(இ -ள்.) தூய - பரிசுத்தியுடையதும், நலம் தரு - எல்லா நன்மைகளையுந் தருவதுமான, கங்கை என-கங்காநதிபோல, பலசுரரும் தோய் - தேவர்கள் பலரும்வந்து நீராடப்பெற்ற, பாய - பரவியுள்ள, தடந்தனில் - ஒருதடாகத்தில், மூழ்கினன் - மூழ்கிநின்று, அ மறை பயில்வேன் என்று - அந்த மந்திரத்தை ஜபிப்பேனென்று, ஆயும் - ஆராய்கிற, மனம் - எண்ணத்தை, கொடு - கொண்டு, சே அடி முன் பினது ஆ ஏகி - சிவந்த தன்கால்களை முன்பின்னாக மாற வைத்துச் சென்று வெள் திரை வாரியில் சேயவன் மூழ்கிய செயல் ஒத்தான் - வெண்மையான அலைகளையுடைய கடலிலே சிவந்த ஒளியையுடைய சூரியன் முழுகின செய்கையைப் போன்றான் [ஒரு தடாகத்தின் நீரினுள்ளே மூழ்கி மறைந்தா னென்றபடி]; (எ - று.) எவரும்அறியாமல் ஒரு குளத்தினுள்ளே மூழ்கி மறைந்து நின்று அந்த மந்திரத்தை உருவிட்டு ஜபித்து அதன் சித்தியைப் பெற்று மீண்டு அதனால் யாவரையும் பிழைப்பிப்பேனென்று ஒரு குளத்தினுள்ளே இறங்கினன் துரியோதனனென்பதாம். மனிதசஞ்சாரம் இல்லாததொரு வனதடாகத்தினுள்ளேதான் இறங்கியிருத்தலைப் பின்பு பகைவர்கள் தனதுஇறங்குமுகமாயுள்ளகாலடிகளின் அடையாளத்தால் அறிந்திடக் கூடுமென்பதை ஆலோசித்து,அங்ஙனம் அறியலாகாதபடி வஞ்சிக்கும்பொருட்டுத் துரியோதனன் ஏறுமுகமாகஅமையும்படி தன் கால்களை முன்பின்னாகத் திருப்பி வைத்துக்கொண்டு பின்முன்னாக நடந்து சென்று அந்நீர்நிலையினுள் இறங்கினா னென்ற கருத்தை'சேவடி முன்பினதாவேகி' என்பதனால் வெளியிட்டார்; மேல் 116-ஆங்கவியில் "ஏறிய பாதம்போல விறங்கிய பாதம் நோக்கி" எனவருவதுங் காண்க. இதனால், துரியோதனனது வஞ்சனைக் கருத்தும் வெளியாம். நான்காமடியிற் கூறிய உவமையால், துரியோதனனுடம்பில் விளங்குகிற க்ஷத்திரியதேஜசின் மிகுதியோடு அந்நீர்நிலையின் பரப்பும் ஆழமும் நன்கு விளங்கும். பாய -பரவிய; இப்பெயரெச்சத்தில், பாவு - பகுதி, அது ஈறு தொக்கது; ய் - காலமுணர்த்தும் இடைநிலை, அ - விகுதி. சேயவன் - செந்நிறமுடையவன். வாரி - நீர்: கடலுக்கு இலக்கணை. (103) வேறு. 104.-இதுவும், அடுத்தகவியும்- துரியோதனன் தவஞ் செய்யும்வகை. கம்பித்து வந்த புலனைந்துங்கலக்க மாற வெம்பித் தடங்கிமனஞ்சித்தொடு மேவல் கூரத் தம்பித்த தோயத்திடைவாயுவுந் தம்ப மாகக் கும்பித்து ஞானப்பெருந்தீபங் கொளுத்தி னானே. |
(இ -ள்.) கம்பித்து வந்த - (இவ்வளவு நாளாய்ப் பல விஷயங்களிலும்) சலநமடைந்துவந்த, புலன் ஐந்தும் - ஐம்பொறிகளும், கலக்கம் மாற - (இப்பொழுது) கலக்கமொழியவும், - வெம்பித்து |