(இ -ள்.) ஓதும் வேந்துக்கு - (இவ்வாறு உண்மையை எடுத்துக்) கூறின துரியோதனராசனுக்கு, ஒரு மொழியும் சொலான் - யாதோர் எதிர்மொழியுஞ் சொல்லமாட்டாதவனாய், வேதபண்டிதன் நிற்க - வேதங்களில் வல்லவனான அசுவத்தாமன் மௌனமாய்நிற்க, அ வீரனை - அந்தவீரனான அசுவத்தாமனைப் பார்த்து, 'பாதகம் செய்கை - தீவினைசெய்தல், பார்ப்பனமாக்களுக்கு - அந்தணர்களுக்கு, ஏதம் ஏதம் - மிக்ககுற்றமாம்; (அங்ஙனமாக), இது செய்த ஆறு என் - (நீ) இதனைச் செய்தவிதம் என்னே?'எனா - என்று சொல்லி, - (எ - று.) - 'எனா' என்றது, மேல் 230-ஆம்கவியில் 'என்று பன்மொழி கூறி' என்று முடியும்: ஆதலால்; இவை குளகம்.'என் செய்தவாறே' என்றும் பாடம். பார்ப்பனமாக்கள் - பார்ப்பாராகிய மனிதரென இருபெயரொட்டு. ஏதம்ஏதம் - அடுக்கு, மிகுதிவிளக்கும் இது - குமாரரைக் கொன்றது. தூங்கிக்கொண்டிருக்கையில் கொன்றிட்ட வீரமிலாதானை வீரனென்றது, இகழ்ச்சியென்னலாம். வீரனை எனா என்று இயையும். (225) 22. | துன்னுபாரதந்தோன்றியநாண்முதன் மன்னரோடமலைந்தனைவாளியால் சொன்னபாலர்மகுடந்துணித்ததின்று என்னவீரியமென்னினைந்தென்செய்தாய். |
(இ -ள்.) துன்னு - நெருங்கிய, பாரதம் - பாரதயுத்தம், தோன்றிய நாள்முதல் - தொடங்கியநாள் முதலாக [பதினெட்டு நாள்களிலும்], மன்னர் - (பலவகை) அரசர்கள், ஓட - தோற்று ஓடும்படி, வாளியால் - அம்புகளால்,மலைந்தனை - போர்செய்தாய்; (அப்படிப்பட்ட நீ), இன்று - இன்றைத்தினத்தில், சொன்ன - கீழ்க்குறிக்கப்பட்ட, பாலர் -பாண்டவகுமாரர்களின், மகுடம் - தலையை, துணித்தது - அறுத்திட்டது, என்ன வீரியம் - என்ன பராக்கிரமம்? என்நினைந்து என் செய்தாய் - என்னஎண்ணம் எண்ணி என்ன காரியஞ் செய்தாய்? (எ - று.)
அசுவத்தாமனது பலபராக்கிரமங்களை யெடுத்துக் கூறி அவனைப் புகழ்ந்து நீ செய்த காரியம் பாலஹத்திதோஷமாக முடிந்ததேயென்றவாறு. என் நினைந்து என்செய்தாய் - தொன்றுதொட்டுத் தீராப்பகைவராயுள்ள பாண்டவரைக் கொல்வதாகக் கருதி யாதொரு களங்கமுமில்லாத அவர்மக்களைக் கொன்றிட்டாயே! என்று இரங்கினான். மகுடம் - தானியாகுபெயராய்த் தலையைக் குறித்தது. (226) 23. | இருகுலத்திலெமக்குமவர்க்குமிங்கு ஒருகுலத்தினுமுண்டெனவில்லையாற் குருகுலத்தின்கொழுந்தினைக்கிள்ளினை வருகுலத்தொருமாசறுமைந்தனே. |
(இ -ள்.) இரு குலத்தில் - (திருதராட்டிரகுமாரர் பாண்டுகுமாரர் என்கிற)இரண்டு மரபுகளுள், எமக்கும் - (திருதராட்டிர குமாரராகிய) |