பக்கம் எண் :

174பாரதம்சௌப்திக பருவம்

சென்னி யென்று சிறுவர்தஞ்சென்னியை
முன்னர் வைத்தன னான்முனிமைந்தனே.

     (இ -ள்.) சொன்ன சிங்கம் துவசனை ஆதி ஆ - (யாவராலுஞ்
சிறப்பித்துக்) கூறப்பட்ட சிங்கக்கொடியையுடைய வீமனை முதலாகவுள்ள,
மன்னர் ஐவரும் - பாண்டவராசர்கள் ஐந்துபேரும், மாண்டனர் -
இறந்தொழிந்தார்கள்; அவர் சென்னி - அவர்களுடைய தலைகளாகும்
(இவை),என்று - என்று சொல்லி, முனி மைந்தன் - துரோணபுத்திரனான
அசுவத்தாமன், சிறுவர்தம் சென்னியை - அவர்கள் குமாரர்களுடைய
தலைகளை, முன்னர் வைத்தனன் - துரியோதனனெதிரிலே வைத்தான்;
(எ -று.)-மற்று, ஆல் - அசைகள்.

    சொன்ன - உனக்குப் பழம்பகைவ னென்று சொல்லப்பட்ட
எனினுமாம்.                                            (223)

20.-துரியோதனன் அவற்றைநோக்கிப் பாண்டவர் தலைகளல்ல
எனல்.

வைத்தசென்னியை நோக்கி வயாவுறு
சித்தமன்னவன் றேறிச் சிறார்முகம்
தத்தமன்புடைத் தந்தையர் வாண்முகம்
ஒத்தவாகுமிஃ துண்மையென் றோதினான்.

     (இ -ள்.) வயா உறு சித்தம் - ஆசைமிக்க மனத்தையுடைய,
மன்னவன்- துரியோதனன், தேறி - (அசுவத்தாமன் வார்த்தையைக்
கேட்டவுடனே சிறிது)தேறுதலடைந்து, வைத்த சென்னியை நோக்கி -
(அவன் தன் எதிரிலே)வைத்த தலைகளைப் பார்த்து, (உடனே அவனை
நோக்கி), சிறார் முகம் -(இவை அப்பாண்டவர்களுடைய)
புத்திரர்களின்முகங்களே; தத்தம் அன்புஉடை தந்தையர் வாள் முகம் ஒத்த
ஆகும் - தந்தமது அன்புள்ளதகப்பன்மார்களது ஒளியுள்ள முகங்களைப்
போன்றுள்ளனவாம்; இஃதுஉண்மை - இது மெய், என்று ஓதினான் - என்று
சொன்னான்; (எ - று.)

    துரியோதனன் உயிர்போகுமளவும் தனியரசாட்சிச் செய்வதில் மிக்க
விருப்பங் கொண்டிருந்தமையும், அப்படி தணியாத பேராசையுடையவன்
அசுவத்தாமன் வார்த்தையைக்கேட்டு மரணவேதனையிலுஞ்சிறிது
தேறுதலடைந்தமையுந் தோன்ற, 'வயாவுறுசித்த மன்னவன் தேறி' என்றார்.
                                                      (224)

21.-இதுமுதல் ஐந்து கவிகள் -துரியோதனன் இரங்கல்.

ஓதும் வேந்துக் கொருமொழியுஞ்சொலான்
வேத பண்டித னிற்கவவ்வீரனைப்
பாதகஞ் செய்கை பார்ப்பனமாக்களுக்
கேதமேதமிதென்செய்தவாறெனா.