இவற்றிற் கூறியவற்றாலும் அறிக. அவனுக்கு இடமான அளகாபுரி கைலாசமலையின் ஒருசாருள்ள தென்று புராணம் கூறும். சிகரம் என்ற மலையுச்சியின் பெயர்- இங்கே, மலைக்குச் சினையாகு பெயர். இனி, விஞ்சைக்கடவுள் சிகரம் என்பதற்கு- வித்யாதரர்களுக்கு இருப்பிடமான வெள்ளிமலை யென்றுங்கொள்ளலாம். ஈற்றடிக்கு- போர்செய்தது அழிந்த அரசர்மிகப்பலரென்று கருத்துக் கொள்வாருமுளர். (115) 71.- இதுஇங்ஙன் நிற்க, மற்றொருபால் சகுனி தருமனுடனே போர்புரியப்புகுதல். இங்கிப்படிபோருடன்றெழுந்தசகுனியிவன்கையெரிகணையாற் பங்கப்பட்டவரசொழியப்படாதவரசர்பலரோடுஞ் சிங்கத்தனியேறெனச்செம்பொற்றேர்மேனின்றதருமனுடன் புங்கப்படையாலமர்புரியப்புகுந்தான்மதுகைப்புலிபோல்வான். |
(இ-ள்.) இங்கு - இவ்விடத்தில் [அருச்சுனனெதிரில்], (நடந்த செய்தி), இ படி -இவ்விதமாம்! (மற்றொருபக்கத்தில்), போர் உடன்று எழுந்த- போர் செய்தற்குக்கோபித்துப் புறப்பட்ட, மதுகை புலி போல்வான் - (பராக்கிரமத்தில்) வலிமையுடையபுலியை யொப்பவனான, சகுனி-, இவன் கை எரிகணையால் பங்கப்பட்ட அரசுஒழிய படாத அரசர் பலரோடுஉம் - இவ்வருச்சுனனது கையாலெய்யப்பட்டஅழிக்கவல்ல அம்புகளால் அழிவடைந்த அரசர்கள் தவிர அழிவடையாத பலஅரசர்களுடனே (கூடி), தனி சிங்கம் ஏறு என செம்பொன் தேர்மேல் நின்றதருமனுடன் - ஒப்பற்ற ஆண்சிங்கம்போலச் சிவந்த பொன்மயமான தேரின்மீதுநின்ற யுதிட்டிரனுடனே, புங்கம் படையால் அமர் புரிய - அம்புகளாகியஆயுதங்களால் போர்செய்தற்கு, புகுந்தான் - சென்றான்; (எ-று.) தருமனுக்கும் சகுனிக்கும் வலிமை முதலியவற்றில்உள்ள ஏற்றத்தாழ்வு தோன்ற,சிங்கத்தையும் புலியையும் உவமை கூறினார். பலரோடும்புகுந்தான் என்க. தனி நின்றஎன்றும் இயைக்கலாம். புங்கப்படை - அம்புகளின் தொகுதியுமாம்; தொகுதியாகியஆயுதங்களுமாம். (116) 72.- தருமபுத்திரனை கணை தூவ, சகுனி இலக்காகாமற் பின்னிடுதல். சோரத்துடனீபொருதடர்த்தசூதன்றிவைமெய்துளைத்துருவும் வீரப்பகழியுனையிவற்றால்வெல்வேனெனப்போர்வில்வாங்கி யீரக்கருணைமுகத்தண்ணலெய்தானவற்றுக்கெட்டாமற் பேரப்பேரத்தேர்கடவிப்பின்னிட்டவர்க்குமுன்னிட்டான். |
(இ-ள்.) (அதுகண்டு), ஈரம் கருணை முகத்து அண்ணல் - குளர்ச்சியான அருள் (வெளித்தோன்றும்) முகத்தையுடைய அரசனான யுதிஷ்டிரன், (சகுனியைப்பார்த்து),' நீ சோரத்துடன் பொருது அடர்த்த சூது அன்று - நீ வஞ்சனையோடு போர்செய்து வென்ற சூது போ ரன்று (இது)! இவை-, மெய் துளைத்து உருவும் வீரம் பகழி- உடம்பைத் துளைசெய்து ஊடுருவுகிற வலிமையையுடைய அம்புகள் [சூதாட்டம் ஆடும் பாசிகைகள் அல்ல]! உனை - (முன்பு என்னைச் சூதுகருவியால் வென்ற) உன்னை, இவற்றால் வெல்வேன் - (இப்பொழுது) இம்மோது கருவிகளால் சயித்திடுவேன்,' என - என்று |