பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்109

வேறு.

144.-வீமனை நோக்கித்துரியோதனன் 'எந்த ஆயுதத்தாற்
போர்செய்யவேண்டும்?' என்றல்.

கொண்டனிகர் திருமேனிக்கோபால னிவையுரைப்ப
வண்டுபடி வலம்புரித்தார்வயவேந்தன் மனங்களித்துத்
திண்டிறல்வீ மனைநோக்கிச்சிலைமுதலாம் படைகொண்டோ
தண்டெனுநின் படைகொண்டோசமர்விளைப்பாய் சாற்றென்றான்.

     (இ -ள்.) கொண்டல்-நீர்கொண்ட காளமேகத்தை, நிகர்-போன்ற,
திருமேனி - திருவடிவத்தையுடைய, கோபாலன் - கண்ணபிரான், இவை
உரைப்ப -இவ்வார்த்தைகளைச் சொல்ல,-வண்டு படி - வண்டுகள் படிந்து
மொய்க்கிற,வலம்புரி தார் - நஞ்சாவட்டை மலர்மாலையையுடைய,
வயவேந்தன் -வலிமையுள்ள துரியோதனராசன், மனம் களித்து - மனத்தில்
உற்சாகங்கொண்டு, திண் திறல் வீமனை நோக்கி, மிக்கவல்லமையுடைய
வீமனைப்பார்த்து, 'சிலை முதல் ஆம் படை கொண்டோ - வில்முதலான
ஆயுதங்களினாலோ, தண்டு எனும் நின் படை கொண்டோ - உனக்குரிய
கதையென்னும் ஆயுதத்தினாலோ, சமர்விளைப்பாய் - (இப்பொழுது) போர்
செய்வாய்? சாற்று - சொல்,' என்றான் - என்று வினவினான்; (எ - று.)

    திண்திறல் - ஒருபொருட்பன்மொழி, வீமன் எல்லாவாயுதங்களினும்
கதாயுதத்தில் மிகப்பயின்றவனாதலால், 'தண்டெனும் நின் படைகொண்டு'
என்றான்.

    இதுமுதல் இருபத்திரண்டுகவிகள் - பெரும்பாலும் நாற்சீர்களும்
காய்ச்சீர்களாகிய அளவடி நான்குகொண்ட கலிவிருத்தங்கள்;  இவற்றை
நாற்சீர் நாலடித்தரவு கொச்சகமென்றலு மொன்று.             (144)

145.-வீமன் கதாயுதத்தால்போர்செய்ய வேண்டுமென்றல்.

நினகரத்தின்மிசையேந்திநின்றதுநீள்கதையாகில்
எனகரத்திற்றண்டுகொண்டேயானுமுடற்றுவனென்றான்
தனகரற்குங்குமரற்குந்தண்டுழாய்முடியவற்கும்
தினகரற்குமேலானசிந்தையுடன்செருச்செய்வோன்.

     (இ -ள்) தனகரற்கும்-குபேரனுக்கும், குமரற்கும் - முருகக்
கடவுளுக்கும்,தண் துழாய் முடியவற்கும் - குளிர்ந்த திருத்துழாய்
மாலையைச் சூடியதிருமுடியையுடைய கண்ணனுக்கும், தினகரற்கும் -
சூரியனுக்கும், மேலான -நன்குமதிக்கத்தக்க, சிந்தையுடன் -
மனவுறுதியுடனே, செருசெய்வோன் - போர்செய்பவனாகிய வீமன்,
(துரியோதனனை நோக்கி), 'நின கரத்தின் மிசை -உன்னுடைய கையிலே,
ஏந்தி நின்றது - தரிக்கப்பட்டுள்ளது, நீள் கதை ஆகில்- நீண்ட
கதாயுதமேயாதலால், என கரத்தில் தண்டு கொண்டே - என்னுடைய
கையிலுள்ள கதாயுதத்தைக்கொண்டே, யானும் உடற்றுவன் - நானும் போர்
செய்வேன்,' என்றான் - என்று விடை கூறினான்; (எ - று.)