பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்95

தப்பறுகோடையில்வெங்கதிரோனெனவாகவநீடளவித்
துப்புறுசிந்தைமகீபர்வரூதினிசூழநடந்தனனே.

     (இ-ள்.) ஒப்பு அறு - உவமையில்லாத, போரினில் - (முந்தின நாளை)
யுத்தத்தில், வாகை புனைந்த - வெற்றி மாலையைச் சூடிய,  உதிட்டிரன்-,
அன்று -அன்றைக்கு, அடையார் - பகைவர்கள், தப்பு அற- தவறுதலில்லாதபடி,
எண்ணிய -ஆலோசித்த, எண்ணம்- நினைப்பை, உணர்ந்து - (ஒற்றரால்) அறிந்து,
தனஞ்சயனுக்குஉம் உரைத்து- (அதனை) அருச்சுனனுக்குங் கூறி, அப்பு அறு
கோடையில் வெங்கதிரோன் என - சீர்வற்றிய கோடைக்காலத்துச் சூரியன்போல
[மிக உக்கிரமாக], நீடு ஆகவம் அளவி - பெரிய போர்க்களத்தைச் சேர்ந்து, துப்பு
உறு சிந்தை மகீபர் வரூதினி சூழ வலிமைமிக்க மனத்தையுடைய அரசர்களும்
சேனைகளும் சுற்றிலும் வர, நடந்தனன்- வந்தான்; (எ-று.)- எண்ணம் -
இரண்டாங்கவியிற் கூறியது. பி -ம் : ஆகவநீள்வரிவில்.                (143)

6.- பாண்டவரின் சேனை மிகுதி.

ஈரிருதேரினர்மூவகையானையரெண்ணறுமாமிசையோ
ரோரிருநாலுடையைபிருபூமியிலுள்ளபதாதருடன்
பாரிருநாலுகிசாமுகமும்படையோடுபரந்துவரும்
பேரிருமானவரூதினியின்றிரள் பேசுறலாமளவோ.

     (இ -ள்.) ஈர் இரு தேரினர் - நால்வகைத் தேர்வீரர்களும், மூவகை யானையர்
- மூன்றுவகை யானையின் மேலேறிய வீரர்களும், எண் அறு மா மிசையோர் -
கணக்கற்ற குதிரைகளின்மே லேறிய வீரர்களும், ஓர் இரு நால் உடை ஐ இரு
பூமியில் உள்ள பதாதருடன் - பதினெட்டுத் தேசங்களிலுள்ள காலாள்வீரர்களும்
ஆகிய இவர்களோடு. பார் இரு நாலு திசாமுகம்உம் - பூமியின் எட்டுத்
திக்குக்களினிடத்திலும், படையோடு பரந்து வரும் - ஆயுதங்களோடு பரவிவருகிற,
பேர் இரு மானம் வரூதினியின் திரள் - பிரசித்தி பெற்றதும் பெரியதும்
மானத்தைக்காப்பதுமான ( பாண்டவ ) சேனையின் கூட்டம், பேசுறல் ஆம் அளவுஓ
- சொல்லுதற்கு ஏற்ற அளவுடையதோ? ( எ-று.)- அன்று; சொல்லவொண்ணாதபடி
அளவிறந்தது என்பதாம்.

     அதிரதர், மகாரதர், சமரதர், அர்த்தரதர் எனத்தேர்வீரர் நால் வகைப்படுவர்.
அதிரதர்- முழுத்தேரரசர்; அவராவார் - ஒருதேரில் ஏறிநின்று தம்தேர் குதிரை
சாரதிகளுக்கு அழிவுவாராமற் காத்துப் பலவாயிரந் தேர்வீரரோடு எதிர்த்து வேறு
துணையில்லாமலே போர் செய்து வெல்லும் வல்லமை யுடையார். அவரிற் சிறிது
தாழ்ந்தவர் - மகாரதர்; இவர் பதினோராயிரந் தேர் வீரரோடு பொருபவர். சமரதர்-
ஒரு தேர் வீரனோடு தாமும் ஒருவராய் எதிர்க்க வல்லவர். அர்த்தரதர்- அவ்வாறு
எதிர்க்குமளவில் தம் தேர்முதலியவற்றை இழந்து போம்படியானர்; இவர் இருவர்
சேர்ந்தால், ஒரு சமரதனுக்கு ஒப்பாவார். இனி, இரண்டுசக்கரம் நான்குசக்கரம் ஆறு
சக்கரம், எட்டுசக்கரம் என்றார்போலத் தேரில் நான்குவகை கூறவுங் கூடும்.