| 
 
  
 
 தாலாட்டு 
 தாயின் கனவுகள் 
 
  பின் வரும் தாலாட்டுப் பாடல்கள் நெல்லை 
 மாவட்டத்திலுள்ள சிவகிரி முதல் குற்றாலம் வரையுள்ள பகுதிகளில் பாடப்படுகிறது. இந்நிலப் 
 பரப்பு செழிப்பான நன்செய்ப் பிரதேசம் ஆகும். பல சிற்றாறுகள் இந்நிலப் பகுதியை வளப்படுத்துகின்றன. 
 இப்பாடல்கள் நில வளத்தால் உழவனுக்கு ஏற்படும் பெருமிதத்தைச் சொல்லுகிறது. மலை சார்ந்த 
 இப்பகுதியில் பல மலைக் கோயில்கள் உள்ளன. குறிஞ்சித் தெய்வமான வேலன் வள்ளி, தெய்வயானையோடு 
 பல சிற்றூர்களில் கோயில் கொண்டிருக்கிறான். இப்பகுதியிலுள்ள நிலத்தின் வளத்தைத் 
 தன் குழந்தைக்கு எடுத்துச் சொல்லுகிறாள் தாய். மலையில் விளையும் பொருள்களான ஏலக்காயும், 
 ஜாதிக்காயும், அவனுடைய மூத்த மாமன் கொல்லையில் விளைகின்றனவாம். மாமன் பெருமை புதிய 
 முறையில் சொல்லப்படுகிறது. மருதமும், குறிஞ்சியும், இயற்கையில் தம்முள் மயங்கி இருவகை 
 நிலங்களின் விளை பொருள்களை யெல்லாம் தன் செல்வ மகனுக்கு அளிப்பதாகத் தாய் கனவு காண்கிறாள். 
 
	
		
			|   | 
			ஆராரோ, ஆரிரரோ 
 			மலட்டாறு பெருகிவர, 
 			மாதுளையும் பூச்சொரிய, 
 			புரட்டாசி மாதம் 
 			பிறந்த புனக் கிளியோ 
 			அஞ்சு தலம் ரோடாம்! 
 			அரிய தலம் குத்தாலம்! 
 			சித்திரத் தேர் ஓடுதில்ல ! 
 			சிவ சங்கரனார் கோயிலுல! 
 			காடெல்லாம் பிச்சி! 
 			கரையெல்லாம் செண்பகப்பூ 
 			நாடெல்லாம் மணக்குதில்ல! 
 			நல்ல மகன் போற பாதை. | 
		 
	 
	 
   
     |