பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 38 -

வீணைத் தலைவன் சொன்ன காம்பீர நாட்டுச் செய்தி

வேறு

89. நந்துகாம் பீரநாட்டி னகருங் காம்பீர மென்னு
  நந்தன ராசன் றேவி நாமந் தாரணியாம் புத்திரி
  கந்தமார் திரிபுவ னாரதி கைவீணை யதனிற் றோற்று
  என்தம ரோடுங் கூட வெங்களூர்க் கேறச் சென்றோம்.

காம்பீர நாட்டு மன்னன் நந்தன்.  அவன் தேவி தாரணியாவள்.  அவர்கள் புத்திரி திரிபுவனாரதி என்பாள்.  யாங்கள் அனைவரும் அவளுடைய வீணா சுயம்வரத்திற்குச் சென்று தோல்வியுற்றோ மாதலால் எங்கள் ஊருக்குப் போகின்றோம் என்றான்.       (16)

திரிபுவனாரதியை வீணையினால் வென்று
நாககுமாரன் நன்மணங் கொள்ளல்

90. வெற்றிவேற் குமரன் கேட்டு வியாள னுந் தானுஞ் சென்று
  விற்புரு வதனத் தாளை வீணையின் வென்று கொண்டு
  கற்புடை யவடன் காமக் கடலிடை நீந்து நாளில்
  உற்றதோர் வணிக னைக்கண் டுவந்ததி சயத்தைக் கேட்டான்.

அச்செய்தியைக் கேட்ட நாககுமாரன் துட்டவாக்கியனை அவ்விடத்தே நிறுத்தித் தானும் வியாளனும் விரைந்து ஏகி, வீணைப் போரில் திரிபுவனாரதியை வென்றான்.  அவளைத் திருமணம் செய்து கொண்டு, அவளோடு இனிது இன்பந்துய்த்து வருநாளில், வேற்று நாட்டு வாணிகன் ஒருவன் அவ்வீதி வழியாய் வந்து கொண்டிருந்தான்.  நாககுமாரன் மகிழ்ந்து அவனை நோக்கி, ‘வணிகரே நீவிர் போய் வரும் நாடுகளில் யாதேனும் அதிசய நிகழ்ச்சியுண்டோ?‘ எனக் கேட்டான்.  (17)

வேற்றுநாட்டு வணிகன் சொன்ன அற்புதச் செய்தி

91. தீதில்பூந் திலக மென்னுஞ் சினாலய மதனின் முன்னிற்
  சோதிமிக் கிரணந் தோன்றுஞ் சூரிய னுச்சி காலம்
  ஓதிய குரல னாகி யொருவனின் றலறு கின்றான்
  ஏதுவென் றறியே னென்றா னெரிமணிக் கடகக் கையான்.

அவ் வணிகன், ‘ஐயா! இரம்மியகம் என்னும் காட்டிலே திரிசங்க மென்னும் மலையின் ‘பூமிதிலகம்‘ என்னும் ஓர் ஆலயமிருக்கிறது.  நாடோறும் வெங்கதிர் வெதுப்பும் நண்பகல் உச்சிப் பொழுதிலே, அதன்முன் ஒருவன் வந்து கூக்குரலிட்டுக் கொண்டு வருகிறான்.  யான் இன்னதென்று அறியேன் என்றான்.                            (18)