| 
 
  
 
 கணவனை இழந்தாள் 
 தாய், தகப்பன் இறந்து விட்டால், பிறரை தாய் தகப்பனென்று 
 பாவித்துக்கொள்ளச் சொல்லி மகளைத் தேற்றலாம். 
 “கணவனையிழந்தார்க்குக் காட்டுவதில்” என்றார் இளங்கோவடிகள். 
 இது மனித உறவு முறிவுகளில் மிகவும் அடிப்படையானது. இது தனிப்பட்ட உணர்ச்சி வற்றிவிடுவது 
 மட்டுமல்ல. கணவனிறந்து, ஆண் சந்ததியுமில்லாது போனால் அவளுக்குப் புகலிடம் இன்றிப் 
 போய்விடும். அவளுடைய மைத்துனர்கள்  “சோறும், துணியும்” வாங்கிக் கொள்ளத் தானம் 
 கொடுப்பார்கள். பிறந்த வீட்டிலோ, அண்ணன் தம்பியர் மனைவிமாரது ஆதிக்கம் ஓங்கியிருக்கும். 
 அங்கும் அமைதியாக வாழ முடியாது. ஆகவே தினசரி வாழ்க்கையிலேயே சுதந்திரமிழந்து பிறரை 
 அண்டி வாழவேண்டிய நிலைமை தோன்றிவிடும்.
 கணவன் சாவினால் ஏற்படும் தனிமையுணர்வு, அன்புடையவன்
 பிரிந்தான் என்ற எண்ணத்தால் மட்டும் ஏற்படுவதல்ல. பெண்ணினம் சமூகக் கொடுமைக்கு உள்ளாகி 
 வாழ்க்கை முழுவதும் நைந்து சாக வேண்டியிருப்பதை எதிர்பார்த்து எழும் வேதனைக் குரலும் 
 ஆகும். தனது நிகழ்கால வாழ்க்கை கவிழ்ந்து வருங்காலத்தில் எண்ணற்ற துன்பங்களை எதிர்நோக்கும் 
 குழந்தையற்ற ஒரு பெண் தன் கணவன் இறந்ததும் அழுகிறாள். அவளுடைய ஒப்பாரி இது. 
  
 தோணி வருகுதுண்ணு 
 துறைமுகமே காத்திருந்தேன் 
 தோணி கவுந்திருச்சே 
 துறைமுகமே ஆசையில்ல 
 கப்பல் வருகுதுண்ணு-நான் 
 கடற்கரையே காத்திருந்தேன் 
 கப்பல் கவுந்திருச்சே 
 கடற்கரையே ஆசையில்ல 
 கொச்சி மலையாளம் 
 கொடி படரும் குத்தாலம் 
 கொடிபடர்ந்து என்ன செய்ய 
 என் குணமுடையார் இல்லாமே 
 மஞ்சி மலையாளம் 
 மா படரும் குத்தாலம் 
 மா படர்ந்து என்ன செய்ய 
 மதிப்புடையார் இல்லாம
 
  
  |