இது - சிலேடைமூலமான ஒற்றுமை நயத்தை அங்கமாகக்கொண்டு வந்த வேற்றுமையணி. செவ்விரவி என்பதில், செம்மை - இனம் விலக்கவந்ததல்லாமல் இயற்கைபற்றி வந்த அடைமொழி: [நன் - பொது.50] சகம் என்பது மோனைநோக்கிச் செகம் எனத் திரிந்தது. காவலன்-காத்தலில் வல்லவன். இரவலோர் - இரத்தலில்வல்லவர். இரவு - இராத்திரியைக் குறிக்கையில், இராஎன்னுங் குறியதன்கீழ் ஆ குறுகி உகரமேற்றதும், இரத்தலைக் குறிக்கையில்தொழிற்பெயருமாம். வள்ளல் - வண்மையை யுடையவன். பறவைப்பொதுப்பெயராகிய 'வி' என்ற வடசொல்-இங்குச் சிறப்பாய், வண்டைக் குறித்தது; [பொதுப்பெயர் சிறப்புப்பொருளை யுணர்த்துதலும், சிறப்புப்பெயர் பொதுப்பொருளை யுணர்த்துதலும், ஒருவகைப் பாஷை நடை]. இந்த 'வி' என்ற சொல்லே நீண்டு தமிழில் 'வீ' என்றும் நிற்கும். ஓசையின்பத்திற்காக 'விவ்வரவு' என உயிர்முன் இடையெழுத்து இரட்டிற்று. தருமத்தினின்றும் தவறினவர்களுக்குத் தக்க தண்டனைசெய்து தருமத்தைக் காத்தலால், யமனுக்குத் தருமனென்று பெயர்; 'தந்தையே மைந்தனாகிறான்' என்னும் நூல் வழக்குப்பற்றி, தருமபுத்திரனை 'தருமன்' என்றது. அலமந்தார், அலமா - பகுதி. இதுமுதல் ஒன்பது கவிகள்-முதல்நான்குசீரும் காய்ச்சீர்களும், மற்றை யிரண்டும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட அறுசீராசிரிய விருத்தங்கள். (11) 12.-கர்ணனைக் கொன்றதனால்அருச்சுனன் கொண்ட சோகம். சாயை வெறுத்தன ளவளிற்றலத்தேவிமிகவெறுத்தா டபனனீன்ற, சேயை வெறுத்துயிர்கவர்ந்தானுறவறியான் றெயித்தியர்போர் செயித்தானென்று, மாயைவெறுத்திட விளைத்தமாயோனைவெறுத்தனன் வன்மனத்தியான, யாயை வெறுத்தனன்பின்னைவிதியை வெறுத்தனன் வீமற்கிளையகோவே. |
(இ - ள்.) 'தெயித்தியர் போர் செயித்தான் - அசுரர்களுடைய போரை வென்றவனான அருச்சுனன், உறவு அறியான் - (தங்களுக்குங் கர்ணனுக்கும் உள்ள) உறவுமுறைமையை அறியாதவனாய், தபனன் ஈன்ற சேயை-சூரியன் பெற்ற குமாரனான கர்ணனை, வெறுத்து உயிர் கவர்ந்தான் - பகைத்துக் கொன்றான்', என்று - என்றகாரணத்தால், சாயை வெறுத்தனள் - (சூரியன்மனைவியான) சாயாதேவி வெறுப்புக்கொண்டாள்; அவளின்- அவளைக்காட்டிலும், தலம் தேவி-பூமிதேவி, மிக வெறுத்தாள்-மிகவும் வெறுப்புக்கொண்டாள்; வீமற்கு இளைய கோ - வீமனுக்கு அடுத்ததம்பியான அருச்சுனன்,- வெறுத்திட மாயை விளைத்த மாயோனை-(பலரும்) வெறுக்கும்படிமிகுதியாக வஞ்சனையைச்செய்த கிருஷ்ணனை, வெறுத்தனன் - வெறுத்தான்:வல் மனத்தி ஆன - கடினசித்தமுடையவளான, யாயை - தன்தாயானகுந்தியை, வெறுத்தனன்-; பின்னை - |