பக்கம் எண் :

238

Tamil Virtual University

சரடு பண்ணித்தாரேன்

மாமன், மச்சான் முறையுள்ளவர்கள் கிராமங்களிலே கல்யாணமாகாத பருவப் பெண்களையோ, கல்யாணமான வாலிபப் பெண்களையோ, கிள்ளுவது, கூச்சம் உண்டாக்குவது போன்ற விளையாட்டுகள் செய்வது வழக்கம். பெண்களும் அது போலவே சாணியைக் கரைத்து ஊற்றுவது போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவது வழக்கம். இவ்விளையாட்டுக்கள் “விளையாட்டுக்கார முறையுள்ளவர்கள்” என்று கொங்கு நாட்டில் கூறுவார்கள். அதுபோல முறையுள்ள ஒருவன் கல்யாணமாகாத ஒரு பெண்ணைப் பார்த்துப் பாடுகிறான்.

பழங்காலத்தில் ‘குழு மணமுறை’ வழக்காயிருந்தது. ஒரு குழுவில் உள்ள எல்லாப் பெண்களுக்கும், முறையுள்ள ஆண்களுக்கும் மண உறவு இருந்தநிலை அது. அதன் எச்சம், உறவுமுறைக் கேளிக்கைகளாக இன்றும் நிலவுகின்றன. அது போல முறையுள்ள ஒருவன் கல்யாணமாகாத ஒரு பெண்ணைப் பார்த்துப் பாடுகிறான்.

“என்னை நீ, எப்போ கண்ணாலம் பண்ணிக்கொள்ளப் போகிறாய்” என்று கேட்கிறான். அதற்கு அந்தப் பெண் “எனக்கு நீ கொப்பும், சரடும் பண்ணிப் போட கையில் காசு வைத்திருக்கிறாயா?” என்று குத்தலாகக் கேட்கிறாள்.

“கூடலூருச் சந்தைக்கும் சமயவரம் சந்தைக்கும், கூடையும், சரடும் எடுத்துக்கொண்டு விற்கப் போகிறாய்ல்லவா? அது விற்பனையாகட்டும். உனக்கு நகை பண்ணிப் போடுகிறேன்” என்று அவன் பாடுவதைக் கேளுங்கள்.

(குறிப்பு : கு. சின்னப்ப பாரதி)

கூடமேல கூட வெச்சு
கூடலூரு போற பொண்ணே
கூட வேலையானா உனக்கு
கொப்புப் பண்ணித் தாரேன்

சாட்டு மேல சாடு வெச்சு,
சமயவரம் போற பொண்ணே
சாட்டு வெலையானா உனக்கு
சரடு பண்ணித் தாரேன்

வட்டார வழக்கு : கொப்பு-மேல்காதில் அணியப்பெறும் நகை ; சரடு-கழுத்திலணியும் ஆபரணம் ; சாடு-கூடையை விட இருமடங்கு பெரிதாயுள்ள கூடை.

உதவியவர் : C. செல்லம்மாள
சேகரித்தவர் : கு. சின்னப்ப பாரதி

இடம் :
பொன்னேரிப்பட்டி,
சேலம் மாவட்டம்.