பக்கம் எண் :

94பாரதம்சல்லிய பருவம்

அன்றிகல்வருணன்கூறுமாகுமென்றறிஞர்சொல்லத்
துன்றியவடிவத்தோடுமடங்கினான்றோயத்தூடே.

     (இ -ள்.) என்று இவை போல்வ - என்ற இவைபோல்வனவாகிய, பல்
நூறு - பலநூறுவார்த்தைகளை, இயம்பவும் - (அசுவத்தாமன் முதலியோர்)
கூறவும், இராசராசன் - அரசர்க்கரசனான துரியோதனன், ஒன்றினும்கவலை
செல்லா உணர்வு உடை உளத்தன் ஆகி - ஒருவிஷயத்திலும் கவலை
செல்லாத அறிவையுடைய மனத்தையுடையவனாய், அன்று - அப்பொழுது,
இகல் வருணன் கூறுஉம்ஆகும் என்று அறிஞர் சொல்ல - வலிமையுடைய
வருணனது அமிசமுமாவன் இவனென்று அறிவுடையார் சொல்லும்படி,
துன்றியவடிவத்தோடும் தோயத்தூடே அடங்கினான் - பொருந்திய
வடிவத்துடன்நீரினுள்ளே ஒடுங்கியிருந்தான்; (எ - று.)

    வேறுபாடுதோன்றாதபடி யாதொரு துன்பமுமின்றி நீரில் ஒன்றி
நின்றனனென்பார், இங்ஙனங்கூறினார்;  'வருணன் கூறுமாகும்' என்ற
உம்மை -திருமாலினமிசமேயன்றி என்றபொருளைத் தருதலால், இறந்தது
தழுவிய எச்சம்:அரசன், திருமாலின் அம்சமென்பது, நூல்களில் பிரசித்தம். 
வருணன் -மேற்குத்திக்குப்பாலகன்; நீர்க்கடவுள்.  மடங்கினான் என்றும்
பதம்பிரிக்கலாம்.                                         (122)

123. பின்பு அசுவத்தாமன்முதலியோர் மீளுதல்.

உரைத்தனவுரைகட்கெல்லாமுத்தரமுரைசெய்யாத
வரைத்தடந்தோளானெஞ்சின்வலிமையைவலிதினெண்ணி
நிரைத்தவெங்கதிர்கொள்வாளிநெடுஞ்சிலைத்துரோணன்மைந்தன்
விரைத்தொடைக்கிருதனோடுமாதுலனோடுமீண்டான்.

     (இ -ள்.) உரைத்தன உரைகட்கு எல்லாம் - (இவ்வாறு)
சொன்னவையான வார்த்தைகளுக்கெல்லாம், உத்தரம் உரை செய்யாத -
மறுமொழி கூறாத, வரை தட தோளான் - மலைபோன்ற பெரிய
தோள்களையுடைய துரியோதனனது, நெஞ்சின் வலிமையை - மனத்தின்
உறுதியை, வலிதின் எண்ணி - நன்றாகநினைத்து,- நிரைத்த - வரிசைப்பட்ட,
வெம் - கொடிய, கதிர் கொள்வாளி-கூர்நுனியைக்கொண்ட அம்புகளை
யெய்கிற, நெடு சிலை - நீண்டவில்லையுடைய, துரோணன் மைந்தன் -
துரோணனது புத்திரனான அசுவத்தாமன், விரை தொடை கிருதனோடும் -
நறுமணத்தையுடைய பூமாலையைத் தரித்த கிருதவர்மாவினுடனும்,
மாதுலனோடும் - தன்மாமனான கிருபாசாரியனுடனும், மீண்டான் -
திரும்பிச்சென்றான்; (எ - று.)

     எண்ணிமீண்டா னென இயையும்.                       (123)

124.-இனிப் பாண்டவர்செய்தி கூறுவார்:- பாண்டவர்
துரியோதனன் சென்றவிடத்தை யறியாமை.

மற்றவர்மீண்டபின்னர்மாதவக்குந்தியீன்ற
கொற்றவர்தாமுஞ்சேனைக்குழாத்தொடுந்தங்களோடும்
செற்றவர்தம்மையெல்லாஞ்சேணுலகேறவேற்றிப்
பொற்றவரிராசராசன்புக்குழியறிவுறாமல்.