை- கொடிய
வில்லையுமுடைய, முனிவன் - துரோணன், வரூதினி - (தனது) சேனை, தன் நிலை
அழிந்து - தனக்குஉரிய உறுதிநிலை கெட்டு, குறைவு ஆ வந்தமை - குறைவாக
வந்ததனை, கண்டு - பார்த்து, கோதண்டம் எதிர் வாங்கி - வில்லை  எதிரிலே
வளைத்து, துறை வாய் வெம் கனல் போலும் - வேள்வித்துறைவாய்ந்த வெவ்விய
அக்கினி போன்ற [மிகக்கொடிய], துருபதன் - துருபதராசகுமாரனான
திட்டத்துய்மனது, கை சிலை - கையிலுள்ள வில், துணிய- துண்டாகும்படி, பிறை
வாய் வெம் கணை தொடுத்து - பிறைச்சந்திரன்போன்ற [வளைவான]
நுனியையுடைய கொடிய அம்பைத் தொடுத்துக்கொண்டு, பிறை முடியோன் என -
இளஞ்சந்திரனையணிந்த சடைமுடியையுடைய சிவபிரான்போல, சென்றான் -
(உக்கிரமாக எதிர்த்துச்) சென்றான் ; (எ-று.)

     குறைவா வருதல் - சென்றபொழுதினுந் தொகை குறைவாக மீளுதலும்,
அவமானமுண்டாகப் பின்னிடுதலும். துறை - வேதவிதியொழுக்கம். கனலுவமையும்,
சிவனுவமையும், எதிர்க்கும் பொருளைத் தவறாது அழித்தற்கு என்க.
துருபதபுத்திரனை 'துருபுதன்' என்றார், தருமபுத்திரனை 'தருமன்' என்றாற்போல.
                                                            (58)

14.சத்தியகேதுவின்சாபஞ்சரமொன்றாலிரண்டாக்கிச்
சித்திரவெஞ்சிலையாண்மைச்சிகண்டியையுஞ்சிலையறுத்திட்
டுத்தமோசாமுதலாவுள்ளகொடுந்திறல்வேந்தர்
தத்தமுயிருடன்போகத்தானையெலாமடிவித்தான்.

     (இ-ள்.) (சென்ற துரோணன்),- சத்தியகேதுவின் - சத்தியகேதுவென்னும்
பாஞ்சாலராசனது, சாபம் - வில்லை, சரம் ஒன்றால் - ஓரம்பினால், இரண்டு
ஆக்கி -துணித்து, சித்திரம்- அழகிய, வெம் கொடிய, சிலை- வில்லின் திறத்தில்,
ஆண்மை -பராக்கிரமத்தையுடைய, சிகண்டியையும்-, சிலை அறுத்திட்டு -
வில்லையறுத்து,உத்தமோசா முதல் ஆ உள்ள - உத்தமோசா என்னும் அரசன்
முதலாகவுள்ள,கொடு திறல் வேந்தர் - கொடிய வலிமையையுடைய அரசர்கள், தம்
தம் உயிருடன்போக - தங்கள் தங்களது உயிரோடு புறங்கொடுத்துப் போகும்படி,
தானை எலாம் -(பாண்டவ) சேனையை யெல்லாம், மடிவித்தான் -
அழியச்செய்தான்;  ( எ -று.)