பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்139

கருத்து. பார்த்தன் - பிரதையின்மகன். பிரதை - குந்தி : .இது,  இங்கே
அருச்சுனனுக்குக் காரணவிடுகுறிப்பெயர்.                           (266)

176.-அருச்சுனன் விடசேனனை அம்பினாலறுத்திடுதல்.

வின்னாணும்விற்பிடித்தவெவ்விரலும்வின்னடுவு
முன்னானதும்பைமுடித்தோன்முடித்தலையும்
பின்னாகவாங்கும்பிறையம்பும்பேரமரி
லொன்னார்முனைதடிந்தோனோரம்பினாலறுத்தான்.

     (இ-ள்.) பேர் அமரில் - பெரிய யுத்தத்தில், ஒன்னார் - பகைவர்களது,
முனை- போரை, தடிந்தோன் - அழித்தவனாகிய அருச்சுனன், -முன் ஆன -
எதிரிலேவந்த, தும்பை முடித்தோன் - (போர்மாலையாகி) தும்பையைச்சூடின
விடசேனனது,பின் ஆக வாங்கும் பிறைஅம்புஉம் - (தான்) பின்னிடும்படி
எடுத்துவிடுகிறஅர்த்தசந்திர பாணங்களையும், வில் நாண்உம் - வில்லின்
நாணியையும், வில் பிடித்தவெம் விரல்உம் -வில்லைப்பிடித்த கொடிய விரலையும்,
வில் நடுஉம் - வில்லின்நடுவிடத்தையும், முடி தலைஉம் - கிரீடத்தையுடைய
தலையையும், ஓர் அம்பினால்அறுத்தான்-; (எ - று.)                   (267)

177.-விடசேனன் வீழவே
எஞ்சியவர் கர்ணன் தேர்க்காலைச் சூழ்தல்.

வீழ்ந்தான் விடசேனன் வீரரெல்லாம் வெஞ்சமரிற்
றாழ்ந்தார் புறங்கொடுத்தார் தந்தைதடந் தேர்க்காலைச்
சூழ்ந்தார் சிலவீரர் தோலா தெதிர்நடந்து
வாழ்ந்தார் சுரராகி வான்மதர் மெய்கலந்தே.

     (இ-ள்.) விடசேனன்-, வீழ்ந்தான் - இறந்துவிழுந்தான்; (அதனால்),
வீரர்எல்லாம்-கௌரவசேனைவீரர்யாவரும், வெம் சமரில் - கொடிய போரில்,
தாழ்ந்தார் - தோற்று, புறம் கொடுத்தார் - முதுகிட்டுப்போய், தந்தை தட தேர்
காலை-(தமது சேனாபதியாகிய) அவன் தந்தையான கர்ணனது பெரிய தேரின்
சக்கரத்தை, சூழ்ந்தார் -  சுற்றிக்கொண்டார்கள்; சிலவீரர்-, தோலாது - 
தோற்காமல், எதிர் நடந்து  - எதிரே சென்று பொருது, சுரர் ஆகி -
தேவர்களாய், வான மாதர்மெய் கலந்து-தேவலோகத்துப் பெண்களது உடம்பைத்
தழுவி, வாழ்ந்தார் -(வீரசுவர்க்கத்தில்) வாழ்ந்தார்கள்; (எ - று.)-பி-ம்;
வேந்தரெலாம்.                                                 (268)

வேறு.

178.-கர்ணன்புத்திரசோகத்தால் மூர்ச்சித்துவிழ, சல்லியன்
தேற்றுதலும் அசுவத்தாமன் துரியோதனனிடைச்
செல்லுதலும்.

சாய்ந்த னன்களத் தருச்சுனன் சரத்தினாற் றனயனென்
                                    றவற்றந்த
வேந்த னுங்கருத் தழிந்துதன் றேர்மிசை வீழ்ந்தன
                                னவன்பொற்றே
ரூர்ந்த சல்லியன் றேற்றினன் பற்பல வுரைகளா
                                 லவ்வெல்லைப்
பாந்த ளங்கொடிப் பார்த்திவ னின்றுழிச் சென்றனன்
                                   பரித்தாமன்.