பக்கம் எண் :

27

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி

நபியவர்களின் வரலாற்றுப் பகுதி

இருளை அகற்றிய இன்னொளிச் செல்வர

நபீஸா தூது செல்லல்

 

நபிஸாவும் கதிஜா வின்பால்
     நல்லொளி மணியே! நீதான்
அபிலாசை யுற்ற தைப்போல்
     அடைவாய்என் றாரே நெஞ்சே


தூய்மைசேர் முத்தே! அன்பால்
     துலங்கிடும் ஒளிவி ளக்கே
வாய்மைசேர் மாணிக் கத்தை
     மகிழ்வுடன் பெறுவாய் என்றார்


அவ்வாறே முகம்ம தின்பால்
     அணுகி‘ந பீஸா’ வும்தான்
பௌவிய மாக மன்றல்
     செய்தியைப் பகர்ந்தார் நெஞ்சே


தனிமையாய் உள்ள நீங்கள்
     தக்கதோர் துணையைக் கொண்டே
இனிமையாய் வாழ்வீ ரென்றும்
     இயம்பிட லானார் நெஞ்சே


அவ்வுரை கேட்ட வள்ளல்
     அறைந்தநல் மொழியும் என்னே
செவ்விய உரைய தைத்தான்
     செப்பிடக் கேட்பாய் நெஞ்சே


தந்தையும் தாயும் இல்லேன்
     தரணியில் வளமும் இல்லேன்
என்றனை ஏற்போ ருண்டோ?
     என்றவர் சொன்னார் நெஞ்சே


உறுதுணை ஏதும் இல்லேன்
     உடன்பிறப் பொன்றும் இல்லேன்
சிறுகுடில் கூட இல்லேன்
     சிறியேன்யான் என்றார் நெஞ்சே


தரணியில் துணைக ளின்றி
     தனிமையின் துணையால் வாழும்
ஒருவன்யான் என்றே அண்ணல்
     உரைத்திட லானார் நெஞ்சே


செவ்விய வாய்ப்பில் லாஎன்
     சிந்தையில் மணத்தின் எண்ணம்
எவ்விதம் எழுமோ என்றும்
     எடுத்துரைத் தாரே நெஞ்சே


வெள்ளைஉள் ளத்தால் அண்ணல்
     விளக்கிய மொழியைக் கேட்டே
உள்ளத்தில் நபிஸா கொண்ட
     உருக்கமும் என்னே நெஞ்சே


அண்ணலின் எளிமை வார்த்தை
     அன்னவர் மனத்தை ஈர்த்துக்
கண்களைக் கலங்க வைத்த
     காட்சியும் என்னே நெஞ்சே


அண்ணலிவ் வாறு சொல்ல
     அறிவுறு நபிஸா வும்தான்
எண்ணிய வற்றக் கூற
     எழுந்திட லானார் நெஞ்சே


நல்லஇச் சமயந் தன்னில்
     நபிஸாவும் கொண்டு வந்த
நல்மணச் செய்தி தன்னை
     நயமுடன் உரைப்ப தானார்


பெருங்குடி, அழகு வாய்ந்த
     பெண்மணி ஒருவர் உம்மைத்
திருமணங் கொள்ள வும்தான்
     சிந்தைகொண் டுள்ளார் என்றார்


உரிமைகொள் மணத்தின் மூலம்
     உமையவர் நாடு கின்றார்
விரைவின்றி விடையி தற்கு
     விளம்புக! என்றார் நெஞ்சே


என்னையும் விரும்பி ஏற்க
     எண்ணிடும் நல்லார் யாரோ?
அன்னவர் பெயரைச் சொல்க!
     என்றவர் அறைந்தார் நெஞ்சே


அவ்வித எண்ணங் கொண்ட
     அணங்கும்நம் நாட்டில் உண்டோ
எவ்விதம் உண்மை? என்றே
     இயம்பிட லானார் நெஞ்சே


இளவலிவ் வாறு கேட்க
     இனியநற் றூதாய்ச் சென்ற
களங்கமில் நபிஸா வும்தான்
     களிப்புற லானார் நெஞ்சே

பாருக்கோர் பெண்வி ளக்காய்
     பண்பொளி பாய்ச்ச வந்தார்
சீர்மைசேர் பெயரைச் சொல்லச்
     சிந்தனை உண்டோ? நெஞ்சே


உலகத்தோர் செவிக ளுக்கே
     உவப்புடன் இன்ப மூட்டும்
நலமுடைப் பெயரைச் சொல்ல
     நாணிடு வாரோ? நெஞ்சே


சொல்லிடும் போதே தேனைப்
     பாய்ச்சிடும் தூய தான
நல்லஅப் பெயரச் சொல்ல
     நாதுடிக் காதோ? நெஞ்சே


அப்பெரும் பெயரைக் கேட்க
     அண்ணலும் ஆவல் கொண்டே
எப்பொழு தியம்பு வாரோ
     என்றிருந் தாரே நெஞ்சே


அழகதும் அறிவும் வாய்ந்த
     அன்புடை முஹம்ம தே!அவ்
வெழிலுடைப் பெயரைச் சொல்வேன்
     கேட்பீரென் றியம்ப லானார்


அந்தமில் அழகு வாய்ந்த
     அருங்குண ‘கதிஜா’ உம்மை
அந்தமாய் ஏற்க வந்தார்;
     அல்லலேன்? என்றார் நெஞ்சே


அரபுதன் செல்வி யான
     அன்புறு கதிஜா உம்மைத்
தருணமாய் விரும்பும் போது
     தயக்கமேன்? என்றார் நெஞ்சே


