எம்மால் எளிதில் வெல்லப்பட்ட சித்திரசேனன் முதலியோரால் எளிதிற்கட்டப்பட்ட தோள்களையுடையை யாதலால், நீ என்னோடு போர் செய்தற்குஏற்ற புஜபல முடையாயல்லை; ஆராய்ச்சியில்லாத உன்மனத்தில் விடாப்பிடியாகக்கொண்டுள்ள துணிவினாலேயே போர்தொடங்குகின்றாய் போலுமென இகழ்ந்தவாறு. காந்தாரி - காந்தார தேசத்து அரசன் மகள். மூன்றாமடியிற் குறித்த கதை.-பாண்டவர் வனவாசஞ்செய்கையில் ஒருநாள், துரியோதனன் தன்பெருமையைக் காட்டிப் பாண்டவரை அழுங்கச்செய்யவேண்டு மென்று தீயசிந்தனை கொண்டு வெகு ஆடம்பரத்துடனே குடும்பத்தோடுஞ் சென்று அவர்கள்வசிக்கிற இடத்துக்கு அருகில் ஒருகுளத்தின்கரையிலே தங்கி உண்ணுதல் பூசுதல் ஆடல் பாடல்களைநடப்பித்தல் முதலியபலவிளையாட்டுக்களைச்செய்துகொண்டு களித்திருந்தபோதுஇந்திரனேவலால் சித்திரசேனனென்னுங் கந்தருவராசன் மற்றும்பலதேவசாதியருடனே வந்து துரியோதனனைக் கயிற்றாற்கட்டி வானத்தில்தூக்கிக்கொண்டு போகப் பிரயத்தனப்பட, அப்பொழுது கர்ணன் முதலாயினார்எதிர்த்துப்பொருது தோற்றுஓட, பின்பு துரியோதனனது பரிதாபமானநிலைமையை அவனது பரிவாரத்தால் அறிந்த தருமபுத்திரனது கட்டளையால்வீமன் அருச்சுனனோடு சென்று கந்தருவரைவென்று துரியோதனனை மீடடு்க்கட்டவிழ்த்து விடுவித்தனன் என்பது ஆரணியபருவத்து வரலாறு. (164) 165. | இடிப்பதுமின்றிருகதையுமென்கதையாலிடியுண்டு துடிப்பதுமின்றுன்னுடலமுயிர்துறக்கங்குடியேற முடிப்பதுமின்றழற்பிளந்தாண் முகிலோதிமுகில்பொழிநீர் குடிப்பதுமின்றொருவேனின்குருதிநீர்குடித்தாலே. |
(இ -ள்.) இரு கதையும் - (நம் இருவரது கையிலுள்ள) கதாயுதங்கள் இரண்டும், இடிப்பதும் - தாக்குவதும், இன்று - இன்றைக்கே: என் கதையால் இடியுண்டு - எனதுகதையினால் தாக்கப்பட்டு, உயிர் துறக்கம் குடி ஏற - (உனது) உயிர் வீரசுவர்க்கத்தில் ஏறிச்செல்ல, உன் உடலம் துடிப்பதும் - உனதுஉடம்பு துடிப்பதும், இன்று - இன்றைக்கே; அழல் பிறந்தாள் - யாகாக்கினியினின்று தோன்றியவளான திரௌபதி, முகில் ஓதி - மேகம்போலக்கரிய கூந்தலை, முடிப்பதும் - முடித்துக்கொள்வதும், இன்று - இன்றைக்கே; ஒருவேன் - ஒப்பற்றவனான நான், நின் குருதி நீர் குடித்தாலே- உனது இரத்தப்பெருக்கைக் குடித்தபின்பே, முகில் பொழி நீர் குடிப்பதும் - மேகம் பொழிகிற தண்ணீரைக் குடிப்பதும், இன்று - இன்றைக்கே; (எ - று.) திரௌபதியை 'அழற்பிறந்தாள்' என்ற விவரம்:- அங்கிவேசமுனிவனிடத்தில் துரோணாசாரியனுடன் வில்வித்தையைக் கற்று வந்தபொழுது 'எனக்கு இராச்சியங்கிடைத்தபின் பாதி உனக்குப் பங்கிட்டுக் கொடுப்பேன் என்று அவனுக்கு வாக்குத்தத்தஞ்செய்திருந்த பாஞ்சாலராசனாகிய துருபதன், பின்பு ஒருகாலத்தில் அவன் வந்து தன்குழந்தைக்குப் பாலுக்காகப் பசுவேண்டுமென்று கேட்ட |