பக்கம் எண் :

24பாரதம்சல்லிய பருவம்

    அருச்சுனன் முதலிய மூவரையும் வெவ்வேறுவீரர்களுடன் போர்செய்யச்
செலுத்திவிட்டு நீயும் வீமனும் ஒருங்கேசென்று சல்லியனை யெதிர்த்துப்
பொருது உயிர்வாங்கவெண்டு மென்றான்.  பார்த்தன் - பிருதையின் மகன்;
வடமொழி தத்திதாந்தநாமம்; (பிருதை யென்பது - குந்தியின் இயற்பெயர்:)
பார்த்தன் என்றது - சிறப்பாய், அருச்சுனனைக் குறிக்கும்.  பரி, அசுவம்
என்பன - குதிரையாகிய ஒருபொருளைக் குறிப்பன வாதலால்,
அசுவத்தாமாவைப் பரித்தாமா வென்றார்.  அசுவத்தாம னென்பது -
குதிரையைப் பிறப்பிடமாகவுடையவனென்று பொருள்படும்.  மாத்திரி -
மத்திரதேசத்து அரசன்மகள்; சௌபலன் - சுபலனென்னும் அரசனது
குமாரன். நகுலன் குதிரைத்தொழிலில் வல்லவனாதல், அஜ்ஞாதவாசத்திலும்
பிரசித்தம்.                                            (19)

வேறு.

20.-திட்டத்துய்மன் அணிவகுத்தலும்,இருசேனையும் போர்
தொடங்கலும்.

கிருபை யாலுயர் கேசவ னிங்கிதக்கேள்விகளுணர்வுறக்கேட்டுத்,
துருப தேயனுந் தன்பெருஞ் சேனையைத்துன்றிய வியூகமாத்
                                           தொடுத்து,
நிருபர் யாவருஞ் சூழ்வரத்தாழ்சலநிதியென விதியென நின்றான்,
பொருபதாகினியிரண்டினுமுனையுறப்போர் வல்லோர் தூசிகள்
                                          பொரவே.

இதுவும், அடுத்தகவியும் - குளகம்.

     (இ -ள்.) கிருபையால் உயர் - அருளினாற் சிறந்த, கேசவன் -
கண்ணபிரானது, இங்கிதம் கேள்விகள் - குறிப்பான உபதேச வார்த்தைகளை,
உணர்வுஉற கேட்டு - மனத்தெளிவோடு (தருமபுத்திரன்) கேட்டவுடன்.-
துருபதேயனும் - துருபதராச குமாரனான திருஷ்டத்யும்நனும், தன்பெரு
சேனையை - தன் பக்கத்துப் பெரிய சேனையை, துன்றிய வியூகம் ஆ
தொடுத்து - நெருங்கிய படைவகுப்பாக அணிவகுத்து, நிருபர் யாவரும்சூழ்வர
- அரசர்களெல்லோரும் (தன்னைச்) சுற்றிலும்வர, (அவர்கள் நடுவில்), தாழ்
சலநிதி  என - ஆழ்ந்த கடல்போலவும், விதி என - பிரமன்போலவும்,
நின்றான் - (சிறப்பாக) நின்றான்; (பின்பு), பொரு பதாகினி இரண்டினும் -
போருக்குச்சித்தமான இரண்டுசேனைகளிலும், போர் வல்லோர் தூசிகள் -
போரில்வல்ல வீரர்களது முன்னணிச் சேனைகள், முனை உற பொர -
முற்படப் போர்செய்ய, (எ - று.)-மேல் 'பூபதி தருமன் வந்தான்' என
முடியும்.

     எதற்குங்கலங்காதகம்பீரமான தோற்றத்துக்கு ஆழ்ந்த கடலையும்,
ஒழுங்காகப்படைவகுத்த திறமைக்குப் படைத்தற்கடவுளான பிரமனையும்
உவமை கூறினார்.  கேசவன் என்ற வடமொழித்திருநாமம் - பிரமனையும்
சிவனையும் தன் அங்கத்திற் கொண்டவனென்றும் [க - பிரமன், ஈச - சிவன்]
மயிர் முடியழகுடையவ னென்றும் [கேசம் - தலைமயிர்முடி] கேசியென்னும்
அசுரனைக் கொன்றவ னென்றுங்