பக்கம் எண் :

72பாரதம்சல்லிய பருவம்

89.- சகுனி வீமனையெதிர்க்க, வீமன் தேரினின்று இழிதல்.

எனமகீபன்வாடாமலினியவாய்மையேகூறி
அனிகராசியோடேகியமரில்வீமன் மேன் மோத
முனைகொள் வீமனாமாறு முறுவல்வாணிலாவீச
மனனிலோடுதேர்மாறிவலிகொள்பாரிலானானே.

     (இ -ள்.) என - என்று, மகீபன் வாடாமல் - துரியோதனராசன்
வாட்டமொழியும்படி, இனிய வாய்மையே கூறி - இனிமையான
வார்த்தைகளையே சொல்லி, (சகுனி). அனிகம் ராசியோடு ஏகி-
சேனைத்தொகுதியுடனே சென்று, அமரில் - போர்க்களத்தில், வீமன் மேல்
மோத -வீமன்மீது தாக்க,- முனை கொள் வீமன்- உக்கிரங் கொண்ட வீமன,்-
முறுவல் வாள் நிலா வீச - (தனது) புன்சிரிப்பு ஒளியையுடைய
சந்திரகாந்திபோன்ற காந்தியை வெளிவீச,-ஆம் ஆறு - சமயத்துக்கு ஏற்றபடி,
மனனில் ஓடு தேர்மாறி வலி கொள்பாரில் ஆனான் - மனம்போல விரைந்து
செல்லுகிற தேரைவிட்டு வலிமைகொண்ட தரையில் இறங்கினான்; (எ - று.)

    வில்முதலிய படைக்கலங்களைக் கொண்டன்றித் தன்கைவலிமை
கொண்டேபோர்செய்து விரைவிற் பகையழிக்கக் கருதினனாதலால், அதற்கு
ஏற்குமாறு தேரினின்று நிலத்திற் குதித்தனனென்பார், 'ஆமாறு தேர்மாறிப்
பாரிலானான்' என்றார்.  சிரிக்குங்காலத்துப் பற்களின் வெள்ளொளி
வெளித்தோன்றுதலை 'முறுவல்வாணிலா வீச' என்றது,  நினைத்த
மாத்திரத்தில்மனம் எவ்வளவுதூரத்திலுள்ள பொருளினிடத்துஞ்சென்று
சேர்தலால்,மனோவேகம் எல்லாவேகத்தினுஞ் சிறந்த உவமையாம். வாய்மை
யென்பதில்,வாய் என்பது - சொல்லுக்குக் கருவியாகுபெயராம்; அதன்மேல்
'மை' விகுதி -வேறு பொருளுணர்த்தாமையால், பகுதிப்பொருள்விகுதியாம். 
அமர் -போர்க்களம்: தானியாகுபெயர்.                        (89)

90.- சகுனியின் சேனைவீமனால் அழிதல்.

தரணிதாழுமாபோதுசகுனிசேனைவானேற
முரணுவாகுவான்மோதி முடுகுநீள்கதாபாணி
அரணியாகவேயேனலடவியானதானீடும்
இரணபூமிமால்யானையிரதம்வாசிகாலாளே.

     (இ -ள்.) தரணி தாழும் ஆ(று) - பூமி குழிபடும்படி, போது -
திரண்டுவருகிற, சகுனிசேனை - சகுனியின்சேனை, வான்ஏற-இறந்து
வீரசுவர்க்கஞ்சேரும்படி, முரணு வாகுவால் மோதி - வலிமைகொண்ட
தோள்களால் தாக்கி, முடுகும் - நெருங்கிச்செல்லுகிற, நீள் கதாபாணி -
நிண்ட கதையைக் கையிலுடையவீமன், அரணி ஆக -
தீக்கடைகோல்போல்ஆக,-நீடும் இரணிபூமி - நீண்டபோர்க்களத்திலுள்ள,
மால் யானை இரதம் வாசி காலாள்- பெரிய யானைகளும் தேர்களும்
குதிரைகளும் காலாள்களுமாகியஎதிர்ச்சேனை, ஏனல் அடவி ஆனது -
தினைகாடுபோலாயிற்று; (எ - று.)-ஆல் - ஈ.ற்றசை.