பக்கம் எண் :

84பாரதம்துரோண பருவம்

     மக -பண்பாகுபெயர். 'முடிப்பான் போல்' என்றது, முடிக்க மாட்டாமை
விளக்கிற்று. பி -ம்: பேரரசர்.                                (126)

82.- சூரியாஸ்தமனவருணனை.

காரிற் குளிர்ந்து குழைந்தசெழுங் கானம் பூத்த தெனக்கவினிப்
பாரிற் பிறந்து சிறந்தவிதப் பன்மா நிறத்த பரியனைத்தும்
போரிற் புகுந்து மடிதற்குப் புறந்தந் தஞ்சிப் போவான் போற்
றேரிற் றுரகங் கொண்டோடிக் குடபா லடைந்தான் றினகரனும்.

     (இ-ள்.) காரின் - மேகத்தால் [மழைவளத்தால்], குளிர்ந்து - குளிர்ச்சிபெற்று,
குழைந்த- தளிர்த்த, செழு கானம்- செழுமையான காடு, பூத்ததுஎன - பூப்பூத்தது
போல, கவினி - அழகுபெற்று, பாரில் பிறந்து - பூமியில் தோன்றி, சிறந்தவிதம் -
சிறப்புப்பெற்ற வகையிற்சேர்ந்த, பல் மா நிறத்த - பல சிறந்த நிறங்களையுடைய,
பரிஅனைத்தும் - குதிரைகளெல்லாம், போரில் புகுந்து மடிதற்கு-யுத்தத்தில் புகுந்து
இறந்ததற்கு [இறந்தது கண்டு என்றபடி], அஞ்சி - பயந்து, புறந்தந்து -
முதுகுகொடுத்து, தேரில் துரகம் கொண்டு - (தனது) தேரிற்பூண்ட குதிரைகளை
(அழியாதபடி) உடன் கொண்டு, ஓடி போவான் போல்-, தினகரன்உம்- சூரியனும்,
குடபால் அடைந்தான்- மேற்குப் பக்கத்தைச் சேர்ந்தான்; ( எ -று.)

     சூரியன் அஸ்தமித்ததற்கு, போரில் மிகப் பலவாகிய குதிரைகளெல்லாம்
அழிதலைப் பார்த்துத் தன் குதிரைகளுக்கும் அழிவுண்டாகுமோ வென்று அஞ்சி
முன்நில்லாமல் அக்குதிரைகளுடன் விலகிச் சென்றதாகக் காரணங் கற்பித்தார்;
ஏதுத்தற்குறிப்பேற்றவணி; ஒவ்வொன்று ஒவ்வொரு நிறமும் ஒவ்வொன்றே
பலநிறமும் உடையவனவா யிருத்தலும், வநாயு பாரசீகம் காம்போசம் பாஹ்லிகம்
முதலிய தேசங்களில் பிறத்தலும், குதிரைகளுக்கு உத்தமவிலக்கணமாதலால்,
'கானம்பூத்ததெனக்கவினிப் பாரிற் பிறந்து சிறந்த பன் மாநிறத்தபரி' என்றார்;
"உருத்திகல் செய் புலி புளியங் கழுதை செந்நாயொண்பூசை நரியினுடன் கரியகாகம்,
தரித்தவழல்  புகை நிறமும் புனையவாகித் தருக்கி மருத்தெனுங் கவனத்தன்மை
யெய்தி விரித்தகதிர் வெண்டரளத் திங்கள் நீல மென் கமலத்தாது செழுங் கனகம்
காயா, அரத்தமலர்நல்ல பசுங்கிள்ளைபோல அமைந்தவொளி தயங்கிய
வங்கத்தவாகி" என்றதனாலும் குதிரைகளின் நிறங்கள் விளங்கும். கவினி -
இறந்தகால வினையெச்சம். கவின் என்றது- அவயங்களின் அமைதி, நற்சுழிகளின்
பொருத்தம் முதலியவற்றை. பி - ம்: கவினிற் சிறந்தவிந்த.            (127)

வேறு.

83.- புறந்தந்த துரியோதனன் பக்கத்தார் துரியோதனனைச்சார்ந்து
இறந்தவர்க்கு இரங்கி, பகதத்தன் வலிமையைக் கூறுபவராதல்.

அறந்தந்த மைந்தற்கும் வீமற்கும் விசயற்கு மபிமற்குமே
புறந்தந்த வயவீர ரெல்லாரு மரசன்பு றஞ்சார்பிருந்
திறந்தந்த யூகத்து வாராத மன்னர்க்கி ரங்காவழா
மறந்தந்த வேழத்து டன்பட்ட பகதத்தன் வலிகூறினார்.