பக்கம் எண் :

பதினோராம் போர்ச்சருக்கம்9

     (இ -ள்.) (பின்பு), வஞ்சம் இல்லான் - வஞ்சனையில்லாதவனாகிய சகதேவன்,-
ஒரு கணை தொடுத்து- ஓரம்பைப் பிரயோகித்து, (அதனால்), பாகன் உயிர் கவர்ந்து-
(சகுனியின் தேர்ச்) சாரதியினது உயிரை (உடம்பினின்று) பறித்து [பாகனைக்
கொன்று], உயர்த்த கேது-(அவன்தேரில்) உயரக்கட்டிய துவசத்தை, இருகணை
தொடுத்து வீழ்த்தி - இரண்டுஅம்புகளைப் பிரயோகித்து (அவற்றால்)
அறுத்துத்தள்ளி, இரதம் மா தொலைய - தேரிற்பூட்டிய குதிரைகள் (நான்கும்)
அழியும்படி, நான்கு பொரு கணை தொடுத்து - போருக்குரிய நான்கு அம்புகளைப்
பிரயோகித்து, வஞ்சன் - வஞ்சனையுடையவனான அச்சகுனியின், பொரு அரு
மார்பில் - ஒப்பில்லாத மார்பிலே, வரு ஆறு கணை தொடுத்து - (ஒன்றன்பின்
ஒன்றாக) வருகிற ஆறு அம்புகளை பிரயோகித்து, வாகை மலைந்தனன் -
வெற்றிமாலை சூடினான்; ( எ -று.)

     முதலில் இருவர்க்கும் சிறிதுபொழுது சமமாகப் போர்நிகழ பின்பு போரில்
இன்னாரை இன்னாரால் வெல்லலாயிற்று என இயல்பை யெடுத்துக் கூறுதல், மரபு.
மலைதல் - சூடுதல்: "மலைதலு மிலைதலும் வேய்தலுஞ் சூடுதல்" என்பது,
பிங்கலத்தை. வஞ்சன் என்றதை, பாகன் கேது இரதம் என்றவற்றோடுங் கூட்டுக.
பாகு - யானை தேர் குதிரைகளைச் செலுத்துந் தொழில்: அதனையுடையான் -
பாகன். தொலைய என்னும் செயவெனெச்சம், காரியப்பொருளதாதலால், எதிர்காலம்.
வாகை யென்னும் மரத்தின் மலர்களாகிய மாலையைப் போர்வெற்றிக்கு அறிகுறியாக
வீரர்கள் சூடுதல், முறைமை. வஞ்சகச்சூதில் வல்லவ னாதலால், சகுனியை 'வஞ்சன்'
என்றார்; "ஸதமாயன்" என்றார் முதனூலாரும். சகதேவன் வஞ்சமில்லானாதலை,
கீழ்ப் பழம்பொருந்து சருக்கத்திலும் கிருஷ்ணன் தூதுசருக்கத்திலும் கண்ணனுக்கும்
இவனுக்கும் நடந்த சம்பாஷணைகளாலும், (முகூர்த்தங்கேள்விச் சருக்கத்தில்)
அடுத்துக்கேட்ட துரியோதனனுக்குச் சிறிதும் வஞ்சனையின்றி நல் முகூர்த்தம்
வைத்துக்கொடுத்ததனாலும் அறிக. பி -ம் : மிலைந்தனன்.              (9)

10.-சகதேவன் கதாயுதப்போரிலும் சகுனியை வெல்லுதல்.

உகுநிணச்சேற்றிலூன்றியோடுதற்குன்னுவான்போற்
சகுனியத்தேரினின்றுமிழிந்துகைத்தண்டமேந்த
நகுலனுக்கிளையோன்றானுநகுமணிவலயத்தோண்மேன்
மிகுதிறற்றண்டுகொண்டேவென்னிடப்பொருதுமீண்டான்.

     ( இ -ள்.) உகு - (போர்க்களத்தில் இறந்த பிராணிகளின் உடம்பினின்று)
வெளிப்படுகிற, நிணம்- கொழுப்பாகிய, சேற்றில் - சேற்றிலே, ஊன்றி -(ஆதாரமாக)
ஊன்றிக்கொண்டு, ஓடுதற்கு-(தான்) ஓடிப்போவதற்கு, உன்னுவான் போல் -
எண்ணுபவன் போல, சகுனி-, அ தேரினின்றும் இழிந்து - அந்த(த் தனது)
இரதத்தினின்றும் இறங்கி, கை தண்டம் ஏந்த - கையிற் கதாயுதத்தை
எடுத்துக்கொள்ள,- (அப்பொழுது), நகுலனுக்கு இளையோன்