பக்கம் எண் :

172பாரதம்சௌப்திக பருவம்

16.-அசுவத்தாமன் தனியேஅனைவரையும் அழித்த திறமை.

புகலரும்பதினெண்பூமிமுற்றுடையபூபதிகளுமவர்படைத்த
இகலருந்தந்திதேர்பரிகாலாளென்பனயாவையுஞ்சேரப்
பகலருஞ்சமரிற்பதின்மடங்காகப் பாதிநாளிரவினிற்படுத்தான்
தகலருங்கேள்வித்தாமனேதாமச் சடையவன்றனயனாதலினால்.

     (இ -ள்.) தகல் அரு கேள்வி - தகுதியான அரிய
நூற்கேள்விகளையுடைய, தாமனே - அசுவத்தாமனொருவனே,-(தான்), தாமம்
சடையவன் தனயன் ஆதலினால் - (கொன்றை) மாலையைத் தரித்த
சடையையுடைய சிவபிரானது குமாரனாதலால்,-புகல் அரு பதினெண் பூமி
முற்று உடைய பூபதிகளும் - வருணித்துச் சொல்லுதற்கரிய பதினெட்டுவகை
நாடுகள் முழுவதையுந் தமதாகவுடைய அரசர்களையும், அவர் படைத்த -
அவர்கள் (தமதாகப்) பெற்றுள்ள, இகல் அரு தந்தி தேர் பரி காலாள்
என்பனயாவையும் - எதிர்த்தற்கு அரிய யானைகள் தேர்கள் குதிரைகள்
பதாதிகள்என்னும் நால்வகைச் சேனைகளெல்லாவற்றையும், சேர-ஒருசேர,
பகல் அருசமரில் பதின்மடங்கு ஆக - பகற்பொழுதில் நடந்த
அரியபோரினும்பத்துமடங்கு அதிகமாக, பாதிநாள் இரவினில் - அந்நாளின்
நடுராத்திரியிலே,படுத்தான் - அழித்திட்டான்; (எ - று.)

    அழித்தற்றொழிற்கடவுளான சிவபிரானது குமாரனாதலால்,
அசுவத்தாமனொருவன்தானே மிகப் பலவீரர்களையும் அவர்களுடைய
அளவிறந்த சேனைகளையும் அழித்திட்டன னென்பதாம்.  கீழ்நடந்த
பதினெட்டுநாட் பகற்போர்களிலும் பலபகைவர் திரண்டு கூடிப்பொருதும்
அழித்திடப்படாதவரை அன்றையொருநாளிரவின் ஒருபகுதியில் ஒருவன்
அழித்த திறத்தை மூன்றாமடியாற் குறித்தார்.  பதினெண்பூமி - சிங்களம்
சோனகம் சாவகம் சீனம் துளுவம் குடகம் கொங்கணம் கன்னடம் கொல்லம்
தெலுங்கம் கலிங்கம் வங்கம் கங்கம் மகதம் கடாரம் கௌடம் கோசலம்
திரவிடம் என்பன.                                         (220)

17.-அசுவத்தாமன்உபபாண்டவர் தலைகளுடன்
துரியோதனனை யடைதல்.

உள்ளியபடியேகடுஞ்சினங்கன்றி யுள்ளவர்யாரையுமுருக்கித்,
துள்ளியவிடைபோற்செருக்கியப்புரத்தின்றுவாரநின்றவரையுங்
                                          கூட்டித்,
தெள்ளியகுமரர்சென்னியைந்தினையுந்தேவருந்திகைத்திடத்
                                           தூக்கி,
வெள்ளியங்குருவந்தெழுமுனேகுருவின்மிகுகுலவேந்தை
                                    வந்தடைந்தான்.

     (இ -ள்.) (அசுவத்தாமன்), உள்ளியபடியே - தான் நினைத்தபடியே,
கடுசினம் கன்றி - மிக்க கோபம் வெதும்பப்பெற்று, உள்ளவர் யாரையும்
முருக்கி - (அப்படைவீட்டில்) உள்ளாரெல்லாரையும் அழித்து, துள்ளிய
விடைபோல் செருக்கி - துள்ளிக் குதிக்குந்தன்மையுள்ள காளையெருது
போலக்களிப்புக்கொண்டு, அ புரத்தின் துவாரம் நின்றவரையும் கூட்டி -
அந்தப்படைவீட்டின் வாயிலிற்காத்து