பக்கம் எண் :

94பாரதம்கன்ன பருவம்

வலித்து - நாணியை இழுத்து, ஓர் இரு வாளி ஏவி - ஒப்பற்ற இரண்டு
பாணங்களைப் பிரயோகித்து, ஒர் இமைப்பின் - ஒரு கணப்பொழுதினுள்ளே, புயம்
கீறி - தோள்களைப் பிளந்து, சிலைஉம் வீழ்த்தான் - வில்லையுந் துணித்துத்
தள்ளினான்; (எ -று.) பி - ம்: நிருபரேறு.                             (172)

82.- கர்ணன் வேறுவில் கொண்டு பலரையுங்கொல்லக் குருதியாறு
பெருகல்.

வேறோர்வரிவில்வெயிலோன்மகன்வெய்தின்வாங்கி
நூறோடுநூறுதொடுத்தேவுநுதிகொளம்பாற்
கூறோரிரண்டுபடயாரையுங்கொன்றபோழ்தி
னாறோடிவிட்டதடையாருடலற்றசோரி.

     (இ-ள்.) வெயிலோன் மகன் - சூரியகுமாரனான கர்ணன், வேறு ஓர் வரி
வில் -வேறொரு கட்டமைந்த வில்லை, வெய்தின் வாங்கி - விரைவாக
எடுத்துவளைத்து,நூறோடு நூறு - பலநூற்றுக்கணக்காக, தொடுத்து ஏவும் -
தொடுத்து விடுகிற, நுதிகொள் அம்பால் - கூர்மையைக்கொண்ட அம்புகளினால்,
கூறு ஓர் இரண்டு பட - (உடல்வேறு உயிர்வேறாக) இரண்டு கூறுபடும்படி,
யாரைஉம் - எல்லோரையும், [பலரையும்என்றபடி], கொன்ற போழ்தின் -,
அடையார் - பகைவரது, உடல் -உடம்பினின்றும், அற்ற - வெளிப்பட்ட, சோரி -
இரத்தம், ஆறுஓடிவிட்டது -ஆறாகிப்பெருகி விட்டது; (எ - று.)          (173)

83.-தம்பிமாருடன் சேர்ந்து பொருத த்ருஷ்டத்யும்நன்
தேரொடு வில்லையும் இழத்தல்.

சாதேவன்றண்டதரன்றண்டகன்சித்ரதேவன்
றீதேதுமில்லாத்திறற்சாத்தகிசித்ரகீர்த்தி
தாதேறுதார்த்தம்பியரோடிகற்றண்டநாதன்
மீதேறுதேருந்தகர்ந்தொண்சுடர்வில்லுமற்றான்.

     (இ - ள்.) சாதேவன்-, தண்டதரன்-, தண்டகன் -, சித்ர தேவன்-, தீது
ஏதுஉம்இல்லா திறல் - குற்றஞ் சிறிதுமில்லாத வல்லமையையுடைய, சாத்தகி-,
சித்ரகீர்த்தி-,(என்னும் பெயரையுடைய), தாது ஏறு தார் - பூந்தாதுகள் பொருந்திய
போர்மாலையையுடைய, தம்பியரோடு - (தன்) தம்பிமார்களுடன், இகல் தண்டம்
நாதன் - வலிமையையுடைய (பாண்டவ) சேனைக்குத் தலைவனான திட்டத்துய்மன்,
(கர்ணனெய்த அம்புகளால்), மீது ஏறு தேர்உம் தகர்ந்து - (தான்) மேலே ஏறிய
தேரும் பிளந்து, ஒண் சுடர் வில்உம் அற்றான் - மிக்கஒளியையுடைய வில்லுந்
துணிப்பட்டான்; (எ - று.)

     தம்பிமார்களுந் தேர்தகர்ந்து வில்லுமற்றா ரென்பதாம். ஒண்சுடர் -
ஒருபொருட்பன்மொழி. திறலுக்குத் தீது - தோல்வி. இங்கேகூறிய சாதேவன்
முதலியஅறுவர் - தண்டநாதனென்று பேர்பெற்ற ஒருவனுக்குத் தம்பிமாரென்றும்,
தண்டநாதன் அண்ணனென்றும். இவர்கள்யாவரும் ஒருபக்கத்து வீமனால் தோற்றா
ரென்றும் இப்பாட்டிற்குப் பொருள் கூறினாருமுளர்: இஃது பொருத்தமாகத்
தோன்றவில்லை.                                                (174)