நீரினுள்ளேபுகுந்து, அரு மறை புகன்றாலும் - அருமையான மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருந்தாலும்,-நின் - உன்னுடைய, அரவம் பைம் பொன் கொடி - பாம்பின் வடிவமெழுதிய பசும்பொன்னினாலமைந்த தண்டத்தையுடையதுவசம், மாறி-ஒழிந்து, பேர் மாறி - (உனது) பெயர் ஒழிந்து, குலாவும்மாலைமுடி மாறி-விளங்குகிற மாலையைத் தரித்த தலை துணிபட்டொழிந்து, ஒரு தனிமா முத்தம் நெடுகுடை நிழல் கீழ் ஆளும் முந்நீர் படி மாறி ஒழிய - ஒப்பற்றதனித்த சிறந்த முத்துக்களாலமைத்த பெரிய ஒற்றைவெண்கொற்றக்குடையின்நிழலிலிருந்து அரசாளுகிற கடல்சூழ்ந்த (உனது) இராச்சியமும் (உன்னைவிட்டு) நீங்கினாலொழிய, விடேன் - (உன்னை நான்) விடமாட்டேன்;(ஆதலால்), இ பகல் மறைபட போம் முன்னே - இந்தப்பகற் பொழுதுமறையச்செல்லுதற்குமுன்னே, புறப்படாய் - வெளிப்பட்டு வருவாயாக; (எ - று.) சூரியன் அஸ்தமிக்குமுன்னே யென்றகருத்தை, 'மறைபட இப்பகல் போமுன்னே' என்று குறித்தார். நீர்சூழ்ந்த நிலவுலகை விட்டு நீ தொலைந்தாலொழிய உன்னை விடக்கடவேனல்லாத நான் நீரிற் புகுந்த மாத்திரத்தால் விட்டிடுவேனோ வென்பான், 'நீரிடைப்புக்கு அருமறை புகன்றாலும்' என்றும், 'முந்நீர்ப்படிமாறி யொழிய விடேன்' என்றுங் கூறினனென்க. புகன்றாலும் விடேன் என இயையும். அரவம், அம் - சாரியை. பொன் - பொற்காம்புக்குக் கருவியாகுபெயர். முந்நீர் - உலகத்தைப்படைத்தல் காத்தல் அழித்த லென்னும் மூன்று நீர்மையையுடையது; கடல்:பண்புத்தொகையன்மொழி. (133) 134. | ஓதப்பைங்கடல்புடைசூழுலகாளுமுடிவேந்தருறுபோரஞ்சிப், பாதத்தில்வீழ்வரோபாரரசர்கேட்டாலும்பழியேயன்றோ, மேதக்கவரமகளிர்கைப்பிடிக்கவிந்திரனும்விண்ணோர்தாமும், காதத்திலெதிர் கொள்ளக் கற்பகநீழலில்வைப்பன்கலங்கலம்மா. |
(இ -ள்.) ஓதம் - அலைகளையுடைய, பைங் கடல் - பசிய கடலினால், புடை சூழ் - எல்லாப்பக்கங்களிலுஞ் சூழப்பட்ட, உலகு - பூமியை, ஆளும் -அரசாளுகிற, முடி வேந்தர் - கிரீடாதிபதிகளான அரசர்கள், உறு போர் அஞ்சி- மிக்க போருக்குப் பயந்து, பாதத்தில் வீழ்வரோ - காலில் [நீரில்] விழுவார்களோ? பார் அரசர் கேட்டாலும் - (உன்னைப் போலப்] பூமியை ஆளுகிற அரசர் செவியுற்றாலும், பழியே அன்றோ - (இது) பழிப்பேயாகுமன்றோ? மேதக்க - மேன்மைபொருந்திய, அரசமகளிர்- தேவமாதரது, கை - கையை, பிடிக்க - (நீ) பிடிக்கும்படியாகவும், இந்திரனும் விண்ணோர்தாமும் காதத்தில் எதிர்கொள்ள - தேவேந்திரனும் தேவர்களும் காததூரத்தில் (உன்னை) எதிர்கொண்டு வந்து அழைத்து உபசரிக்கும்படியாகவும், கற்பகம் நீழலின் வைப்பன் - (உன்னைக்) கல்பகவிருட்சங்களின் நிழலில் வைப்பேன்; கலங்கல் - (நீ) கலக்கமடையாதே;(எ - று.)-அம்மா - ஈற்றசை.
பாதம்என்ற சொல் - காலென்றும், நீரென்றும் பொருள்படுதலால், அச்சொற்சிலேடைகொண்ட சமத்காரங் கற்பித்தவாறு. |