155.-கண்ணன் கூறியவுடன்யாவரும் அவ்விடஞ் செல்லுதல். அத்தலத்தின்றிசைநோக்கியனீகினியுமனைவோரும் முத்தநெடுங்குடைநிழற்றமூவகைவாகனமேறிக் கொத்துடனே நெறிபடரக்கொற்றவர்கொற்றவன்றானும் கைத்தலமுந்தண்டமுமாக்கால்வேகமுறச்சென்றான். |
(இ -ள்.) அ தலத்தின் திசை நோக்கி - அந்த இடமுள்ள திக்கைக் குறித்து, அனீகினியும்-சேனைகளும், அனைவோரும் - (பாண்டவர் முதலிய அரசர்கள்) எல்லோரும், முத்தம் நெடு குடை நிழற்ற - முத்துக்களாலாகிய பெரிய வெண்கொற்றக்குடைநிழலைச்செய்ய, மூவகை வாகனம்ஏறி-(யானை தேர் குதிரை என) மூன்றுவகைப்பட்ட வாகனங்களிலேறிக்கொண்டு, கொத்துடனே நெறி படர-கூட்டமாக வழிச்செல்ல, கொற்றவர் கொற்றவன் தானும் - இராசராசனான துரியோதனனும், கைத்தலமும் தண்டமும் ஆ-கையுங்கதையுமாக, கால் வேகம் உற சென்றான்-கால்களால் வேகமாக நடந்துசென்றான்; (எ - று.) துரியோதனனுக்குச் சேனையுந் துணையும் வாகனமு மில்லாமை, நான்காமடியில் விளங்கும். 'கால்வேகமுற' என்பதற்கு - காற்றின் வேகமாக என்றும் பொருள்கொள்ளலாம். (155) 156.-தருமனைப்பார்த்துத்துரியோதனன் பொறாமைப்படுதல். தம்பியர்கள்புடைசூழத்தருமன்மகன்பல்லியமும் பம்பியெழநடக்கின்றபரிசுதனைமுகநோக்கி எம்பியருமெங்கிளையுமிறக்கவிருந்தனமென்றே வெம்பிமனமிகத்தளர்ந்தான்விதிதனக்குவிதிபோல்வான். |
(இ -ள்.) தம்பியர்கள் புடை சூழ - தம்பிமார்நால்வரும் பக்கங்களிலேசூழ்ந்துவரவும், பல் இயமும் பம்பி எழ-பலவகைப்பட்ட வாத்தியங்களும்நெருங்கி மிக்கொலிக்கவும், தருமன் மகன் - தருமபுத்திரன், நடக்கின்ற -சிறப்பாகச்செல்லுகிற, பரிசுதனை - விதத்தை, முகம் நோக்கி - எதிரிலேபார்த்து, - விதிதனக்குவிதி போல்வான் - ஊழ்வினைக்கும் ஓர்ஊழ்வினைபோல்பவனான துரியோதனன்,-'எம்பியரும் - எமது தம்பிமார்களும், எம்கிளையும் - எமது பந்துவர்க்கமும், இறக்க-, இருந்தனம்- (நாம் மாத்திரம்தனித்து) நின்றோம்' என்றே - என்று எண்ணியே, மிக மனம் வெம்பிதளர்ந்தான் - மிகவும் மனந்தவித்துத் தளர்ச்சியடைந்தான்; (எ - று.) 'விதிதனக்கும் விதிபோல்வான்' என்றது, ஊழ்வினையின்படிதான் தொழில்செய்கின்றனனென்பதின்றித் தனது செயலின்படி ஊழ்வினை நிகழ்வ தென்னும்படி தான் நினைத்தவாறெல்லாம் இது வரையில் தொழில் செய்து தடையற முடித்துவந்தவனென்றவாறு; அன்றி, யாவரையும் வருத்துகிற ஊழும் அஞ்சத்தக்க தீச்செயலையுடையவனென்பாருமுளர். 'விதி தனக்கு' என்பதில் உயர்வுசிறப் |