- புகைகிளம்பும்படி, தீ விழிப்பர் - நெருப்புப் புறப்பட உக்கிரமாகக்கண்விழித்துப் பார்ப்பார்கள்; புனை கிரிபோலே - அழகிய மலைகள் போலுள்ள, மார்பொடு - மார்பும், தோள் இணை - இரண்டு தோள்களும், தடிப்பர் - பருத்துப் பூரிப்பார்கள்; இகல் புரி நூலோடு - போர் செய்யும் வகையைக் கூறுகிற நூல்களின்படி, கற்ற - தாம் பயின்ற, சாரிகை - சஞ்சாரக்கிரமத்தால், இடம் வலமே போவர் - இடசாரியும் வலசாரியுமாகச் செல்வார்கள்; வட்டம் ஆகுவர் - மண்டலமாகச் சுழன்று வருவார்கள்; முகடு உற - ஆகாயமுகட்டையளாவ, மீதே குதிப்பர் - மேலெழும்புவார்கள்; பார் மகள் முதுகு உற - பூமிதேவியினது முதுகு வருந்தும்படி, மீள - மீண்டும், நேரே குதிப்பர் - நேராகவே குதிப்பார்கள்; (எ - று.) வாய்க்குத்தாமரைமலர், செம்மைமென்மை யழகுகளால் உவமம். இனி, மலர் - ஆம்பல்மலருமாம்; அதனையும் வாய்க்கு உவமைகூறுதலுண்டு. மார்பொடு தோளிணை தடுப்பர் - "உயர்திணைதொடர்ந்த பொருள்முதலாறும்,அதனொடுசார்த்தின் அத்திணை முடிபின" என்றபடி உயர்திணையைச் சார்ந்தஅஃறிணையாகிய சினைப்பெயர் அவ்வுயர்திணைமுடிபையேகொண்டதிணைவழுவமைதி. சாரிகை - நடைவிகற்பம். வலசாரி - வலப்புறமாகச்செல்லுதல். இடசாரி - இடப்புறமாகச் செல்லுதல், வட்டம் - மண்டலமாகச்சுற்றிவருதல். (169)
170 | ஒருகையினாலேசுழற்றிவான்முகடுடைபடைமேலேகிளப்பி நீள்கதை, இருநிலமீதேமறித்துவீழுமுனிருகையினாலேதரிப்பர் சார்பொடு, விரைவுடனேதாளமொத்தியோடுவர்விசையுடனேகாலொதுக் கிமீளுவர், பரிதிகள்போலேவிருத்தமாமுறை பவுரிகொளாவீசிநிற்பர் வீரரே. |
(இ -ள்.) வீரர் - அவ்விரண்டு வீரர்களும், நீள் கதை - நீண்டகதாயுதங்களை, ஒரு கையினாலே சுழற்றி - ஒருகையாற் சுற்றி, வான் முகடு உடைபட மேலே கிளப்பி - அண்டகோளத்தின் மேல்முகடு உடைபடும்படி அதனை மேலேவீசி, இரு நிலம் மீதே மறித்து வீழுமுன் - பெரிய தரையின்மேல் மீண்டு விழுவதற்குமுன்பே, இரு கையினாலே சார்பொடுதரிப்பர் - (தமது) இரண்டு கைகளாலும் ஆதாரமாக ஏந்திக்கொள்வார்கள்;விரைவுடனே - வேகத்தோடு, தாளம் ஒத்தி - தாளவடைவு போட்டுக்கொண்டு,ஓடுவர் - விலகியோடுவார்கள்: விசையுடனே - வேகத்துடனே, கால் ஒதுக்கி -கால்களை ஒதுங்கவைத்துக்கொண்டு, மீளுவர் - திரும்புவார்கள்; பரிதிகள்போலே - பரிவேஷங்கள் போல, விருத்தம் ஆம் முறை -வட்டமாகிய நிலைமையுண்டாம்படி, பவுரிகொளா - சுழற்சியைக்கொண்டு, வீசி நிற்பர் - (கதைகளைச்) சுழற்றிக்கொண்டு நிற்பார்கள்; (எ - று.) பவுரிகொள்ளுதல் - தாம்சுழலுதல். பரிதி - சூரியனைச்சூழ்ந்து அருகில்தோன்றும் வட்டம்; ஊர்கோளெனப்படும். சுழன்று கொண்டேகதையைச்சுழற்றும்போது கதைச்சுழற்சியின் வட்டத்துக்குப் பரிவேஷமும், சுழற்றும்வீரனுக்குச் சூரியனும் உவமையெனக் காண்க. பரிதி - சூரியமண்டலமுமாம். இரண்டாமடியில் 'எறிகையினாலே தரிப்பர்மேலவர்' என்றும் பாடம். (170) |