பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்145

சந்தியாவெகுளா என்ற சொற்கள், அடுத்கவியில் வரும் 'ஓடினன்' என்ற
முற்றைக்கொண்டு முடியும்.

     கொடியஅக்கிரமச் செய்கையைக் கண்ணெதிரிற் கண்டால் பெரியோர்
மனம் பொறாராதலாலும் அது மரண வேதனைக்குச் சமானமான வருத்தம்
விளைக்கு மாதலாலும், 'எனது உயிர் நீங்கினாற்போலாயிற்று' என்றான்.
அரியோடுடன் மேவிய நஞ்சுபோலும் நரேசர் - பகையழித்தலில் தவறாத
பராக்கிரமத்தாற் கொடியவரென்றபடி; யாவரிடத்தாயினும் குற்றம்கண்டபோது
கண்ணோட்டமின்றித் தண்டிப்பதில்கடியவரென்றவாறுமாம்.  அரி - ஹரி;
அகப்பட்ட பொருளையழிப்பது.  எம்பிரானை, முராரியை, மாயனை என்ற
ஒருபொருட் பலபெயர்கள் - 'உடையான்' என்ற ஒரு முடிக்குஞ் சொல்லைக்
கொண்டன.  திருமாலினது அம்சமும் ஆதிசேஷனது அம்சமுங்கூடிப் பிறந்த
பலராமன், பரமபதத்தில் எம்பெருமானது திருமேனியில் ஐக்கியமும்,
அப்பெருமானுக்குச் சகலவிதகைங்கரியங்களையுஞ்செய்யும்
நித்தியத்தொண்டனா யிருந்த நிலைமையும், இதற்கு முந்தியதான
ராமாவதாரத்தில் அப்பெருமானுக்குத் தான் தம்பியாகப் பிறந்திருந்த
தன்மையும்போலன்றி, இப்பிறப்பில் தமையனாகத் தோன்றியுள்ள
சிறப்புடையவனென்பார்'மாயனையிம்ப ரேழ்கடல் சூழ்புவி
மேலொருதம்பியாவுடையான்' என்றார். சந்தியா - அருகில் வந்து, நம்பி -
அண்மைவிளி; ஆதலின், இயல்பாய்நின்றது;[நன் - பெயர் 56.] நம்பி -
ஆண்பாற் சிறப்புப்பெயர்: ஆடவரிற்சிறந்தவனென்று பொருள்: இதற்கு -
'நம்முதனிலையாக நமக்குஇன்னானென்னும் பொருள்பட வருவதோர்
உயர்ச்சிச்சொல்' என்று பொருளும்இலக்கணமுங்கூறியுள்ளார் ஆசிரியர்
நச்சினார்க்கினியர்:  இப்பொருளில், பி -முறைப்பெயர் விகுதி.  இனி,
யாவராலும் நம்பிச்சரணமடையத்தக்கவ னென்றும்பொருள்கொள்ளலாம்; 
இப்பொருளில், இ - செயப்படுபொருள்விகுதி.  இச்சொல்லுக்கு -
பூரணனென்று பொருள் கூறுதல், சம்பிரதாயம்.  நரேசர் - நர +
ஈசர்; மனிதர்க்குத் தலைவர்.  கம்பியா - கம்பமென்னும்வடமொழிப்
பெயரினடியாப்பிறந்த இறந்தகாலவினையெச்சம்; நடுங்கி யென்றுபொருள்.

    இச்செய்யுள் - கீழ் 178 - ஆங் கவிபோன்ற கட்டளைக்கலிப்பா, தந்த
தானன தானன தானன தந்த தானன தானன தானன - என்பது இதற்குச்
சந்தக்குழிப்பு.                                               (191)

வேறு.

192.-பலராமன் வீரவாதங்கூறிவீமனோடு போர்செய்யத்
தொடங்குதல்.

கதையெடுத்துடற்றுமாடவர்கள்கடிதடத்தினுக்குமேலொழிய
அதிர்வுறப்புடைப்பரோதொடையிலடிபடத்துகைப்பரோமுடியில்
எதிரியைச்சலத்தினாலென்விழியெதிர்வழக்கழித்தபாவனனை
முதுகிடப்புடைப்பல்யானுமெனமுசலகைத்தலத்தொடோடினனே.