தாமம் வேல்வீமன் - ஒளியையுடைய வேலாயுதத்தையுடைய வீமசேனன்,- பொரும் அரவு உயர்த்தோன் - போர்செய்யவல்ல பாம்பின் வடிவ மெழுதிய கொடியை உயரவெடுத்தவனான துரியோதனன், இன்று - இப்பொழுது, ஓர் பொய்கையில் புகுந்தான் - ஒரு தடாகத்தினுட் பிரவேசித்துள்ளான், என்று-, தெருமரு மிருகம் மாக்கள் - (எங்குந்) திரியுந்தன்மையுள்ள விலங்கு வேட்டைக்காரர்கள் செப்பினர் - சொன்னார்கள், என்று கொண்டு - என்று, சொன்னான்-; (எ - று.) விவேகத்திற்குறைவுபட்டவரை மாக்களென்றும், அதில் மிக்கவரை மக்களென்றும் கூறுதல், மரபு. தெருமா - பகுதி; தெருமரல் - சுற்றியலைதல். 'என்றுகொண்டு' என்பதில், கொண்டு - அசை. தாமவேல் - போர்மாலையைத்தரித்த வேல் எனினுமாம். (127) 128.-இதுவும் வருங்கவியும் -குளகம்: கண்ணன் ஊகித்துக்கூறுதல். என்றலுந்தன்னைச்சேர்ந்தோரிடுக்கணுமிளைப்புமாற்ற நின்றவெம்பெருமானேமிநெடியவனருளிச்செய்வான் அன்றயன்முகத்தினாற்பெற்றநேகமாமுனிவர்தம்பால் நின்றமந்திரமொன்றுண்டுநிகரதற்கில்லைவேறே. |
(இ -ள்.) என்றலும் - என்று (வீமன்) கூறியவளவிலே,- தன்னை சேர்ந்தோர் இடுக்கணும் இளைப்பும் மாற்றநின்ற எம்பெருமான் - தன்னைச் சரணமடைந்தவர்களது துன்பத்தையும் மனச் சோர்வையும் நீக்குதற்பொருட்டு நின்ற எமது தலைவனான, நேமி நெடியவன் - சக்கராயுதத்தையுடைய பெரியோனான கண்ணபிரான், அருளிச்செய்வான் - கூறியருள்வான்: (எங்ஙனமெனின்),-அன்று - அக்காலத்தில் [முன்னாளி லென்றபடி], அயன் முகத்தினால் பெற்று - பிரமன்மூலமாகப் பெறப்பட்டு, அநேக மா முனிவர் தம்பால் - சிறந்த பல முனிவர்களிடத்தில், நின்ற - தங்கிய, மந்திரம் ஒன்று- ஒரு மந்திரம், உண்டு-உளது; அதற்கு நிகர் வேறு இல்லை - அதற்குச் சமானம் (அதுவேயல்லாது) வேறு இல்லை; (எ - று.) துன்பம் நேருங்காலத்துக் கண் மலர்ச்சியின்றி இடுங்குதலால், துன்பத்துக்கு இடுக்கணென்று பெயர்; இடுங்குகண் என்பது இடுக்கணென விகாரப்பட்டதென்க. எம் என்ற பன்மை - எல்லாவுயிர்களையும் உளப்படுத்தியது. திருமாலினது சக்கரத்துக்குச் சுதர்சநமென்று பெயர். உண்டு,இல்லை, வேறு - இருதிணையைம்பால் மூவிடத்துக்கும் பொது. (128) 129. | வெஞ்சமரிறந்தோரெல்லாமீண்டுயிர்பெறுவரந்த வஞ்சகமறைமுன்பெற்றான்வலம்புரித்தாரினானும் நெஞ்சமர்வலிமையோடுநீரிடைமூழ்கிநீங்கள் துஞ்சிடப்பொருவானின்னஞ்சூழ்ந்தனன்போலுமென்றான். |
(இ -ள்.) வெம் சமர் இறந்தோர் எல்லாம் - கொடிய போரில் இறந்தவர்யாவரும், மீண்டு உயிர் பெறுவர் - (அம்மந்திர) |