பக்கம் எண் :

பன்னிரண்டாம் போர்ச்சருக்கம்53

     (இ -ள்.) (அப்பொழுது துரோணன்சேனையில்), சொன்ன ஆறு குறிஉம் உள்ள
- (அசுவநூல்களிற்) கூறியுள்ளபடி எல்லா நல்லிலக்கணங்களையுமுடைய, துரகதம் -
குதிரைகள், துணிந்தன - அறுபட்டன; கன்னம்- கபோலங்களினின்று, ஆறு சொரி -
ஆறாகப் பெருகுகிற, மதம் - மதநீரையுடைய, களிறு இனங்கள் - யானைக்
கூட்டங்கள், வீழ்ந்தன - இறந்துகீழ் விழுந்தன; பிறங்கு தேர்- விளங்குகிறதேர்கள்,
பின்னம் ஆறு பட்டன - பிளவுத்தன்மையை அடைந்தன; பதாதிகள் -
காலாட்கூட்டங்கள், இன்ன ஆறு பட்டன என குறித்து இயம்பு ஓணா-'இவ்விதமாக
அழிந்தன' என்ற குறிப்பிட்டுச் சொல்லமுடியாதவையாயின; ( எ -று.)

     குறி -அடையாளம். 'சொன்னஆறு குறியுமுள்ள' என்பதற்கு  (குதிரை
நூல்களில் நல்லிலக்கணமாகக்) கூறின (பிறப்பிடம், நிறம், சுழி, குரல், உறுப்பமைதி,
நடை என்னும்) ஆறுதன்மைகளையுமுடைய என்றும் உரைக்கலாம். 'பதாதிகள்'
என்பது - இங்கே, அஃறிணைப்பன்மைபாற் பட்டதனால், 'பட்டன’,'இயம்பொணா’
என்னும் அஃறிணைப்பன்மைமுற்றைக் கொண்டது. சிலபிரதியில், இந்தப்பாடல்
அடுத்தபாடலின்பின் உள்ளது.                                    (79)

35.-யுதிட்டிரன் பக்கத்தவரின் செருக்குமொழியும், துரியோதனன்
பக்கத்தவரின் இரக்கமொழியும்.

உங்கள்சேனைகெட்டதென்றுதிட்டிரன்றளத்துளார்
திங்களன்னகும்பயோனிசேனைதன்னையிகழுவார்
எங்கள்சேனைகெட்டதுங்களிறைவன்வின்மையாலெனத்
தங்கள்சேனையந்தணன்றளர்ந்ததற்கிரங்குவார்.

     (இ-ள்.) உதிட்டிரன் தளத்து உளார் - தருமன்பக்கத்தின்
சேனையிலுள்ளவர்கள், திங்கள் அன்ன கும்பயோனி சேனை தன்னை-
பூர்ணசந்திரனையொத்த துரோணனது சேனையை, உங்கள் சேனை கெட்டது என்று
- 'உங்கள்சேனை தோற்றது' என்று, இகழுவார்- நிந்திப்பார்கள்; (அதற்கு அவர்கள்),
உங்கள் இறைவன் வின்மையால் எங்கள் சேனை கெட்டது என - 'உங்களரசனான
தருமனது வில்லின்திறத்தால் எங்கள் சேனை அழிந்தது' என்று ஒப்புக்கொண்டு,
தங்கள் சேனை அந்தணன் தளர்ந்ததற்கு இரங்குவார் - தங்கள்
சேனைத்தலைவனான துரோணன் தளர்ச்சியடைந்ததற்கு மனம் வருந்துவார்கள்;
(எ-று)

     அப்பொழுது அவர்கள் தோல்வி அவர்களே ஒத்துக்கொள்ளும் படியிருந்த
தென்பது, பின்னிரண்டடிக்குக் கருத்து. திங்களுவமை- கலைநிரம்புதற்கு. பி - ம்:
திறத்துளார்.                                                     (80)

36.- இருதிறத்துசேனையும் ஒத்துப்பொருகையில் கடோத்கசன்
பாண்டவசேனைக்குத் துணையாதல்.

இருதளத்துநின்றமன்னரிருவராகவிகலியே
யொருதளத்துமன்னரென்னவொத்துநின்றுடற்றினார்
பொருதளத்திலிங்ஙனின்றுபோர்புரிந்தபொழுதிலே
வருதளத்தொடுதவினான்மருத்துவீமன்மைந்தனே.