136.- துச்சாதனனைக்கண்டு வீமன் சில கூறலுறல். உருத்தின்றரசரைவரையுமுடனேகொல்வனெனவெண்ணிக் கருத்தின்படியேவிரைந்தோடுங்கவனப்புரவிக்காற்றேரிற் செருத்திண்பணைகண்முழங்கவருசெங்கோன்மன்னற்கிளையோனை மருத்தின்புதல்வன்கண்டுமழைமுகில்போலெதிர்வாய்மலர்ந்தானே. |
(இ - ள்,) உருத்து - கோபித்து, 'இன்று - இன்றைக்கு, அரசர் ஐவரைஉம் -பஞ்சபாண்டவர்களையும், உடனே - விரைவிலே, கொல்வன் - கொல்வேன்,' என -என்று, எண்ணி - நினைத்து, கருத்தின் படிஏ விரைந்து ஓடும்-(தன்)எண்ணத்தின்படியே வேகமாயோடுகிற, கவனம் புரவி - கதிகளையுடைய குதிரைகளைப் பூட்டிய, கால்-சக்கரங்களையுடைய, தேரில் - தேரின்மேல் (ஏறி), செரு - திண் பணைகள் - போருக்குரிய வலிய வாச்சியங்கள் முழங்க- பேரொலிசெய்யும்படி, வரு-வருகிற, செங்கோல் மன்னற்கு - நீதிதவறாத அரசாட்சியையுடைய துரியோதனனுக்கு, இளையோனை - அடுத்த தம்பியாகிய துச்சாதனனை, மருத்தின் புதல்வன் - வாயுகுமாரனான வீமன், கண்டு - நோக்கி, மழை முகில் போல்-மழைபொழிகின்ற மேகம் (இடிமுழங்குவது) போல, எதிர் - எதிரில், வாய் மலர்ந்தான் - வாய் திறந்து (சிலவார்த்தைகளைச்) சொல்வானானான்; (எ - று.)-அவற்றை மேல் மூன்று கவிகளிற் காண்க. கருத்தின்படி - மனோவேகமாக வென்றுமாம். கொடுங்கோன் மன்னனாகிய துரியோதனனை 'செங்கோன்மன்னன்' என்றது, இகழ்ச்சி. (227) 137.-மூன்றுகவிகள்-ஒருதொடர்:வீமன் துச்சாதனனையழிக்கப் போவதாகவீரவாதங்கூறியதைத் தெரிவிக்கும். துச்சாதனனேயுனைப்போலுஞ்சூரருளரோசூரரெலா மெச்சாநின்றார்வேத்தவையின்மேனாணீசெய்விறலாண்மை யச்சாரிரதப்போர்க்குமுனக்கார்வேறெதிருண்டம்மவிரைந் திச்சாபோகமாவிருந்தின்றோமறலிக்கிடுநாளே. |
(இ-ள்.) துச்சாதனனே-! அம்ம- கேட்பாயாக: உனைபோலும் சூரர் உளர்ஓ - உன்னை யொக்கும் வீரர்கள் வேறு உண்டோ? மேல் நாள் - முற்காலத்தில், வேந்துஅவையில் - இராசசபையில், நீ-, செய்-செய்த, விறல் ஆண்மை - வெற்றியோடுகூடிய பராக்கிரமத்தை, சூரர் எலாம் - வீரர்கள்யாவரும், மெச்சாநின்றார் -(இப்பொழுதுங்) கொண்டாடுகிறார்கள்; அச்சு ஆர் இரதம் போர்க்குஉம் - இரிசுகள்பொருந்திய தேரின்மேல் ஏறிச்செய்கிற போரிலும், உனக்கு-, எதிர் - ஒப்பு, வேறுஆர் உண்டு-வேறே யாவர் இருக்கிறார்கள்? விரைந்து - சீக்கிரமாக, இச்சா போகம்ஆக - இஷ்டப்படியே புசிக்கும்படி, மறலிக்கு - யமனுக்கு, விருந்து இடும் நாள் -(உன்னை) விருந்துணவாக அமைக்கிறநாள், இன்றோ - இன்றைக்குத்தானோ? (எ-று.) |