கொண்டு,சூழ்நிற்ப - சூழ எனினுமாம். கலங்கள் பல இனம் - பெரும் படகுசிறுபடகு தோணிமுதலியன. காளிந்தி - களிந்த மென்னும் மலையினின்றுஉண்டாவது எனக் காரணப்பொருள்படும். வலம் - வெற்றியுமாம். படைத்தலைவர் - திட்டத்துய்மனாதியர் - சக்கரவாளம் என்பது, வாள மெனமுதற்குறையாய்நின்றது. (162) 163.-இருவரும் போர்க்குச்சித்தராய்ச் சிங்கநாதஞ் செய்தல். பூங்கவனத்துட்புகுந்துபூணனைத்துந்திருத்திமணி ஓங்கலிவையிரண்டுயிர்பெற்றுடற்றுகின்றதெனவுரைப்ப வாங்கியதண்டமுந்தோளுமலர்க்கரமும்வலிகூர ஆங்குலகுசெவிடுபடவடலரிநாதமுஞ்செய்தார். |
(இ -ள்.) பூங்கவனத்துள் புகுந்து - (அங்குள்ளதொரு) பூஞ்சோலை யினுள்ளே சென்று, பூண் அனைத்தும் திருத்தி - (தந்தமது) ஆபரணங்களை யெல்லாம் ஒழுங்குபட அமைத்துக்கொண்டு, மணி ஓங்கல் இவை இரண்டு உயிர்பெற்று உடற்றுகின்றது என உரைப்ப - அழகியமலைகளிரண்டு உயிர்பெற்றுப் போர்செய்கிற விதமென்று உவமைகூறும்படி, வாங்கிய தண்டமும் தோளும் மலர் கரமும் வலி கூர - கைக்கொண்ட கதாயுதமும் தோள்களும் தாமரைமலர்போன்ற கைகளும் வலிமைமிக, ஆங்கு - அப்பொழுது, (அவ்விருவரும்), உலகு செவிடுபட - உலகமுழுதும் (ஒலிமிகுதியைப் பொறுக்கமாட்டாமற்) செவிடாம்படி, அடல்அரி நாதமும் செய்தார் - வலிமைக்குரிய சிங்கநாதத்தையுஞ் செய்தார்கள்; (எ - று.) பூண்திருத்துதல், போர்செய்கையில் தடையாகாமைப் பொருட்டென்க. பூங்கவனம் - பூங்காவன மென்பதன் குறுக்கல். (163) 164.-இதுவும், அடுத்த கவியும்- வீமனது வீரவாதம். கந்தநறுமலர்க்கூந்தற்காந்தாரிபுதல்வனையக் குந்திமகன்முகநோக்கிக்கொடுஞ்சொற்கள்சிலசொல்வான் கந்தருவரன்றுன்னைக்கட்டியதோள்வலிகொண்டோ சிந்தைதனின்வலிகொண்டோசெருச்செயநீபுகுந்தாயே. |
(இ -ள்.) கந்தம் - இயற்கைமணமுள்ளதும், நறு மலர் - பரிமளமுள்ள பூக்களைச் சூடியதுமான, கூந்தல் - தலைமயிரையுடைய, காந்தாரி - காந்தாரியினது, புதல்வனை - புத்திரனான துரியோதனனை, அ குந்திமகன்- குந்திதேவியின்குமாரனான அவ்வீமன், முகம் நோக்கி - முகத்தைப் பார்த்து, கொடு சொற்கள் சில சொல்வான் - கொடிய சிலவார்த்தைகளைக் கூறுவான்; (அவையாவையெனில்),-அன்று - முன்னொரு சமயத்தில், உன்னை-, கந்தருவர் - (சித்திரசேனன் முதலிய கந்தர்வர்கள், கட்டிய கயிறுகொண்டு கட்டின தோள் வலி கொண்டோ - தோள்களின் வலிமையைக் கொண்டுதானோ, (அன்றி), சிந்தைதனின் வலி கொண்டோ - மனத்திலுள்ள துணிவு கொண்டுதானோ, நீ செரு செய புகுந்தாய் - நீ (என்னோடு) போர்செய்யத் தொடங்கினாய்? (எ - று.) |