செல்வத்தில் சிறந்தி ருந்த
     செல்வியின் எண்ணம் பற்றி
எல்லையில் வியப்பில் அண்ணல்
     இருந்திட லானார் நெஞ்சே


கேட்டஅச் செய்தி யாலே
     கிளர்ந்தெழு உணர்வ டைந்து
வேட்கைதான் முகத்தில் ஓங்க
     விளங்கிட லானார் நெஞ்சே


மலர்முக கதிஜா வின்நல்
     மாணெழில் உளத்தில் தோன்ற
இளநகை யோடு வள்ளல்
     எழுந்ததும் சென்றார் நெஞ்சே


என்னுளம் நிறைந்தி ருக்கும்
     எனதுநற் பெரிய தந்தை
அன்புடை விடைதெ ரிந்தே
     அறைகின்றே னென்றார் நெஞ்சே


பெரியப்பா இடத்தில் அந்தப்
     பெருமணச் செய்தி சொல்ல
சரியென்றே அவரும் ஆங்கே
     சாற்றிட லானார் நெஞ்சே


அன்புறு மைந்தா! உம்மை
     அடைந்திட விரும்பு கின்ற
இன்புறு கதிஜா மாண்பை
     இயம்பிடக் கேட்பாய் என்றார்


அருளொடு பொருள்நி றைந்த
     அன்புறு கதிஜா தன்னைப்
பெருமையாய் அடையப் பல்லோர்
     பேசினர் என்றார் நெஞ்சே


அன்னவ ரெல்லாம் போக
     அன்புடன் உம்மைக் கொள்ள
எண்ணிய பேறு பற்றி
     என்சொல்வேன் என்றார் நெஞ்சே


கதிஜாவின் வீட்டின் முன்பு
     கணக்கற்றோர் காத்தி ருந்தும்
அதிர்ஷ்டம்உன் றனையே நோக்கி
     அடைந்ததே என்றார் நெஞ்சே


உன்னரும் பாதத் தின்கீழ்
     உயர்வுடை யாவும் ஈந்து
தன்னையும் தரநி னைத்தார்;
     தாங்குக! என்றார் நெஞ்சே


தூய்மையிற் சிறந்த அந்தத்
     தூயநற் கதிஜா உம்மை
வாய்மையாய் ஏற்றல் நல்ல
     வாய்ப்பதே என்றார் நெஞ்சே


தன்மன முழுமை யோடும்
     தனதரும் பெரிய தந்தை
நன்மன நிறைவி னோடும்
     நபிஸாவைக் கண்டார் நெஞ்சே


அன்புறு கதிஜா வுக்கே
     அரும்பெரும் கொடைய தாக
இன்புறும் இசைவுச் செய்தி
     ஈந்ததும் என்னே நெஞ்சே


நபிஸாஅக் கொடையை ஏற்று
     நல்லுளம் களிப்பி லாட
அபிலாசை வென்ற தென்றே
     அகமகிழ்ந் தாரே நெஞ்சே

உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்
     ஒப்பிலாச் செய்தி இன்ப
வெள்ளத்தில் மிதக்க வைத்த
     விந்தையும் என்னே நெஞ்சே


இன்பத்தைச் சுமந்து செல்லும்
     இணையிலாப் பெருமை போல
நன்மணச் செய்தி யோடு
     நபிஸாவும் சென்றார் நெஞ்சே


கேட்டவர் எல்லோ ருக்கும்
     கிளர்வுறு இன்ப மூட்டும்
வேட்கைசேர் செய்தி சொல்ல
     விரைந்தவர் சென்றார் நெஞ்சே


ஒப்புதல் செய்தி தன்னை
     உவப்புடன் ஏந்திச் சென்ற
அப்பெரும் நங்கை தன்னின்
     அகமதும் என்னே நெஞ்சே

உலகத்தின் வரலாற் றேட்டில்
     உயர்வுடன் பதிக்க வல்ல
நலமுடைச் செய்தி பற்றி
     நவில்வதும் எளிதோ! நெஞ்சே


மனத்தினும் கடிதாய் அந்த
     மணமதன் செய்தி தூக்கிக்
கணத்தினில் கதிஜா வின்நல்
     காதுக்கு விருந்த ளித்தார்


இணையிலா இன்பச் செய்தி
     இருசெவி புகுவ தற்குள்
துணைவர்தம் உருவம் நெஞ்சில்
     தோன்றிய தென்னே நெஞ்சே


சந்திர வதனம் அந்தச்
     சந்தோஷச் செய்தி கேட்டே
சுந்தர முற்ற அந்த
     சோபிதம் என்னே நெஞ்சே


ஒப்புதல் தந்தா ரென்ற
     உவப்புறு செய்தி கேட்டே
ஒப்பிலாத் தலைவி இந்த
     உலகையே மறந்தார் நெஞ்சே


பெறற்கரும் துணைவர் தம்மைப்
     பெற்றிடும் பேற்றை யெண்ணிப்
பறந்தவர் சென்றா ரென்றால்
     பகர்ந்திடும் நிலையோ! நெஞ்சே


எல்லையில் இன்பம் ஆமாம்!
     எங்குமே மகிழ்ச்சி வெள்ளம்
சொல்லுக்குள் அடங்க வொண்ணா
     சோபிதம் என்னே நெஞ்சே


கதிஜாவும் தங்கை யோடும்
     கனிவுடை நபிஸா வோடும்
அதிஇன்பங் கொண்டா ரென்றே
     அறைந்திட லாமோ? நெஞ்சே


அரிவையர் திலகம் கண்ட
     அற்புத ஆனந் தத்தை
உறவினர் கண்டு கண்டே
     உவந்திட லானார் நெஞ்சே